சனி, 27 ஏப்ரல், 2013

மே தினமும் திராவிடர் கழகமும



       சுயநலமும் தந்திரமுமே கருத்து ஆக, ஆணவப்போக்கில் முற்றிய அகங்காரமே செயல் ஆக பாடுபட்டுழைக்கும் பாட்டாளித் தோழர்களை பயப்படுத்தியும், மிரட்டியும் வேறு பாதை அறியாத செக்கு மாடுகளாகப் பழக்கி, வாழ்க்கையில் உடல் துன்பமேயறியாத உன்மத்தர்களாய், ஆண்டவனின் அவதாரங்களாய் இருந்த அரசர்களும், குட்டி ராஜாக்களும், ஆண்டவனோடு இரண்டறக் கலக்கும் அற்புதப் பணியை நடத்தி வைக்க, பகலிரவு என்பதைப் பாராமல் உழைக்கும் பண்புடையவர்களாய், அவனருளாலே அவனால் அனுப்பி வைக்கப்பட்ட மத குருமார்களும், அவர்களுக்குத் துணை செய்ய அவனருளால் அவன் இச்சையின்படி சேர்த்து வைக்கப்பட்ட கன்னிமாடப் பெண்களும் தொலைந்து, அழிக்கப்பட்டு அவனருள், அவன் செயல், அவன் இச்சை, அவன் அவதாரம் என்பதெல்லாம் அர்த்தமற்ற சொற்களாக்கி, மனிதனருள், மனிதன் செயல், மனிதன் இச்சை, மனிதன் பிறப்பு என்கிற அர்த்தம் விளங்குகிற சொற்களைக் கையாண்டு மனித ஆட்சி, மனித நடத்தை என்பவைகளைச் செயலுக்கு கொண்டு வந்து உழைப்பவனுக்கே உலகம் என்று உரிமைச் சீட்டு எழுதிய நாள் இந்த நாள்.

    மனிதனின் உழைப்புக்கு மதிப்புக் கொடாமல், மனிதத்தன்மையைப் பற்றிக் கவலைப்படாமல், பொதுவுக்கு நன்மையைக் கொடுத்தும் அறிவுக்கோ, ஒழுக்கத்துக்கோ இடம் கொடுக்காமல் வேஷதாரிகளான மதவாதிகளும் அவர்களின் பாதுகாவலர்களான முடிதாங்கிய, தடிதூக்கிய அரசுகளும் செய்துகொண்ட ஒப்பந்த சரத்துகளின்படி, உனக்கும் பேப்பே! நொப்பனுக்கும் பேப்பே! என்று ஏமாற்றி வந்த குள்ள நரித்தனத்திற்கு விடுதலைச் சீட்டுக் கொடுத்து, உழைப்புக்கும், நேர்மைக்குமே உலகமுண்டு, வாழ்வுண்டு! ஊதாரி வாழ்வுக்கு இடமில்லை காண்பீர்! என்று முழக்கிய மே முதல் நாள் இந்த நாள்.
இந்த நாள் வாழ்க! இதன் அடிப்படை உலகின் ஒரு பகுதியுடன் இல்லாமல் உலகம் முழுவதும் வியாபித்து நிற்க இந்த நாள் வளர்க! ஓங்குக! மதத்திமிரும், அதிகாரத்திமிரும் ஓங்கி உயர்ந்து உச்சாணிக் கிளையிலிருந்து உலுக்கிக் கொண்டிருக்க, அந்தக் குரங்குப் பிடியை ஓட்டி விடும் முயற்சி உலகின் ஒவ்வொரு பகுதியிலும் நடைபெறுகிறது என்கிற அடையாளமே, இந்த மே தினம். இன்று உலகின் பல பகுதிகளிலும் விழா நாளாகக் கொண்டாடப்படுகிறது எனலாம்.
           உலகத்தின் பல நாடுகளிலேயும் இந்த மே தினம் கொண்டாடப்படுகிறதென்றால், அதனால் ஏதாவது ஒரு பயன் ஏற்படுகிறதென்றால், கொண்டாடுவதற்கான காரணமும், கொண்டாடுகிற முறையும், கொண்டாடுவதனால் விளையும் பயனும் நாட்டுக்கு நாடு வேறுபட்டே காணப்படுகின்றது என்பதையும், சில நாடுகளில் வெறும் அய்தீக அளவில்தான் கொண்டாடப்படுகின்றது என்பதையும் மே தின விரும்பிகளான நம் நாட்டுத் தோழர்கள் நன்கு அறிந்து கொள்ள வேண்டும்.

