வெள்ளி, 17 டிசம்பர், 2010

அறிக்கையின் விளக்கம்


      உண்மை விளக்கம் பிரஸ் பதிப்பாசிரியரான தோழர் ஈ.வெ.கிருஷ்ணசாமி அவர்கள் மீதும், தோழர் ப.ஜீவானந்தம் அவர்கள் மீதும் காலஞ்சென்ற பகத்சிங்கால் எழுதப்பட்ட நான் ஏன் நாஸ்திகன் ஆனேன்? என்ற புஸ்தகத்தை முறையே பிரசுரித்ததற்காகவும், மொழி பெயர்த்த தற்காகவும் இந்தியன் பீனல் கோர்ட் 124ஏ செக்ஷன்படி ராஜ துவேஷக் குற்றம் சாட்டி கைதியாக்கி சிறையில் வைத்து வழக்குத் தொடர்ந்திருந்தது வாசகர்கள் அறிந்ததாகும்.
           அவ்வழக்கு மேல்கண்ட இரு தோழர்களாலும் ராஜ துவேஷத்தை உண்டாக்கவோ, அதைப் பிரச்சாரம் செய்யவோ எண்ணங் கொண்டு அப்புத்தகம் பிரசுரிக்கவில்லை என்று அரசாங்கத்திற்குத் தெரிவித்து ராஜதுவேஷம் என்று கருதத் தகுந்த காரியங்கள் பதிப்பிக்கப்பட்டு விட்டதற்காக மன்னிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டதின் பேரில் அரசாங்கத்தார் வழக்கை வாப்பீஸ் வாங்கிக் கொண்டு தோழர்கள் ஈ.வெ.கி., ப.ஜீ. அவர்களை விடுதலை செய்துவிட்டார்கள்.
                இந்தப்படி இந்த இரு தோழர்களும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு விடுதலையடைந் தார்கள் என்பதற்கு அவர்களே முழு ஜவாப்தாரிகள் அல்ல என்பதையும், பெரும்பான்மை யான அளவுக்கு நானே ஜவாப்தாரி என்பதையும் முதலில் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
இந்த மன்னிப்புக் கொடுக்கப்பட்டதும், அதை சர்க்கார் ஏற்றுக் கொண்டதும் ஆகிய இரண்டு காரியமும் மிகுதியும் இந்தக் கேசையே பொறுத்தது மாத்திரமல்ல என்பது இதில் முக்கிய விஷயமாகும். விளக்கமாக சொல்ல வேண்டுமானால் சுயமரியாதை இயக்கத்தைப் பற்றி சர்க்காரார் மனதில் எப்படியோ தப்பு அபிப்பிராயம் ஏற்பட்டு எப்படியாவது சுயமரியாதை இயக்கத்தை அடக்கி அழித்துவிட வேண்டும் என்று தீர்மானித்து விட்டார்கள் என்பதாக நான் கொஞ்ச நாளைக்கு முன்பே தெரிந்து கொண்டேன்.
                     அன்றியும் நான் ரஷியாவில் கொஞ்ச காலம் தாமதித்து அங்கு இருந்து திரும்பி வந்த பிறகு, என் விஷயத்தில் சர்க்கார் எனக்கு ரஷ்யாவில் இருந்து பணம் வருவதாகவும், நான் ரஷ்ய ஒற்றனென்றும் சந்தேகப்பட்டு, அதிக கவலை எடுத்து எனக்காக தனியாக ஒரு சுருக்கெழுத்து சி.ஐ.டி. சப்-இன்ஸ்பெக்டர் மாதம் 200 ரூபாய் செலவிலும், எனது தபால்களை எல்லாம், வருவதையும், போவதையும் இரகசியமாய் உடைத்துப் பார்ப்பதற்கென்று, ஒரு சி.ஐ.டி. சப்-இன்ஸ்பெக்டரும் என் வீட்டு வாசலிலும், ஆபீசு வாசலிலும், போலீஸ் சேவகர்களும், நான் செல்லுமிடங்களிளெல்லாம் என் பின் தொடர்ந்து எனது போக்குவரத்தை கவனிக்க சில போலீஸ் கான்ஸ்டபிள்கள் பின் தொடரவும் நியமிக்கப்பட்டு, அவர்கள் மூலம் சில அறிக்கை இடும் காரியங்கள் நடந்து கொண்டே இருந்தன. இன்னமும் இருந்து வருகின்றன.
               இவை தவிர, பல தடவை ஆபீசும், வீடுகளும் சோதனை இடப்பட்டதுடன், என்னுடன் நெருங்கிப் பழகுகின்றவர்களுக்கும் இம்மாதிரி கவனிப்பும், அவர்களது தபால்களை உடைத்துப் பார்த்தல் ஆகிய காரியங்களும் நடந்து வந்தன.உதாரணமாக, தோழர் சர்.ஆர்.கே.ஷண்முகம் அவர்களுடைய தபால்களைக்கூட சி.ஐ.டி. போலீசார் உடைத்துப் பார்த்து வந்திருக்கிறார்கள் என்றால் மற்றவர்கள் விஷயத்தைப் பற்றி எழுத வேண்டியதில்லை என்றே நினைக்கிறேன்.மற்றும் நான் மேல்நாட்டுச் சுற்றுப் பிரயாணத்தில் இருந்து வந்த பிறகு, தமிழ் ஜில்லாக்களில் சுமார் 175 சுயமரியாதைக் கிளைச் சங்கங்கள் பல பெயர்களின் பேரால் ஏற்பட்டு ஏதோ சிறிது வேலை செய்து வந்ததை, சர்க்கார் ஊ.ஐ.னு. இன்ஸ்பெக் டர்கள் ஆங்காங்கு சென்று அங்கத்தினர்கள் பயப்படும்படியான மாதிரியில் பல விசாரணைகள் வெளிப்படையாகவும், இரகசியமாகவும் நடத்தி தடபுடல் செய்ததின் மூலம் பல சங்கங்கள் பயந்து மூடப்பட்டும் யாதொரு வேலையும் செய்யாமலும் இருக்கவும் நேர்ந்து விட்டது.
இயக்க சம்பந்தமுள்ள பல பெரிய ஆட்கள் என்பவர்களும், சர்க்கார் உத்தியோகம் முதலியவைகளில் சம்பந்தமுள்ள சிலர்களும், இதை அறிந்து இயக்கத்திலிருந்தும், சங்கத்தி லிருந்தும் விலகிக் கொள்ளவும், பாராமுகமாய் இருக்கவும் ஆரம்பித்ததோடு சுயமரியாதை இயக்கம் ஆபத்தான இயக்கமென்று சொல்லவும் ஆரம்பித்துவிட்டார்கள்.
இவை ஒருபுறமிருக்க, இயக்கத்தில் கலந்து வேலை செய்துகொண்டு இருந்த தொண்டர்களில் பலர் தங்கள் உற்சாகத்தைக் காட்டிக் கொள்ளும் முறையில் தலைகால் தெரியாமல் வேகமாகப் பேசுவதும், பாடுவதும் அதைப் பார்க்க போலீசார் அங்கொன்றும் இங்கொன்றுமாக குறித்து சர்க்காருக்கு அனுப்பி நடவடிக்கை எடுத்துக் கொள்ளத் தூண்டுவதுமான காரியங்களும் எனது தகவலுக்கு அவ்வப்போது சில வந்து கொண்டே இருந்தது. அன்றியும் என் பேரிலும், என் தங்கை பேரிலும் இயக்கத்தை அடக்க வேண்டுமென்ற கருத்தோடு செய்ததாக எண்ணும்படி பல வழக்குகள் தொடுத்து காவல் தண்டனை, அபராதங்கள் முதலிய தண்டனைகளும் விதிக்கப்பட்டோம். இதனால் எல்லாம் நம்முடைய விரோதிகள் பலரும், இயக்கத்தில் பொறுப்பில்லாமல் கலந்து, விளம்பரம் பெற்று வாழ்ந்து வந்த சிலர் மாத்திரம், பேஷ் பேஷ் என்று நம்மை உற்சாகப் படுத்துகிற மாதிரியில் பேச முடிந்ததே ஒழிய, மற்றபடி இயக்கம் வளர்ச்சியடைய முடியாமல் போகவும், சர்க்காரின் கடுமையான அடக்குமுறைக்கு ஆளாகுமே என்கின்ற பயத்திற்கும் இடம் தந்ததால் இயக்கப் பிரமுகர்களில் இரண்டொருவர் யோசனைக்கு இணங்கி இதைப்பற்றி சர்க்காரிலேயே சில பொறுப்புள்ள அதிகாரிகளைக் கண்டு பேச வேண்டிய அவசியத்திற்கு உள்ளானேன்.
