புதன், 15 ஜூன், 2011

சுவரெழுத்து புரட்சியாளர் சுவரெழுத்து சுப்பையா சிந்தனைப் பொறிகள்

பெரிய புராணம் படிக்காதே!
பெரியாரை மறக்காதே!

ஆரிய மாயையில் மயங்காதே!
அண்ணாவை என்றும் மறவாதே!

தலைவிதியை நம்பாதே!
தலைவர் காமராசரை மறவாதே!

கல்லைக் கண்டால் வணங்காதே!
பல்லைக் காட்டி பிழைக்காதே!

அரச மரத்தை சுற்றாதே!
அரசனாட்சியைப் போற்றாதே!

மடிசார் கட்டாதே!
மடிசஞ்சி ஆகாதே!

பஞ்சாங்கம் பார்க்காதே!
பஞ்சகச்சம் கட்டாதே!

கோமயம் குடிக்காதே!
சிவமயம் சொல்லாதே!

இதிகாசம் படிக்காதே!
மதுகஷாயம் குடிக்காதே!

யாகம் செய்து வீணனாகாதே!
தியாகம் செய்து வீரனாகு!

வறட்டுத் தத்துவம் போற்றாதே!
புரட்டு மகிமை ஏற்காதே!

காவடி எடுத்துத் கூத்தாடாதே!
கபாடி எடுத்துப் பாடி ஆடு!

நீர், தியாகய்யர் கீர்த்தனை பாடாதே!
சர்.தியாகராயர் கீர்த்தியினைப் பண்பாடு!

யாரிடமும் பக்தி செலுத்தாதே!
யாவரிடமும் மரியாதை செலுத்து!

மதஞ்சாதியை மதியாதே!
பாஞ்சாலியைத் துதியாதே!

உன்னை "இந்து" என்று சொல்லாதே!
தன்னை "இழி சாதி" என ஏற்காதே!

ஆண்டவா என்று வானத்தைப் பார்க்காதே!
ஆரியனை சாமிஎன்று மானத்தை இழக்காதே!

கோயிலைச் சுற்றாதே!
புகையிலை குதப்பாதே!

ஆளில்லா வீட்டில் நாயின் தேட்டைக்கு வழி வைக்காதே
அய்யா இல்லாத நாட்டில் ஆரியர் வேட்டைக்கு இடம் கொடாதே!

பல்லி மேலே விழுந்தால் பஞ்சாங்கம் பார்க்காதே!
சோற்றில் விழுந்தால் நஞ்சு அஞ்சாமல் தின்னாதே!

முகம் சிவக்க விவாதிக்கேதே!
அகம் சிலிர்க்கப் போதிப்பாய்!

பொன்னாபரனம் பூணாதே!
பெண்ணடிமை பேணாதே!

குலம் பாராதே!
குணம் பார்!

கோத்திரம் நோக்காதே!
நேத்திரம் நிகர் நேர்த்தி பார்!

சாத்திரம் பாராதே!
சித்திர நிகர் நேர்த்திப் பார்!

சாதியை கேளாதே!
செய்தியைக் கூர்ந்து கேள்!

வரதட்சனை வாங்காதே!
வாழ்வைப் பிரச்சினையாக்காதே!

ஜாதகப் பொருத்தம் தேடாதே!
மனப் பொறுத்தம் நாடு!

சடங்குகள் செய்யாதே!
இடங்குகள் பண்ணாதே!

தாலி கட்டாதே ---- பிறகு
மூளி ஆக்காதே!

மதம் மாறாதே! மனம் மாறு!
மனிதனாகத் தேறு!

பிண வாடையில் வளர்ந்த மதங்களை;
மண மேடையில் வக்கரிக்க விடாதே!

மாற்று! மனித மனதை மாற்று!
போற்று! மனித அறிவைப் போற்று!

சநாதனத்தை அழி!
ஜனநாயகத்தை ஒழி!

வைதீகத்தை வதை!
அய்தீகத்தை சிதை!

மதங்களை அதம் செய்!
மனிதர்களை இதம் செய்!