            மே தினம் ஒரு புரட்சி நாள். உண்டு கொழுக்கும் சோம்பேறிக் கூட்டத்திற்கு இடமில்லாமல், ஆண்டவன் திருவிளையாடல் நிகழும் அக்கிரமத்திற்கு இடம் இல்லாமல், பாப புண்ணிய அடிப்படையில் உலக மக்கள் என்கிற போக்கை மாற்றி, பாடுபடுபவன், பாடுபடாதவன் என்கிற அடிப்படையில் அதாவது தலைகீழ் மாற்றமான அடிப்படையில் நடத்திய புரட்சி வெற்றி பெற்ற நாள் இந்த மே தினம். மே தினம் விரும்பும் தோழர்கள் இந்த அடிப்படையை முதலில் மனதில் கொள்ளவேண்டும்.
மே தினம் உற்சவ நாளாக, உத்தமர்கள் அவதாரம் செய்த நாளாக, புண்ணிய நாளாக அந்த மனப்போக்கில் கொண்டாடப்படுமானால் அது பெரும் ஆபத்து. இதையும் மே தின விரும்பிகள் நெஞ்சில்  கொள்ள வேண்டும்.
இந்திய உபகண்டத்தில் இந்த மே தினம் கொண்டாடும் வழக்கம், ஏறக்குறைய 20 ஆண்டுகளாகப் புகுந்திருந்தாலும், திராவிட நாட்டில் பத்துப் பதினைந்து ஆண்டுகளாகத்தான் கொண்டாடப்பட்டு வருகின்றது. அப்போதே தலைவர் பெரியார் அவர்கள் மே தினம் கொண்டாட வேண்டிய அவசியத்தையும், கொண்டாடும் முறையையும் விளக்கி அறிக்கை வெளியிட்டும், மேடைகளில் பேசியும் வந்திருக்கின்றார்கள். நம் சுயமரியாதைத் தோழர்கள் அந்த முறையைப் பின்பற்றி மே தினம் எப்படி அமெரிக்கப் பாட்டாளிகளின் மேன்மைக்கு வழி வகுத்த தினமாக மாறியது என்பதை விளக்கி வந்திருக்கின்றார்கள், விளக்கியும் வருகின்றார்கள்.

         இன்று இந்தியக் கம்யூனிட் தோழர்களும், சமதர்ம வீரர்களும் ஆங்காங்கே போட்டி போட்டுக் கொண்டு இந்த மே தின ஆர்ப்பாட்டம் செய்வதை கேட்கிறோம். இந்திய யூனியனின் காங்கிர அரசாங்கமும், தொழிலாளர்கள் விரும்பினால் இதை விடுமுறை நாளாக விட்டு விடுமாறு, அதாவது தனக்கும் இந்த மே தினத்தில் ஈடுபாடுண்டு என்பதைக் காட்ட உத்தரவு செய்திருக்கிறது.
மே தினத்திற்கும் பார்ப்பனப் பண்ணையான காங்கிர ஆட்சிக்கும் எப்படி எந்த வகையில் தொடர்பிருக்க முடியும்? பார்ப்பன பனியாக்களின் கூட்டாட்சிக்கு மே தினம் எப்படி அனுதாபத்துக்குரியதாகத்தான் இருந்து விடமுடியும்? பூசுரர்களின் தலையில் கொள்ளி வைத்து பூசுரர்கள் பூண்டையே இல்லாது  ஒழித்த மே தினம், பூசுரர்களால் எப்படி வரவேற்கப்படமுடியும், பூசுரத் தலைமைக்குள்ளான கம்யூனிடுகளும், சோஷியலிடுகளும்தான் அதை எப்படி மனமொப்பி வரவேற்று அதன் உண்மைத் தத்துவத்தை அங்கீகரித்துவிட முடியும்?