               அப்படிப் பேசியதில் எனக்கும் இரஷியாவுக்கும் பணப்போக்கு வரத்தோ, பிரச்சார சம்பந்தமோ ஏதும் இல்லையென்று விளக்க வேண்டி இருந்ததோடு சுயமரியாதை இயக்கம் சட்ட மறுப்பு இயக்க மல்லவென்றும், சர்க்காரோடு ஒத்து உழையா இயக்கமல்லவென்றும், சட்டத்தையும் சமாதானத்தையும் மதியாத இயக்கமல்லவென்றும் எடுத்துச் சொன்னதோடு அதன் ஆரம்பகால முதல் நாளது வரை பல சமயங்களில் வெளியிடப்பட்டும், பல மகாநாடுகளில் தீர்மானிக்கப்பட்டும் இருக்கும் வேலைத் திட்டம், தீர்மானங்கள் முதலியவைகள் எல்லாம் சட்ட வரம்பிற்கு உட்பட்டு நடத்தும் காரியங்களாகவேதான் இருந்து வருகிறதென்றும் விளக்கிக் காட்டினேன். மற்றும் சட்ட விரோதமாக அல்லது ராஜத்துவேஷம் உண்டு பண்ணுவதற்கு ஆக பதிப்பிக்கப்பட்டதென்றோ, பேசப்பட்ட தென்றோ ஏதாவது காட்டப்படுமானால் அதற்கு பதில் சொல்ல கடமைப்பட்டிருப்பதாகவும் ஒப்புக் கொண்டேன்.
           இந்த நிலைமையில் பிரஸ்தாப வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்கள் எனக்குக் காட்டப்பட்டன. அதைக் கண்ட பிறகு அது ராஜத் துவேஷமான விஷயம் என்று சர்க்கார் முடிவு செய்து விட்டார்கள் என்பதையும், அது எப்படியும் ராஜத் துவேஷமான விஷயம் என்று தீர்ப்புப் பெறும் என்பதையும் விவகாரம் பேசுவதில் பயன் ஏற்படாது என்பதையும் உணர்ந்தேன். உணர்ந்ததும் உடனே அதை மன்னித்து விடுங்கள் என்று சொல்லிவிட்டேன். அதிகாரி களும் அந்தப்படியே ஒப்புக் கொண்டார்கள். ஆகவே இந்த சம்பவமானது இயக்க சம்பந்தமாய் சர்க்காருக் குள்ள தப்பபிப்பிராயத்தை நீக்க வேண்டுமென்பதற்காகவே ஏற்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்ளவே இதை எழுதுகிறேன்.
               நம் இயக்கம் (சுயமரியாதை இயக்கம்) சமுகத் துறையில் உள்ள குறைகளை நிவர்த்திப்பதற்கென்றே ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வந்ததும், சர்க்கார் அதிகாரிகள் முதல் அனேக செல்வவான்களும் இயக்கத்தில் கலந்து வேலை செய்து வந்ததும் எவரும் அறியாத தல்ல. ஆனால், சிறிது காலம் சென்றபின் மக்களுக்குள்ள சமுதாயக் கொடுமை தீர வேண்டியது எவ்வளவு அவசியமோ அது போலவே மக்களுக்குள்ள பொருளாதாரக் கொடுமையும் தீர வேண்டியதும் மிகவும் அவசியமென்று கருதியதால், பொருளாதார சம்பந்தமாக நாம் சிறிது பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தோம், என்றாலும் அதன் பிறகே அரசாங்கத்தார் தப்பபிப்பிராயங் கொண்டு இயக்கத்தை அடக்க அடக்குமுறை பிரயோகம் ஆரம்பித்துவிட்டார்கள் என்று உணர்கிறேன். இதையேதான் அதிகாரிகள் முன்பும் தெரிவித்துக் கொண்டேன்.
                ஆனால், ஓர் அளவுக்கு சர்க்காருடன் ராஜி ஏற்படுத்திக் கொள்ளலாம் என்கின்ற ஆசையின் மீதே பொருளாதார விஷயத்தில சமதர்மக் கொள்கையை பிரச்சாரம் செய்வதில் சர்க்காருக்கு ஆட்சேபணை இல்லையென்றும், ஜாதி மத சம்பந்தமான விஷயங்களில் வேறு ஜாதி மதக்காரர்கள் மனம் புண்படும்படியோ அவமானம் ஏற்படும்படியோ என்று இல்லாமல் ஜாதி மதக் கண்டனங்கள் செய்து கொள்ளலாம் என்றும் முடிவுக்கு வந்தோம். சர்க்காரோடு இந்த மாதிரியான ஒரு சமாதான முடிவுக்கு வராத பட்சம் சர்க்காருக்கும் நமக்கும் வீண் தொந்தரவும் மனக்கசப்பும் ஏற்பட்டுத் தீரும் என்கின்ற நிலையில் மற்ற ஆதாரங்களும், முயற்சிகளும், நிலைமைகளும் இருந்ததால் நான் இந்த சமாதானத்துக்கு வரவேண்டிய தாயிற்று. ஆகவே இதன் பலன் என்னவானாலும் அதற்கு நானே பொறுப்பாளி என்றுதான் சொல்ல வேண்டும்.
              சில இளைஞர்களுக்கு இது கேவலமாகத் தோன்றலாம்; என்றாலும் நாம் இயக்க சம்பந்தமாக நமது கொள்கைகளிலோ திட்டங்களிலோ எதையும் விட்டுக் கொடுத்து சமாதானம் செய்து கொண்டதாக எனக்குப்படவில்லை; ஆதலால் யார் எப்படி நினைத்தாலும் நமக்கு ஒன்றும் முழுகிப் போய்விடாது என்று தைரியமாகச் சொல்லுகிறேன்.
சுயமரியாதை இயக்கம் சட்டவரம்புக்கு உட்பட்ட இயக்கம் என்பதையும், நாம் சட்ட வரம்புக்கு உட்பட்டு பிரச்சாரம் செய்கிறவர்கள் என்பதையும் ஈரோடு சுயமரியாதை இயக்கம், சமதர்மக் கட்சி வேலைத் திட்டத்திலேயே கடைசி பாராவில் தெளிவாய்க் காட்டியிருக்கிறோம்.