பொய்மறை சூழ்ச்சியைப் புதை!
மெய் மறை எழுச்சியை உரை!

பிடித்து வைத்தச் சாணி!
சாமி இல்லையென துணி!

அய்யப்பனை காலால் மிதி!
உன்னப்பனை மனதால் மதி!

கடவுளை அடியோடு மற!
மனிதனை அன்போடு நினை!

அகப் புரட்சியே ஆக்கம்!
பிறப் புரட்சிகள் மயக்கம்!
குறுகிய குணத்தை விடு!
முறுகிய கொள்கைப் பற்று!

ஆரியர் செய்திடும் மோசடி!
பெரியார் கருத்துரையா லடி!

குறிப்பு:
சுவரெழுத்து புரட்சியாளர்
சுவரெழுத்து சுப்பையா
சிந்தனைப் பொறிகள்
என்னும் தொகுப்பில் இருந்து.....

வியாழன், 9 ஜூன், 2011

இந்து முன்னணி எழுதிய தினமணி தலையங்கம்

குறிக்கோள் மாறக் கூடாது என்ற தலைப்பில் தினமணி ஏடு இன்று தலையங்கம் ஒன்றைத் தீட்டியுள் ளது. எழுதியது இந்து முன்னணி ராமகோபாலனா தினமணி வைத்திநாதய்யரா என்று சந்தேகப்படத் தேவையில்லை. இருவரும் ஆர்.எஸ்.எஸின் முகங்கள்தாம்.

சமச்சீர் கல்விபற்றி இந்து முன்னணி ராமகோ பாலய்யர் ஏற்கெனவே சொன்னவற்றை அப்படியே நகல் எடுத்துத்தான் தலையங்கமாக தினமணியில் தீட்டப் பட்டுள்ளது.

சமச்சீர் கல்வி என்ற பெயரில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாடலைப் புகுத்துவதையும், பகுத்தறிவுவாதம் என்கிற சாக்கில் திராவிட இயக்கக் கொள்கைகளையும், தலைவர்களையும் பற்றிய கருத்துக்களைத் திணிப்பதையும் நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாது.

பல கோடி ரூபாய்க்கான புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு, வீணாகி விட்டனவே என்று வேதனைப்படுவதைவிட, பிஞ்சு மனங்களில் விஷ விதைகள் தூவப்படாமல் காப்பாற்றப்பட்டதே என்று நாம் மகிழ்ச்சி அடைவதுதான் சரி என்று தினமணி தலையங்கம் கூறுகிறது.

சமச்சீர் கல்வி எதிர்க்கப்படுவதற்கான காரணம் இப்பொழுது வெளிச்சத்துக்கு வந்துவிடவில்லையா? ஆம் பூனைக்குட்டி வெளியில்வந்துவிட்டது. கலைஞர் அவர்கள் தலைசிறந்த படைப்பாளியில்லையா? எழுத்து லகில் அவருக்கென்று தனி சிம்மாசனம் இல்லையா? உரை நடை, கவிதை, சிறுகதை, புதினம், கவிதை என்று எழுத்துத் துறையில் சகல பரிமாணங்களிலும் முதிர்ச்சி பெற்ற எழுத்தாளர் இல்லையா? செம்மொழி குறித்து அவரால் எழுதப்பட்ட குறிக்கோள் பாடல் ஒன்று இடம் பெற்றது மாபெரும் குற்றமா?

பகுத்தறிவு வாதம் என்ற சாக்கில் திராவிட இயக்கக் கொள்கைகளையும், தலைவர்களையும் பற்றிய கருத்துக் களைத் திணிப்பதை நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாதாம்.

பகுத்தறிவு வாதம் என்பதே அவர்களின் கண்ணோட் டத்தில் குற்றமாகி விடுகிறது. மாணவர்களுக்கு எந்த வகையிலும் பகுத்தறிவுச் சிந்தனைகள் போய்ச் சேர்ந்துவிடக் கூடாது என்பதிலே ஒரு கூட்டம் எவ்வளவு உன்னிப்பாக இருக்கிறது என்பதை அறிய வேண்டும்.