       அயல் நாட்டுக் கொள்கையின் பேரில், ருஷ்யாவின் கண்ணில் மண்ணைத் தூவுகிறோம் என்று எண்ணிக்கொண்டு, சமதர்ம சிங்கம் ஜவஹர்லால் ஆட்சியில் மேதின விடுமுறை விடப்படுவதிலே ஒரு பொருள் இருக்கின்றது என்று கொண்டாலும் கூட, மே தினத்தை அதாவது பூசுரர்களின் சல்லிவேர் பொசுக்கப்பட்ட நாளை, ஜோஷிப் பார்ப்பனர் ஆட்டி வைக்கும் கம்யூனிட் கட்சியோ, ஜெயப்பிரகாஷ் பார்ப்பனர் ஆட்டிவைக்கும் சோஷியலிட் கட்சியோ கொண்டாடுவதை, ஏமாற்றம், பித்தலாட்டம் என்கிற முறையைத் தவிர, வேறு எந்த நியாயமான முறை என்று கூறிவிட முடியும்? என்று கேட்கிறோம்.
வர்க்க ரீதியான போராட்டம் என்ற பெயரால், தொழிலாளி - முதலாளி ஆகிய இருவருடைய இருவேறான நிலையையும் அழிந்துபடாமல் காப்பாற்றி, தொழிலாளி தொழிலாளியாகவே பிறந்தான்; தொழிலாளியாகவே வாழ்வான்; தொழிலாளியாகவே சாவான். அதற்கு நாங்கள் கியாரண்டி, ஆனால் தொழிலாளிக்குக் கூலி உயர்வு கொடு! என்று முதலாளிகளிடத்தில் ஒப்பந்தம் செய்து கொண்டு தொழிலாளர்களிடத்தில் பேரம் பேசும் இந்தியக் கம்யூனிட்டுகளை இந்த ஒப்பந்தத்திற்காக அல்லது முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையேயுள்ள தரகர்களான தங்களின் வயிற்றுப் பிழைப்புக்காகப் பல ஏழைக்குடும்பங்கள் பட்டினி கிடந்து பலர் சோத்துக்கில்லாமலும் துப்பாக்கி முனையாலும் செத்துமடிய காரணகர்த்தர்களாக இருக்கும் இந்தியக் கம்யூனிடுகளைத் தீவிரமாகக் குறை சொல்லும் சமதர்ம வீரர்களின் யோக்கியதைதான் என்ன? கம்யூனிடுகளைவிட இவர்களின் நடத்தை, நாணயம் எந்த வகையில் மேம்பட்டு விட்டது என்று சொல்லி விட முடியும்? வருணாசிரம முறையை அழித்தொழிக்க மனதாலும் எண்ணாதவர்கள்; மக்கள், மக்கள் என்ற தத்துவத்தை அழித்து அதாவது மக்களுக்குள் சமவுரிமையை ஒப்புக்கொள்ளாது அதற்கு விரோதமாக இருக்கும் சாதிரம், சட்டத்தைக் குறித்து ஒரு வார்த்தைக் கூட பேசாதவர்கள்; அவனியின் போக்குக்கு ஆண்டவர்களும், ஆண்டவர்களின் அருள் பெற்ற ஞானிகளும், ரிஷிகளும் வழிகாட்ட வேண்டுமென்று எண்ணுகிறவர்கள், பேசுகிறவர்கள்; மூடநம்பிக்கையும், மூடப்பழக்க வழக்கங்களும் தொழிலாளர்களிடையே அழியாமல் குலையாமல் அப்படியே இருக்க வேண்டுமென்று விரும்பி அதை நாகரிகம் என்ற போர்வையைப் போர்த்திக் கையாண்டு வருகின்றவர்கள்; சுருக்கமாக தொழிலாளி தொழிலாளியாகவே இருக்க வேண்டுமென்று நம்பி அதற்கான வழிகளிலே காரியம் செய்யக் கூடியவர்கள்; என்று சொல்லக் கூடிய அளவில்தான், இந்தியக் கம்யூனிடுகளும், இந்திய சோஷியலிடுகளும் நடைமுறையில் செய்து கொண்டு வருகிறார்கள்.