செங்கல்பட்டு மகாநாட்டின்போதும் இயக்க நோக்கம் வகுத்தபோது  நம் இயக்கம் சட்ட வரம்பிற்குட்பட்ட ஸ்தாபனம் என்றே குறிப்பு காட்டி இருக்கிறோம். மத்தியிலும் பல தடவையிலும் எனது வழக்கு ஸ்டேட்மெண்டிலும் குறிப்பு காட்டி இருக்கிறேன்.மற்றும் ஆரம்ப முதல் காங்கிரஸை எதிர்த்து வந்திருப்பதோடு தென்னாட்டில் காங்கிரசின் ஆதிக்கத்தை சிறிதாவது குறையும்படி செய்த பெருமைக்காக நம்மை நாமே பல தடவை பாராட்டிக் கொண்டே வந்திருக்கிறோம்.
இனியும் நாம் காங்கிரசை பார்ப்பனர் கோட்டையென்றும், அதன் செல்வாக்கு அழிக்கப்பட வேண்டும் என்பதையும் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகக் கருதிக் கொண்டும் இருக்கிறோம்.
இன்றும் அன்றாடம் நித்திய நடவடிக்கைகளில் காங்கிரசின் பேரால் நடக்கும் சூழ்ச்சிகளைக் கண்டு ஆத்திரம் காட்டி  அவ்வப்போது கண்டித்துக் கொண்டுதான் வந்திருக்கிறோம்.
                  சுயராஜ்ஜியம் என்பது அர்த்தமற்றதும், பாமரர்களை ஏமாற்றுவதுமான வார்த்தை என்றும், தேசாபிமானம் என்பதும், தேசியமென்பதும் சிலருக்கு வயிற்றுப் பிழைப்பு நாடகம் என்றும், யோக்கியப் பொறுப்பற்ற காரியம் என்றும் ஆரம்ப முதலே சொல்லிக் கொண்டு வந்திருக்கிறோம். இந்தியா பூராவுமே பகிஷ்கரித்த சைமன் கமிஷனைக்கூட வரவேற்கச் செய்து அக் கமிஷனுக்கு உண்மை தெரியச் செய்தோம். இந்தக் காரியங்களால் ஒரு கூட்டத்தாரால் நாம் தேசத் துரோகி சர்க்கார் தாசர் என்ற பெயரைக்கூட வாங்கினோம். இதனால் எல்லாம் கெட்டுப் போகாத, அழிந்து போகாத சுயமரியாதை இயக்கமும் அதன் பிரமுகர்களும், அதில் கலந்திருந்த தொண்டர்களும் இந்த அறிக்கையினாலோ, சர்க்காருடன் சமாதானம் செய்து கொண்டதாலோ அழிந்து போகும் என்று யாராவது நினைப்பார்களானால் அவர்களுக்கு சமாதானம் சொல்லிக் கொண்டு நேரத்தைக் கெடுத்துக் கொள்வதை விட சற்று பொறுமையாய் இருந்து பாருங்கள் என்று சொல்லிவிடுவது புத்திசாலித்தனமான காரியமாகு மென்றே நினைக்கிறேன்.சுதந்திர எண்ணம் தோன்றிய வாலிபர்கள் என்பவர்கள் என்னுடைய இந்த அபிப்பிராயத் துக் காக வெட்கப்படுவதாகக்கூடச் சொல்லலாம். இயக்கத்தில் இருப்பதே தங்கள் சுயமரியாதைக்கு அழகல்லவென்றும் சொல்லலாம். இதைப்பற்றி ஊரார் சிரிக்கிறார்கள் என்றும் பலர் சொல்லலாம். பலர் இயக்கத்தை விட்டுப் போய் விடுவதாகவும் சொல்லலாம்.இவை எல்லாம் எந்த - எப்படிப்பட்ட இயக்கத்துக்கும் ஒவ்வொரு சமயங்களில் இயற்கையேயாகும். பழைய வாலிபர்கள், ஆட்கள் கழிதலும் புதிய வாலிபர்கள் ஆட்கள் புகுதலும் குற்றமல்ல, கால இயற்கையேயாகும். அது மாத்திரமல்லாமல் இயக்கத்தில் முக்கியஸ்தர் களாக கருதப்பட்டு வந்தவர்களே இயக்கத்தையும் இயக்கத்தில் முக்கியமாய் வேலை செய்து கொண்டு இருப்பவர்களையும் குற்றம் சொல்லுவதும் இயற்கையேயாகும்.
            எந்த இயக்கத்தை எடுத்துக் கொண்டு பார்த்தாலும் அது விளங்கும்.  ஜஸ்டிஸ் கட்சியில் தாசானு தாசர்களாய் இருந்தவர்கள் இன்று அக் கட்சியை வைதுக் கொண்டு அழிக்க முற்பட்டுக் கொண்டு திரிவது நமக்குத் தெரியவில்லையா? காங்கிரசில் தாசானுதாசர்களாய்... காந்தியாருக்குத் தாசானுதாசர்களாய் இருந்தவர்கள் காங்கிரசை வைதுக் கொண்டும், காந்தியாரை வைதுக்கொண்டும் இவை ஒழிந்தாலொழிய நாட்டுக்கு சேமமில்லை என்று சொல்லுகின்றவர் களையும் நாம் பார்க்கவில்லையா? பெசண்டு அம்மையாரை குருவாகவும், தெய்வமாகவும் கொண்டு அந்த ஸ்தாபனத்தைத் தெய்விக ஸ்தாபனமாகவும் கொண்டாடியவர்கள் இன்று அந்த அம்மையாரையும், அந்த ஸ்தாபனத்தையும் பயனற்றது என்றும் ஹம்பக் என்றும் சொல்லுகின்றதை நாம் பார்க்கவில்லையா? மற்றும் சைவன் சைவ மதத்தையே வைவதும் விட்டுப் போவதும், வைணவன் வைணவ மதத்தையே வைவதும், விட்டுப் போவதும், கத்தோலிக்கன் கத்தோலிக்க மதத்தையே வைவதும், விட்டுப் போவதும்,  முஸ்லிம் முஸ்லிம் மதத்தையே வைவதும், விட்டுப் போவதும் இவற்றிற்கெல்லாம் புது ஆட்கள் வந்து சேர்ந்து கொண்டு இருப்பதும் ஆன காரியங்களை தெய்வத் தன்மை பொருந்திய மத விஷயங்களில்கூட நாம் தாராளமாய் தினமும் பார்த்துவர வில்லையா? ஆகவே இவற்றாலெல்லாம் ஸ்தாபனங்கள் ஆடிப்போகும் என்று கருதுவது அனுபவ ஆராய்ச்சி யின்மையே ஆகும். எவ்வித மாறுதலும், இறக்கமும், ஏற்றமும், பிற்போக்கும் முற்போக்குமான விஷயமாய் இருந்தாலும் திடமான மனதுடன் உண்மை யான முடிவுடன் ஏற்பட்டதனால் ஒற்றை ஆளாயிருந்தாலும்கூட ஒரு நாளும் ஆடிப் போகாது என்பது உறுதி.
                ஆனால் ஊரார் என்ன சொல்லுவார்கள், எதிரிகள் என்ன சொல்வார்கள் என்பதையே முக்கியக் குறிப்பாய் வைத்து, அதற்கு அடிமையாகி மாற்றங் கள் செய்வதனால் மாத்திரம் அவற்றிற்கு அதிக ஆயுள் இருக்குமென்று கருத முடியாதே தவிர மற்றபடி உண்மையும் துணிவும் உள்ள காரியத்தில் எவருக்கும் யாரும் பயப்பட வேண்டியதில்லை என்றே கருதுகிறேன்.
              ஆகவே இயக்க சம்பந்தமாகவும், திட்டங்கள் சம்பந்தமாகவும், வழக்கு சம்பந்தமாகவும் சர்க்கார் நிலைமை சம்பந்தமாகவும் ஏற்பட்டுள்ள நிலைமையையும், அவசியத்தையும் விளக்கவே இதை எழுதுகிறேன்.