மாணவர்களை கல்விக் கூடங்களுக்கு அனுப்புவதன் நோக்கம் வெறும் நெட்டுருப் போடத்தானா? அவர்களின் பகுத்தறிவை பட்டை தீட்டி கூர்மைப்படுத்துவதுதானே கல்வியின் நோக்கமாக இருக்க முடியும்.

திராவிட இயக்கத் தலைவர்கள் பற்றி பாட நூல்களில் இடம் பெற்றுள்ளதாம். அது ஒரு குற்றமாம். திராவிட இயக்கத் தலைவர் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா போன்ற தலைவர்கள்பற்றி தமிழ்நாட்டில் சொல்லிக் கொடுக்காமல் வேறு எங்குப் போய் சொல்லிக் கொடுக்க வேண்டுமாம்? இவர்களைப் பற்றி சொல்லிக் கொடுத்தால் பிஞ்சு மனங்களில் விஷ  விதைகள் தூவப்பட்டதாகப் பொருளா?

தந்தை பெரியார் அவர்களின் சமூகப் புரட்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மனிதாபிமானச் சிந்தனை களை அங்கீகரித்து அய்.நா. மன்றமே விருது அளித்து பாராட்டுகிறது. இந்திய அரசு சிறப்பு அஞ்சல் தலை வெளியிடுகிறது.

ஆனால் இவர்கள் மட்டும் பெரியார் அவர்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்களாம்.

பாடத் திட்டங்களில் கந்தபுராணம், திருவிளையாடல் புராணம், மகாபாரதம், இராமாயணம் முதலியவை சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும் என்பதுதான் இவர்களின் அந்தரங்கத் துடிதுடிப்பு!

தந்தையைக் கொன்று தாயைப் புணர்ந்த பார்ப்பனனுக்கு கடவுள் மோட்சம் கொடுத்ததையெல்லாம் (திருவிளையாடல் புராணம் மாபாதகம் தீர்த்தபடலம்) சொல்லிக் கொடுக்காமல், பக்தி தனிச் சொத்து; ஒழுக்கம் பொதுச் சொத்து! என்று சொன்ன பெரியாரின் கருத்துக்கள் பாட நூல்களில் இடம் பெறலாமா? அப்படி இடம் பெறுவது பிஞ்சு நெஞ்சங்களில் விஷ விதைகள் தூவுவதாகும் என்கிறது ஒரு கூட்டம். 

இன்றைக்கு தமிழ் நாட்டில் ஆட்சிப் பொறுப்பில் இருப்பது அண்ணா பெயரையும், திராவிட இனச் சுட்டுப் பெயரையும் (அண்ணா திமுக) கட்சியிலும் கொடியிலும் தாங்கிக் கொண்டிருக்கக் கூடியதுதானே!

அப்படிப்பட்ட ஆட்சிக்குத் திராவிட இயக்கத் தோற்றம், அதன் சமூக நீதிப் பயணம் பற்றியும் சொல்லிக் கொடுக்க விருப்பம் இல்லை - திராவிட இயக்கத் தலைவர்கள், பற்றி பாடத் திட்டங்களில் கண்டிப்பாக இடம் பெறக் கூடாது என்று கருதுகிறதா என்பதை வெளிப்படையாகத் தெரிவித்து விட வேண்டும்.

திராவிட இயக்கம் பேரால்  உள்ள, அண்ணாவின் பெயரால் உள்ள ஒரு கட்சியை அதற்கு எதிரான கொள்கை வழியில் திசை திருப்பித் தாங்கள் வசப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஒரு சூழ்ச்சி இருப்பதாகவே தெரிகிறது.

பார்ப்பனர் அல்லாதாரின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்துள்ள ஒரு கட்சி பார்ப்பனீயத்தை வளர்க்கும் வகையில் நடைபோடுகிறது என்ற எண்ணத்தைத்தான் பெரும்பான்மையான மக்களிடத்தில் இத்தகைய நடவடிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தும். எச்சரிக்கை!                                                                          ---------------------விடுதலை 09.06.2011