      இந்த மாதிரியான போக்குடையவர்கள் மே தின விரும்பிகள் என்று காட்டிக் கொள்வதினால் உருப்படியான பிரயோஜனம் ஒன்றுமில்லை என்பதை நாம் எடுத்துக் காட்டினாலும்கூட இந்த மேதின அடிப்படையை நாம் வாழ்த்தி வரவேற்கிறோம். மே தினம் என்பதை எண்ணும் போதே அது தலைகீழ்ப்புரட்சி என்பதுதான் நினைவுக்கு வரவேண்டும் என்பதையும் கூறுகிறோம். மே தினம் என்பதை கேட்கும் போது, வாழத் தெரிந்த பாட்டாளி வாழ வழி செய்துகொண்ட நாள் என்பதுதான் நெஞ்சில் இடம்பெற வேண்டும்; மே தினத்தின் உணர்ச்சி, இழிவுணர்ச்சியையும் தன்னம்பிக்கை இல்லாத போக்கையும் சாகடிக்கும் மான உணர்ச்சியாக வளரட்டும்; வளர்ந்து மனிதன் மனிதனாக வாழ்வதற்குத் துணை செய்யட்டும் என்பவைகளையும் நாம் வற்புறுத்திக் கூறுகிறோம்.

          இந்த மே தின வெற்றியை நம்நாட்டில் அனுபவரீதியில் கொண்டாட வழிவகுத்து, அதற்கான காரியத்தில் இடைவிடாது உழைப்பது திராவிடர் கழகம் ஒன்றுதான் என்பதைத் திராவிடத் தோழர்களான மே தின விரும்பிகள் நிச்சயித்துக் கொள்ள வேண்டுமென்பது நம் விருப்பம்.
விஞ்ஞான ரீதியில் பகுத்தறிவைத் துணைகொண்டு பாடுபடும் பாட்டாளிக்கே பாராளும் உரிமையும், பாங்குடன் வாழும் உரிமையும் உண்டு என்பதை வற்புறுத்தும் ஒரு இயக்கம் உண்டு என்றால், அது ஒரே ஒரு திராவிடர் இயக்கந்தான் என்பதை மே தின விரும்பிகளுக்கு நாம் ஞாபக மூட்டுகிறோம்.
குடிஅரசு - தலையங்கம் - 01.05.1948

வியாழன், 3 ஜனவரி, 2013


மாபெரும் மக்கள் கிளர்ச்சி வெடிக்கும் - திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி எச்சரிக்கை அறிக்கை !



காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் (கெசட்டில்) வெளியிடுவது மத்திய அரசின் இயல்பான கடமையாகும். அதை வெளியிடக் கூட தயங்கும் நிலையில், மாபெரும் மக்கள் கிளர்ச்சி வெடிக்கும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அறிக்கை வருமாறு:
காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு - இறுதித் தீர்ப்பு வெளியானது 2007 ஆம் ஆண்டு!
காவிரி நதிநீர்ப் பங்கீடு சம்பந்தமாக நடுவர் மன்றம் அமைக்கும் தமிழ்நாட்டின் நீண்ட காலக் கோரிக்கையை நிறைவேற்றியவர் - மாநிலத்தில் தி.மு.க. ஆட்சியின்போது - மத்தியில் சமூகநீதிக்காவலர் வி.பி. சிங் அவர்கள்.
அதன்படி இடைக்கால நிவாரணமாக அந்நடுவர் மன்றம் தமிழ்நாட்டிற்கு கருநாடக அரசு ஆண்டுதோறும் 205 டி.எம்.சி. தண்ணீரை வழங்கவேண்டுமென்று ஆணை பிறப்பித்தது!
தொடக்கத்திலிருந்தே, கருநாடக அரசு இதன்படி, ஒரு சில ஆண்டுகள் தவிர, முழுமையாக நிறைவேற்றி தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் வழங்கவில்லை.
கருநாடகம் எந்தச் சூழலில் தண்ணீரைத் திறந்துவிடும் தெரியுமா?
வறட்சி ஏற்படும் காலத்தில் பங்கீடு எப்படி என்ற Distress Formula- வையும் பின்பற்றியும் நடந்துகொள்ளவே இல்லை.
நடுவர் மன்றத்தையே ஒப்புக்கொள்ளாமல் ஒவ்வொரு முறையும், அவசரச் சட்டம், பிறகு தனிச் சட்டம், வழக்கு, தாவா என்றெல்லாம் திட்டமிட்டே தண்ணீரைத் தர மறுத்தே வந்துள்ளது.
கிருஷ்ண ராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) மற்றும் கபினி போன்ற அணைகளில் குடகு பகுதியில் ஏராளம் மழை பெய்து, கருநாடகத்தில் உபரி மழைநீர் வெள்ளத்தைத் தடுக்க முடியாது என்ற நிர்பந்த நிலையில் மட்டுமே அவர்களது அணைகளைக் காப்பாற்றும் பொருட்டே, தமிழ்நாட்டுக்குத் தண்ணீரைத் திறந்துவிடுவது சில ஆண்டுகளில் நடந்தது!
இந்நிலையில், 16 ஆண்டுகள் கழித்து 2007 இல் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு தரப்பட்டது. அதன்படி, 419 டி.எம்.சி. (தமிழ்நாடு கேட்டது 562 டி.எம்.சி.) கருநாடகாவிற்கு 270 டி.எம்.சி. (அது கேட்டது 465 டி.எம்.சி.), கேரளாவிற்கு 30 டி.எம்.சி., புதுவைக்கு 7 டி.எம்.சி., சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பொருட்டு 10 டி.எம்.சி. தனி ஒதுக்கீடாக (Reserved) வைக்கப்பட்டது.
128 முறை பேச்சுவார்த்தை
முன்பு பேச்சுவார்த்தைகள் இரு மாநிலங்களுக்கிடையே 127 முறை; சில வாரங்களுக்கு முன் ஒரு தடவை ஆக, சுமார் 128 தடவை நடைபெற்றும், உருப்படியான பலன் ஏதும் ஏற்படவில்லையே.
உச்சநீதிமன்றம், பிரதமர் தலைமையில் உள்ள காவிரி நதி நீர் ஆணைய ஆணைப்படிகூட விடப்படும் நீரின் அளவால் தமிழ்நாட்டிற்குக் குறுவை சாகுபடியை தமிழ்நாட்டில் மூன்றில் ஒரு பகுதி நிலங்களில் மட்டுமே நடைபெறக்கூடிய நிலையில், 2 பகுதி நடைபெறாமலும், சம்பா பயிர் நட்டும் காய்ந்து, கருகி வாடியதாலும், மனமுடைந்த காவிரிப் பாசன விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை 12-க்குமேல் பெருகியும் வந்துள்ள நிலையில்கூட, மேற்சொன்ன உச்சநீதிமன்ற ஆணைக்கும் கட்டுப்படாமல், பிரதமர் தலைமையில் உள்ள காவிரி நதிநீர் ஆணைய உத்தரவுக்குக் கட்டுப்படாமல் தண்ணீர் தர மறுத்து அடம் பிடிக்கிறது கருநாடகம்.