குடிஅரசு - தலையங்கம் - 31.03.1935

சுயமரியாதை இயக்கம்

           சுயமரியாதை இயக்கத்தைப் பற்றி அதன் சமுதாய சம்பந்தமான கொள்கைகளின் எதிரிகளால் கிளப்பிவிடப்பட்ட பலவிதமான கற்பனைச் சேதிகளாலும், விஷமப் பிரச்சாரங்களாலும் பொது மக்களுக்குள் சில தப்பு அபிப்பிராயங்கள் பரவி வருவதாகத் தெரிகின்றது.இதைப்பற்றி பல சமயங்களில் நாம் பொது ஜனங்களுக்கு விளக்கி இருந்தும் சில பகுதிகளில் அவ்வித தப்பு அபிப்பிராயங்கள் மாறியதாகத் தெரியவில்லை. ஆதலால், முன்பு விளக்கியவை களையே மறுபடியும் விளக்க வேண்டியிருக்கிறது.
சுயமரியாதை இயக்கத்தின் முக்கியமான கருத்தெல்லாம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பெண்களுக்கும், ஏழை மக்களுக்கும் நன்மை செய்வதற்கு உழைப்பதேயாகும். அதாவது அவர்களை தற்போது இருக்கும் கஷ்டமான நிலையிலிருந்து விடுவித்து சமுகத் துறையிலும் பொருளாதாரத் துறையிலும் சமத்துவமாக வாழச் செய்ய வேண்டுமென்பதே.
இந்தக் கருத்து வெற்றி பெற வேண்டுமானால் அரசியல், சமுதாய இயல், பொருளாதார இயல் ஆகிய மூன்று துறைகளிலும் கவலை எடுத்து உழைத்து வந்தாலொழிய பயனேற்படாது. ஆதலால் சுயமரியாதை இயக்கமானது முக்கியமாய் இத்துறைகளில் உழைத்து வரவேண்டியதாகிறது.
          எனவே, இம்மூன்றுத் துறை உழைப்பிலும் இயக்கத்தின் திட்டம் என்ன என்பதை ஒருவாறு பொது ஜனங்களுக்கும், அரசாங்கத்திற்கும், இயக்கத்தைக் குறை கூறுகின்ற நண்பர்களுக்கும் விளங்குவதற்காக கீழே விவரிக்கின்றேன்.

அரசியல்

    சுயமரியாதை இயக்கம் ஆரம்ப காலத்தில் அரசியல் துறையில் பிரவேசிக்கக் கூடாது என்கின்ற ஓர் அபிப்பிராயத்தைக் கொண்டிருந்தபோதிலும்,   அரசியலின்  பேரால்  காங்கிரஸ்  என்னும்  ஒரு ஸ்தாபனத்தை  பார்ப்பனர்கள் கைப்பற்றி அதைத் தங்கள் ஆதிக்கத்திற்கு அனுகூலமான ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டு வந்து இந்நாட்டில் எவ்விதமான சமுதாய சீர்திருத்தமும், பொருளாதார சீர்திருத்தமும் ஏற்பட முடியாமல் அவ்விரண்டுக்கும் முட்டுக்கட்டையாகவே இருந்து வந்ததால், குறிப்பாகவும், தெளிவாகவும் சொல்ல வேண்டுமானால் காங்கிரசை சுயமரியாதைக் கொள்கைகள் முழுவதற்குமே விரோத மாக வேலை செய்வதற்கே பயன்படுத்தி வந்ததால், அப்படிப்பட்ட காங்கிரசை எதிர்க்க வேண்டியதும், அதன் ஆதிக்கம் குறைக்கப்பட வேண்டியதற்கு எவ்வித முறைமையும் கையாள வேண்டியதும் அவசியம் என்னும் தன்மையில் அரசாங்கத்துடன் ஒத்துழைப்பது அவசியமானால் அந்தப்படியும் செய்வது என்றும் கருதியும் வந்திருக்கிறது என்பதோடு இனியும் அந்தக் கருத்தையே கொண்டிருக்கிறது.
        ஆதலால் சுயமரியாதை இயக்கம் அரசியலில் பிரவேசிக்கிறது என்று  சொல்லப்படுமானால், பார்ப்பன ஆதிக்கத்தைக் குறைப்பதற் காகவும் காங்கிரசை - பார்ப்பனர்கள் சுயமரியாதை இயக்கத்திற்கு விரோதமாய் உபயோகப்படுத்தி பயன் பெறாமல் இருப்பதற்காக வுமே ஒழிய, மற்றபடி அரசாங்க சட்டதிட்டங்களை எதிர்க்கவோ அவற்றிற்கு மாறாக நடக்கவோ என்பதற்காக அல்லவென்று தெரிவித்துக் கொள்ளுகிறோம். இதே அபிப்பிராயத்தை இதற்கு முன்னும் பல தடவை தெரியப்படுத்தியுமிருக்கிறோம்.அன்றியும், சுயமரியாதை இயக்கக் கொள்கைகள் பல அமலுக்கு வர வேண்டுமானால் அரசாங்கத்தின் மூலம் பல சட்டத் திட்டங்கள் ஏற்பட வேண்டியிருப்பதால் அதை உத்தேசித்தும் அரசியலில் தலையிட வேண்டியது அவசியமாகிறது.
ஆகவே சுயமரியாதை இயக்கம் ஏதாவது எப்போதாவது அரசியலில் தலையிட்டது என்று சொல்ல வேண்டிவருமானால் அரசாங்க சட்டத் திட்டங்களை மீறவோ, அவைகளுக்கு இடையூறு உண்டாக்கவோ அல்ல என்பதை அறிய வேண்டுகிறேன்.
பொருளியல் நாட்டு மக்களின் பொது நலத்துக்கும், ஏழை மக்களின் வாழ்க்கை உயர்விற்கும், பொருளாதார நிலையை விருத்தி செய்து அது எல்லா மக்களுக்கும் ஓர் அளவுக்கான சமமாய் பரவப்படும் படியாயும், ஒரே கையில் ஏராளமாய் குவியாமலும் பார்த்துக் கொள்ள வேண்டியது முக்கியமானதும், அவசியமானதுமான காரியமாகும். ஆதலால், அந்த அளவுக்கு பயன் ஏற்படும்படி செய்ய வியாபாரம், லேவாதேவி, விவசாயம் முதலிய துறைகளில் சில மாற்றம் செய்ய வேண்டியது அவசியம் என்பது யாவரும் ஒப்புக்கொள்ள தக்கதாகும்.
அப்படிச் செய்வதிலும் பலாத்காரம் செய்வதோ, திடீரென்று தலைகீழ் புரட்சியான காரியங்களால் மனித சமுகத்தில் பயமும், அதிருப்தியும், சமாதான பங்கமும் ஏற்படும்படிச் செய்து சட்டம், சமாதானம் சீர்குலையும்படி செய்வதோ ஆகிய காரியங்கள் இல்லாமல் பொதுஜன உபயோககரமான தொழிற்சாலைகள், வியாபாரங்கள், லேவாதேவி முதலான காரியங்களை அரசாங்க நிர்வாகத்திற்குள்ளாகவே கொண்டு வரும்படி செய்வதும் அரசாங்க நேர்பார்வை நிர்வாகத்திற்குட்பட்ட கூட்டுறவு முறையின் கீழ் அவை நடைபெறும்படி செய்து லாப நஷ்டங்கள் எல்லா மக்களுக்கும் சமமாய் இருக்கும்படி செய்வது முதலான சமதர்ம கொள்கையே இயக்கத்தின் பொருளாதாரத் தத்துவமாகும்.

 
சமுக இயல்

        மக்கள் அரசியலிலாகட்டும், பொருள் இயலிலாகட்டும் கீழ்மைப்பட்டும், இழிவுபடுத்தப்பட்டும் கிடப்பதற்கு சமுதாயத்துறையிலுள்ள பழக்க வழக்கங்களும், மதத் துறையிலுள்ள பேத உணர்ச்சிகளும், பிரிவினைகளும் பெரியதொரு அளவுக்குக் காரணமாய் இருப்பதால் ஜாதி மத சம்பந்தமான மூடக்கட்டுப்பாடுகளும், குருட்டு நம்பிக்கைகளும் ஒழிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும். இதை சுயமரியாதை இயக்கம் ஆதியிலிருந்தே வற்புறுத்தி வந்திருக்கிறது.
        ஆகவே, இந்தக் காரியங்கள் செய்வதற்கு வகுப்பு பேதங்கள், ஜாதி பேதங்கள் ஆகியவை களை அறவே ஒழிக்க முயற்சிப்பதும், ஜாதி வகுப்பு முதலியவைகளுக்கு ஆக்கமளிக்கும் மதங்களின் தன்மைகளை வெளிப்படுத்துவதும், நியாயமான முறைகளில் ஜாதி, வகுப்பு, மதம் ஆகியவைகளின் தத்துவங்களைக் கண்டிப்பதுமான காரியங்கள் செய்ய வேண்டியது அவசிய மென்றும் கருதுகிறது.
இப்படிச் செய்வதில் ஜாதி வகுப்புத் துவேஷங்களை உற்பத்தி செய்ய வேண்டுமென்பதோ, எந்த ஜாதி, எந்த மதம் ஆகியவற்றை சேர்ந்தவர்களுக்குள் துவேஷமோ, மனவருத்தமோ உண்டாகும்படி செய்வதோ அல்லது வேண்டுமென்றே அவமானப்படுத்துவது என்பதோ சிறிதும் லட்சியமல்ல என்பதோடு அதை ஒரு நாளும் இயக்கம் ஒப்புக் கொள்வதும் இல்லை.

முடிவு

எனவே சுயமரியாதை இயக்கத்தின் அரசியல் கொள்கையானது பார்ப்பன ஆதிக்கக் காங்கிரசை எதிர்ப்பதும், அதற்காக எவ்வளவு அவசியப்பட்டாலும் அவ்வளவு அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதும் சமுதாய இயலில் சாதிமத பேதங்களை அகற்றுவதும் மூட நம்பிக்கைகளை ஒழிப்பதும் பொருளியலில் சமதர்மமுமேயாகும். இவைகளைப் பற்றிய விஷயங்களை மக்களிடை பிரச்சாரம் செய்யவும், அமலுக்குக் கொண்டு வரச் செய்யவுமான காரியங்கள் நடைபெற வேண்டுமானால் காங்கிரஸ் ஆட்சியைவிட பிரிட்டிஷ் ஆட்சியே மேலானது என்பது என்னுடைய வெகு நாளைய அபிப்பிராயமாகும்.