கருநாடகத்தில் அனைத்துக் கட்சிகளும் ஓரணியில்!
சற்றும் மனிதாபிமானம் அற்று, ஒரு சொட்டுத் தண்ணீர் கூட தமிழ்நாட்டிற்குத் தர இயலாது என்று அடம் பிடிக்கிறது கருநாடக அரசு. (வாக்கு வங்கி அரசியல் முழு முதற்காரணம்) அங்கு அனைத்துக் கட்சிகளும் ஒரே அணி; ஒரே குரல் அங்கே! அந்த முதலமைச்சர் 10 முறை அனைத்துக் கட்சிக் கூட்டம்; பிரதமரைச் சந்திக்க சர்வக் கட்சிக் குழு என்ற நடைமுறை கருநாடகத்தில்.
தமிழ்நாட்டில், அது அறவே இல்லை; எல்லாம் முதலமைச்சர் நினைப்பதுதான்! எத்தனைக் கட்சிகள் கோரிக்கை வைத்தும், இப்பிரச்சினையில் அரசு அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒருமுறை கூட கூட்டப்படவே இல்லை.
இங்கும் எதிர்க்கட்சிகள் மீதும், ஆளுங்கட்சியும், மற்றவர்களும் பரஸ்பர குற்றச்சாற்று வைத்து அரசியல் நடக்கும் அவலமான நிலை!
இந்நிலையில், இறுதித் தீர்ப்பு (நடுவர் மன்றத்தின்) வந்த 90 நாள்களில் மத்திய அரசின் கெசட்டில் வெளியிட்டிருக்கவேண்டிய நடுவர் மன்றத் தீர்ப்பு - 5 ஆண்டுகளாகியும் மத்திய அரசால் வெளியிடப்படாத வேதனையான நிலை!
அரசிதழில் வெளியிட்டால்...
இப்படி வெளியிட்டால்தான் அத்தீர்ப்புக்கு சட்ட வலிமை ஏற்படும்; அப்படி வெளியிட்ட பிறகு நடுவர் மன்றம் முடிந்துவிட்டதாகவும், அதன்படி பிரதமர் தலைமையில் அமைந்த காவிரி நதிநீர் ஆணையமும் தானே முடிவுக்கு வந்ததாகக் கருதப்படும்.
உடனடியாக தீர்ப்பு செயல்படுத்தப்படவேண்டியதாகி விடும்.
இதனைக் கருநாடக அரசு வேண்டுமென்றே எதிர்க்கிறது.
அதனை மத்திய அரசு கெசட்டில் வெளியிடவேண்டும் என்பது சட்டப்படி கடமை. சலுகையோ, விருப்பத்தையொட்டியதோ அல்ல; கட்டாயம் வெளியிடப்படவேண்டியதாகும்.
சில வாரங்கள் முன்பு உச்சநீதிமன்றமே உரத்த குரலில் மத்திய அரசு வழக்குரைஞரைப் பார்த்து, ஏன் இன்னும் தீர்ப்பை வெளியிடாமல் உள்ளீர்கள் என்று கேட்டு, அதற்கு விரைவில் வெளியிடுவோம் என்று கூறி பல வாரங்களுக்குமேல் ஓடிவிட்டன!
மத்திய அரசின் போக்கு...
இப்போதும் மத்திய அரசின் போக்கு பாம்புக்குத் தலை; மீனுக்கு வால் காட்டுவது மாதிரி தட்டிக் கழிக்கும் வகையில், சில செய்திகளை சட்ட அமைச்சகம் பரிசீலிக்கிறது என்று கசிய விடுவது, தமிழ்நாட்டு விவசாயிகளுக்கும், சட்டக் கடமைக்கும், உச்சநீதிமன்றத்தில் கொடுத்த வாக்குறுதிக்கும் விரோதமானது  - கண்டிப்பாக விரோதமானதே!
உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது நொண்டிச்சாக்கு - அடிப்படையற்றது. (அந்த உச்சநீதிமன்றம்தானே கெசட்டில் வெளியிடவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது).
ஸ்டே ஏதாவது உள்ளதா? உச்சநீதிமன்றம் இதை வெளியிடத் தடையா வழங்கியுள்ளது? இல்லையே! பின் ஏன் இந்த செப்படி வித்தை, ஜாலங்கள்?உடனடியாக வெளியிடாவிட்டால் பெரும் போராட்டம் வெடிப்பது - மக்கள் கிளர்ச்சியாக வெடிப்பது தவிர்க்க இயலாது!
மத்திய அரசின் இயல்பான சட்டக் கடமையைச் செய்வதில்கூட, இப்படி ஓர் அரசின் அழுத்தமா தேவை?
வெட்கம்! மகாவெட்கம்!! வேதனை!!!

- கி. வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்