குடிஅரசு - அறிக்கை - 10.03.1935

பம்பா நதி


சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் கண்டிப்பாக பம்பா நதியில் முழுக்குப் போடுவார்கள். பொதுவாகவே கோயிலையொட்டி இருக்கும் குளம் அல்லது நதிகளில் போடும் முழுக்குக்குப் பெயர் புண்ணிய முழுக்காம்.
கும்பகோணம் மகாமகத்தில் குளிப்பது என்பதுதான் பிரதானம்! 12 வருடம் செய்யும் பாபங்கள் ஒரே முழுக்கில் (Whole Sale) காலி!
இப்படி பாவங்களைத் தைரியமாகச் செய்யத் தூண்டும் ஏற்பாட்டுக்கு - லைசென்சுக்குப் பெயர்தான் கோயில் வழிபாடு - புண்ணிய முழுக்கு - இத்தியாதி... இத்தியாதி!
நாட்டில் குற்றங்கள் பெருகினால்தான் மதச்சம்பந்தப்பட்ட சமாச்சாரங்கள் அனைத்திற்கும் கொள்ளை லாபமும் - கொண்டாட்டமும்!
கடவுள்களே குற்றங்கள் செய்தார்கள் - கொலை செய்தார்கள் - கொள்ளை அடித்தார்கள் - கற்பழித்தார்கள் என்று எழுதிவைத் திருப்பதும் - அவற்றிற்காக விழாக்கள் கொண்டாடுவதும் எல்லாம் மக்கள் மத் தியில் ஒழுக்கம் பரவவேண்டும் என்பதற்காக அல்ல - மாறாகக் குற்றங்கள் பெருக வேண்டும்; அதன்மூலம் பிராயச்சித்தம் - கழுவாய், நேர்த்திக் கடன் என்று கூறி மக்களிடமிருந்து பணத்தைப் பிடுங்கலாம் - பொருளைச் சுரண்டலாம் என்பதுதான் இந்த முடிச்சுக்குள் பதுங்கி யிருக்கும் இரகசிய சதி!
இந்த வகையில் ஒவ் வொரு கோயிலுக்கும் - நதிகள் மற்றும் ஆறுகளுக் கும் தலப் புராணங்கள் எழுதி வைத்துள்ள சூழ்ச்சியும் இதுதான்.
காந்தியாரைச் சுட்டுக் கொன்றதற்கே காஞ்சி சங் கராச்சாரியார் சந்திரசேக ரேந்திர சரஸ்வதி என்ன கூறினார் தெரியுமா? தோஷங்களுக்கெல்லாம் பரி காரம் ஸ்நானம்தான் என்றார். இதன் பொருள் காந்தியாரை இந்து மத வெறியன் - பார்ப் பான் சுட்டுக் கொன் றதுகூட ஒரு குளியலில் (ஸ்நானத் தில்) தீர்ந்து போய்விடுமாம்.
அறிவியல் ரீதியில் உண்மை என்னவென்றால், இந்தப் புண்ணிய நதிகள் என்று விளம்பரப்படுத்தப்படு பவை எல்லாம் நோய் களின் ஒட்டுமொத்தமான உறைவிட மாகும். கிருமிகள் மொத்த குத்தகை எடுத்துக் கொண்டு குலாவும் இடமாகும்.
அய்யப்பப் பக்தர்கள் பம்பா நதியில் குளித்துக் குதித்தாடும் காட்சிகளை ஏடுகள் படம் எடுத்துப் போட்டுள்ளன.
இதனைப் பார்க்கும் பொழுது, படிக்கும்பொழுது நமது மனிதநேய நெஞ்சம் பதைபதைக்கிறது. பக்தி புத்தியைக் கெடுத்து உடல் நலனையும் கெடுத்துத் தொலைக்கிறதே என்கிற பரிதாபம்தான் பகுத்தறி வாளர்களுக்கு.
பம்பா நதிபற்றி இதற்கு முன் வந்த தகவல்களைக் கொஞ்சம் அறிவுத் தராசில் எடை போட்டுப் பார்க்கட்டும்!
நூறு லிட்டர் பம்பா நதியில் 3 லட்சம் எம்.பி.என். கோலிஃபார்ம் பாக்டீரியாக் கள் இருப்பதாகக் கண்டு பிடித்துச் சொல்லியுள்ளனர். 1999-2000 ஆம் ஆண்டில் இந்த அளவு 2 லட்சத்து 55,000 கிருமிகள் இருப்ப தாகக் கூறப்பட்டது. பெரும் பாலும் பம்பா நதி மனிதக் கழிவுகளால் பாழ்பட்டதாகக் கூறுகிறார்கள்.
இந்த வகை பாக்டீரியாக் கள் 500 என்ற அளவில் இருந்தாலே ஆபத்து - இரண்டரை லட்சம் என்கிற போது தலையே சுற்றுகிறது!
மனிதநேயப் பகுத்தறிவு வாதிகள் பரிதாபப்படுகிறார் கள் - பதறுகிறார்கள். மத வாதிகளோ சபாஷ் போட்டு, சுரண்டலுக்குக் கோணிப் பைகளைத் தயாராக வைத் துள்ளனர்!
- மயிலாடன்

வியாழன், 16 டிசம்பர், 2010

முகாம்கள் பல; குரல்கள் மட்டும் ஒன்று!


வேலூரில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் ஆரியர் - திராவிடர் போராட்டம்பற்றி வெளிப்படையாகக் கருத் துத் தெரிவித்தார். முரசொலியில் மனுதர்மத்துக்கு மறுபிறவி கிடையாது என்றும் எழுதிவிட்டார். இதன் பொருளைத் தமிழர்களைவிடப் பார்ப்பனர்கள் மிகத் தெளிவாகவே, நுட்பமாகவே புரிந்துகொண்டுள் ளார்கள்.
திருவாளர் சோ ராமசாமியிலிருந்து, ஞாநி - டி.கே. ரெங்கராசன் எம்.பி., வரை நூலிழை வேறுபாடு இல்லாமல் ஒட்டுமொத்தமாகக் குழுப் பாட்டு (கோரஸ்) பாடியுள்ளனர்.
ஒருவர் பச்சையான ஆர்.எஸ்.எஸ்.காரர் - இன் னொருவர் லவுகீக வேடம் தரிக்கும் ஆபத்தான பார்ப்பனர் - மூன்றாமவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்.
தனக்கு நெருக்கடி வரும்போதெல்லாம் ஜாதி யத்தை கருணாநிதி கையில் எடுத்துக்கொள்வார். இந்த உளுத்துப்போன பழைய விதண்டாவாதம் தமிழகத்தில் எடுபடாது என்றெல்லாம் பேச, எழுத ஆரம்பித்துள்ளனர்.
உண்மையிலேயே இவர்கள் எல்லாம் பார்ப்பன உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவர்கள்தானா?
நாட்டில் ஜாதியப் பிரச்சினை உணர்வு என்பது இல்லாது போய்விட்டதா? அதுவும் தேர்தலில் இந்தப் பிரச்சினைக்கு இடம் இல்லாமற் போய்விட்டதா? சோ போன்ற பார்ப்பனர்கள் ஆண்டுதோறும் ஆவணி அவிட்டம் அன்று பூணூலைப் புதுப்பிக்காமல்தான் இருக்கிறார்களா? இவர்கள் வீட்டில் பூணூல் கல்யாணம் நடக்காமல்தான் இருக்கிறதா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் அறிவு நாணயமான முறையில் பதில் சொல்லிவிட்டு, அடுத்த வார்த்தை பேசவேண்டும்.
இந்த 2010 இலும் மனுதர்ம சாஸ்திரத்துக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு, எழுதிக் கொண்டு இருக்கிறார் திருவாளர் சோ ராமசாமி. இதைப்பற்றி கல்கியில் பத்து வரி எழுதுவாரா திருவாளர் ஞாநி?
தனக்கு எதிரான சாட்சிப் பட்டியலில் இருந்தவர் களையெல்லாம் பிறழ் சாட்சியாக மாற்றிக் கொண்டு வருகிறாரே காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி - இதன் பின்னணிபற்றி ஓ பக்கங்களில் எழுத முன்வரட்டுமே பார்க்கலாம். டி.டி.கே. விஷயத்தில் சோ ராமசாமி என்ன எழுதுகிறாரோ - அதனைக் கடன் வாங்கித் தானே ஞாநி அய்யர்வாள் எழுதுகிறார்.
இராமாயணம் உள்ளிட்ட இதிகாசங்களும், புரா ணங்களும் ஆரியர் - திராவிடர் போராட்டத்தை மய்ய மாகப் புனையப்பட்டவை என்பதுதான் வரலாற்று ஆசிரியர்களின் கணிப்பாகும்.
ஆனால், தீக்கதிர் தீபாவளி மலர் வெளியிடுகிறதே - இதுகுறித்து திருவாளர் டி.கே. ரெங்கராசன் எம்.பி. என்ன கருதுகிறாரோ! இவையெல்லாம் உளுத்துப் போன பழைய குப்பை என்பது இந்தக் காம்ரேடின் கண்களுக்குத் தெரியாதோ!
இவர்கள் 1967 இல் தி.மு.க.வுடனும், சுதந்திராக் கட்சியுடனும் கூட்டணி வைத்துத் தேர்தலில் ஈடுபட்ட போது பூணூலைப் பிடித்துக் கொண்டு பிராமணர்களே தி.மு.க.வுக்கு ஓட்டுச் செய்யுங்கள் என்று சொன்ன போது, தோழர் பி. இராமமூர்த்தியோ மற்ற காம்ரேடு களோ தேர்தலில் இப்படிப் பச்சையாக ஜாதிய வாதத்தை முன் வைக்கக் கூடாது என்று சொன்ன துண்டா? ஆச்சாரியாரைக் கண்டித்ததுண்டா? தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறோம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் களுள் ஒருவரான சோம்நாத் சட்டர்ஜி தன் பேரன் பூணூல் கல்யாணத்துக்குப் பத்திரிகை அடித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக்கூட அழைப்புக் கொடுத்தாரே - ஊர் சிரித்தது எல்லாம் மறந்து போய்விட்டது என்று நினைப்பா?
பிராமணர் சங்கம் மாநாடுகளை நடத்துகிறதே - அந்தணர் ஆற்றிய அருந்தொண்டு என்று தொகுதி தொகுதியாக நூல்களை வெளியிடுகிறதே - அவற்றை சங்கராச்சாரியார் வெளியிட்டு, கடவுளுக்குமேலே பிராமணன் என்று முழங்கியபோது, இந்த முற்போக்குத் திலகங்களின் பேனாக்கள் எங்கே போய் ஒளிந்து கொண்டன?
தமிழ்நாடு சட்டப் பேரவையிலேயே இது சூத்திரர் களின் அரசு என்று பிரகடனப்படுத்தியவர் கலைஞர்.
அய்ந்தாவது முறையாக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த நிலையில் (1) அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை சட்டம் - 69 சதிவிகித அடிப்படையில் அதில் இட ஒதுக்கீடு - பயிற்சி (2) புராண தமிழ் வருடங் களைத் தூக்கி எறிந்து தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று சட்டம் (3) தமிழ் செம்மொழி அங்கீகாரம் (4) பெரியார் நினைவு சமத்துவப் புரங்கள் (5) தீட்சதர்களின் கைகளில் இருந்த சிதம்பரம் நடராஜன் கோயில் இந்து அறநிலையத் துறையின் கீழ் (6) வடலூர் சத்திய ஞான சபையிலிருந்து பார்ப்பனர் வெளியேற்றம் - இத்தியாதி நடவடிக்கைகள் பூணூல் கூட்டத்திற்கு நெரிகட்ட வைத்துவிட்டன. அந்தக் கோபத்தில்தான் எல்லா மூலைகளிலும் உள்ள பார்ப் பனர்களும் ஒன்று சேர்ந்து கலைஞர் மீது சேறு வாரி இறைக்கிறார்கள் என்பதைத் தமிழர்கள் உணர்வார் களாக!

கொல்லைப்புற வழியாகக் கொள்ளையோ, கொள்ளை!


சமூகநீதியை - போராடிப் பெற்ற இட ஒதுக்கீட்டை கீழ்வேலைகளில் இறங்கி வேரை வெட்டும் வேலையில் பார்ப்பன சக்திகள் இறங்கி இருப்பதை உணராவிட்டால், தடுக்காவிட்டால் ஒரு கையில் பெற்று இன்னொரு கையால் இழக்கும் பரிதாப நிலைக்குத் தள்ளப்படுவோம்.
இந்தச் சதிப் பின்னலுக்கு நீதிமன்றங்கள் கூடத் துணை போவது வெட்கக்கேடாகும்.
(1) எடுத்துக்காட்டாக மத்திய தேர்வாணையம் நடத்தும் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.எஃப்.எஸ். தேர்வுகளில் நடத்தப்படும் சட்டவிரோத செயலாகும்.
திறந்த போட்டி (Open Competition) தான் எடுத்த எடுப்பி லேயே பூர்த்தி செய்யப்படவேண்டும். அதிக மதிப்பெண்கள் பெறும் தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள், பிற்படுத்தப்பட்டோர், உயர்ஜாதியினர் போட்டியிடும் இடம் இது. இதுதான் சட்டத்தின் நிலை.
ஆனால், அண்மைக்காலமாக என்ன நடக்கிறது? திறந்த போட்டியில் அதிக மதிப்பெண் பெற்று இடம் பெற் றுள்ள தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோரை - தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக் கீட்டுக்குள் கொண்டு வந்து, ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட இடங்களில் இடம் பெற்றோர் வெளியேற்றப்படுகின்றனர்.
இந்த சட்ட விரோத செயலுக்கு உச்சநீதிமன்றம் துணை போயிற்று என்கிற அவலத்தை, அநீதியை எந்த விலை கொடுத்தேனும் தடுத்து நிறுத்தவேண்டும். கடந்த பல ஆண்டுகாலமாக மேற்கொள்ளப்பட்ட இத்தகைய சட்ட விரோத நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு எதுவாக இருக்க முடியும்?
(2) அய்.ஏ.எஸ்., தேர்வு முறையில் கொண்டுவரப் பட்டுள்ள மாற்றமாகும்.
இதுவரை முதல் நிலைத் தேர்வில் முதல் தாள் என்பது பொது அறிவு குறித்து இருக்கும். இரண்டாவது விருப்பப் பாடமாக இருந்து வந்தது. பொது அறிவுக்கு 150 மதிப் பெண்களும், விருப்பப் பாடத்துக்கு 300 மதிப்பெண்களும் அளிக்கப்பட்டு வந்தன.
விருப்பப் பாடம் என்கிற பொழுது, வரலாறு, பொரு ளியல், இலக்கியம், கால்நடை மருத்துவம், வேளாண்மை போன்ற 23 பாடங்களில் எதை வேண்டுமானாலும் தேர்ந் தெடுத்துக் கொள்ளலாம். இதன் காரணமாக அடித்தட்டு மக்கள் தாங்கள் பட்டப் படிப்பில் படித்த ஒரு பிரிவை எடுத்துக்கொண்டு தேர்வு எழுதிட வாய்ப்புக் கிடைத்தது - அதன்படி வெற்றி பெற்றும் வந்தனர்.
பொறுக்குமா பூணூல் கூட்டத்துக்கு? முதல்நிலைத் தேர்விலேயே (பிரிலிமினரி) இந்த அடித்தட்டு மக்களை அடித்துத் தூக்கி எறிந்துவிட்டால், இரண்டாவது கட்டத் தேர்வுக்கு (மெயின்) வர முடியாமல் ஆக்கிவிடலாமே என்ற சூழ்ச்சிப் பொறியை இப்பொழுது கொண்டுவந்துவிட்டனர்.
விருப்பப் பாடம் என்ற பகுதியை அகற்றிவிட்டு பொதுத் திறனறித் தேர்வுத் தாள்(General Aptitude Test) ஒன்றை அறிமுகப்படுத்திட உள்ளனர்.
வங்கித் தேர்வு போன்றவற்றில் கையாளப்படும் முறை இது.
கிராமப்புறத்து மாணவர்கள் தனிப் பயிற்சிகளில் சேர்ந்து படிப்பது, அதற்காகச் செலவு செய்வது என்பதெல் லாம் இயலாத காரியமாகும். அய்.அய்.டி., அய்.அய்.எம். போன்ற கல்வி நிறுவனங்களில் படித்துவரும் மாணவர் களால்தான் இந்தத் தேர்வுகளைச் சந்திக்க முடியும்.
கிராமச் சூழல், தக்க ஆசிரியர்கள் இல்லாமலும், சோத னைச் சாலை, நூலகம் போன்ற வசதிகள் இல்லாமலும் எப்படியோ படித்து வெளியில் வரும் மாணவர்கள், இந்தப் புதிய முறை தேர்வு எழுதி வெற்றி பெறுவது என்பது குதிரைக் கொம்பே!
கடந்த சில ஆண்டுகாலமாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் மத்திய தேர்வாணையத் தேர்வுகளில் பாராட்டத்தக்க அளவில் வெற்றி பெற்று வருகின்றனர். குறிப்பாக 2009 இல் நடைபெற்ற அய்.ஏ.எஸ்., தேர்வில் இந்தியா முழுமைக்கும் வெற்றி பெற்ற பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை 236; இதில் தமிழ்நாட்டுக்கு மட்டும் கிடைத்திட்ட இடங்கள் 95.
இந்த நிலையை வீழ்த்திடத்தான் சூழ்ச்சி வலையைப் பார்ப்பன ஆதிக்கச் சக்திகள் பின்னியுள்ளன.
ஏற்கெனவே கிராமப்புற, நகர்ப்புற மாணவர்கள் மத்தி யிலே இடைவெளி பெரிய அளவில் உள்ளது.
இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், இந்தத் திட்டம் அமல்படுத்தப்படுகிறது; சமூகநீதியாளர்கள் வீதிக்கு வந்து வீழ்த்தாவிட்டால் நாம் போராடிப் பெற்ற உரிமைகளுக்குப் பொருளே இல்லாமல் போய்விடும் - எச்சரிக்கை!
(3) தொடர்ந்து சமூகநீதியாளர்கள் போராடியதன் காரணமாக மண்டல் குழுப் பரிந்துரைகளில் ஒன்றான பிற்படுத்தப்பட்டோருக்கு கல்வியிலும் இட ஒதுக்கீடுக்கு வழி செய்யும் சட்டம் (93 ஆவது சட்டத் திருத்தம் - சரத்து 15(5)) இயற்றப்பட்டது. பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவிகிதத்தை ஒரே ஆண்டில் கொடுக்க முடியாது - ஆண்டு ஒன்றுக்கு 9 சதவிகிதமாக 3 ஆண்டுகளில் அளிக்கப்படும் என்றனர்; அதன் பிறகு மூன்று ஆண்டுகளில் முடியாது என்றனர்.
தாழ்த்தப்பட்டோரையும், பிற்படுத்தப்பட்டோரையும் பிரிக்கும் பிரித்தாளும் தந்திரத்தின் அடிப்படையில் தாழ்த் தப்பட்டோருக்கு மட்டும் தனியே மாநிலங்களவையின், கடைசிக் கூட்டத்தின் கடைசி நாளில் மசோதா ஒன்றை தாக்கல் செய்தனர் (2008 டிசம்பர் 23) எந்தவிதமான விவாதமின்றியே இரண்டே நிமிடங்களில் மசோதா நிறைவேற்றப்பட்டது.
அதில் என்ன கொடுமை தெரியுமா? முக்கியத்துவம் வாய்ந்த 47 கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு கிடை யாது என்ற விஷமத்தை சன்னமாக நுழைத்துவிட்டனர். இதனை எதிர்த்துத் திராவிடர் கழகம்தான் போராட்டம் நடத்தியது.
எது எதற்கெல்லாமோ நாடாளுமன்றத்தை முடக்கு பவர்கள் இந்தப் பிரச்சினையைக் கமுக்கமாகக் கையாண்ட விஷமத்தனத்தைக் கண்டு கொள்ளாதது ஏன்?
போராடிப் பெற்ற உரிமைகள் கொல்லைப்புற வழியாகக் கொள்ளை அடிக்கப்படுகின்றன - எச்சரிக்கை! எச்சரிக்கை!!