சனி, 10 மார்ச், 2012

அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையாரின் 92 ஆம் ஆண்டு பிறந்த நாள்


   
                     பிற சமயமும்    இந்து சமயமும்                                                                                                -அன்னை மணியம்மையார்                                                          
           இன்றைய தினம் உலகத்திலுள்ள 200 கோடி  ஜனங்களுக்கு முக்கியமாய் நான்கைந்து மதங்களே பெரும் மதங்களாயிருக்கின்றன. அவற்றுள் சுமாராக கிறிஸ்து மதத்திற்கு 60 கோடியும், பவுத்த மதத்திற்கு அதன் உள்பிரிவுகளையும் சேர்த்து 60 கோடியும், இஸ்லாம் மதத்திற்கு 40 கோடியும், இந்து மதத்திற்கு 20 கோடியும், நாஸ்திகர்களுக்கு 20 கோடியும் இருக்கின்றதனாலும் இந்து மதம் தவிர, மற்ற மதங்களில் எல்லாம் வேறு மதங்களிலிருந்து வருகின்றவர்களையெல்லாம் தங்கள் மதங்களில் சேர்த்துக் கொள்வதும், நாளுக்கு நாள் தங்கள் மதங்களை விருத்தி செய்வதும், தங்கள் தங்கள் மதங்களில் உள்ள மக்கள் எல்லோரையும் சமமாகக் கருதி ஒற்றுமைப்படச் செய்வதுமான முயற்சியில் எல்லோருக்கும் சமமான கல்வியும், வாழ்க்கையில் சரி சுதந்திரமும் அளிக்கப்பட்டிருக்கின்றன.
             ஆனால், இந்து மதம் என்பதில் மாத்திரம் மனிதனை மனிதன் பிரித்துக் காட்டி கீழ் - மேல், உயர்வு - தாழ்வு நிலையை உண்டாக்கி வேறு மதத்திலிருந்து வரும் எவனையும் சேர்க்காமலடித்து - இந்து மதத்திலிருந்து அநேகரை வேறு மதத்திற்குப் போகும்படி நிர்ப்பந்தப்படுத்தி ஜன சமூகம் வருஷத்திற்கு வருஷம் குறைந்துக் கொண்டே வருகிறது.
           மதக் கொள்கையைப் பற்றிப் பேசும்போது மாத்திரம் இந்து மதம், அன்பு மதம், சமத்துவ மதம், சமரச சன்மார்க்க மதம் என்று சொல்வது; நடக்கும்போது மாத்திரம் சமரசமில்லை, சன்மார்க்கமில்லை, அன்பு இல்லை, இரக்கமில்லை என்பதும்; மற்றும் மற்ற மதங்களில் இல்லாத தத்துவங்கள், வேதாந்த சாரங்கள், ஞானங்கள் இந்து மதத்தில் இருக்கின்றன என்று பெருமை பேசிக் கொண்டு ஆத்மாவே கடவுள் என்றும், ஒரே ஆத்மா உலகிலெல்லாம் பிரகாசிக்கின்றதென்றும், எல்லா உடல்களிலிருக்கும் ஆத்மா ஒன்றே என்றும், அதற்குப் பற்றில்லை என்றும், அதற்குச் சாவு இல்லை, பிறப்பு இல்லை என்றும், ஆத்மா, கடவுள், தோற்றம் ஆகிய மூன்றும் ஒன்றை ஒன்று பிரியாத தன்மையுடையதென்றும், இன்னும் ஏதேதோ பித்துக்கொள்ளிபோல் பேசி பெருமையடைந்து கொண்டு வாழ்க்கையில் அவை ஒன்றுக்கொன்று சிறிதும் சம்பந்தமில்லாமல் நடந்து, மனித சமூகத்திற்குப் பல கொடுமைகளை இழைத்துக் கொண்டு வருவதாயிருக்கின்றது.
              மற்ற சமயக்காரர்களெல்லாம் தாங்கள் செய்யும் தருமங்களையும், புரியும் கர்மங்களையும் இந்த உலகத்திலிருக்கும் மக்களுக்கு, இந்த உலகத்திலேயே நன்மை உண்டாகும்படியும் அதனுடைய பலனை இந்த உலகத்திலேயே அடைவதாகவும் சொல்லி, கஷ்டப்படுகின்ற ஜீவன் யாராயிருந்தாலும், தேவைப்படுகின்ற ஜீவன் யாராயிருந்தாலும் அவர்களுக்கெல்லாம் தங்களால் ஆனதை வித்தியாசமில்லாமல் தங்கள் மத மக்களுக்கும், நாட்டு மக்களுக்கும் பயன்படும்படியாக உதவி வருகின்றார்கள். மீதியுள்ளதை நாட்டின் முன்னேற்றத்திற்கும் உதவி, பெரிய பெரிய நன்மைகளைச் செய்து வருகிறார்கள்.
            ஆனால், இந்து மதக்காரர்களோ, தாங்கள் செய்வது மக்களுக்கு - இந்த உலகத்திற்குப் பயன்படுகின்றதா என்பதைவிட, மேல் உலகத்திலுள்ளவர்கள் திருப்தியடைவார்களா? சந்தோஷ மடைவார்களா? நமக்கு வேண்டியதை அவர்கள் கொடுப்பார்களா? நாம் இந்த லோகத்தை விட்டுப்போன பிறகு மேல் லோகத்தில் நமக்கு நன்மை கிடைக்குமா? இந்த ஜென்மம் போன பிறகு அடுத்த ஜென்மத்தில் நமக்குப் பெருமையும், மேன்மையும் கிடைக்குமா? என்கிற கவலையிலேயே செய்வதுடன், கஷ்டப்படுபவனையும், தேவைப் படுபவனையும் லட்சியம் செய்யாமல் யாருக்குக் கொடுத்தால் மேல் லோகத்தில் பலனுண்டு என்கிற கவலையினால் சுயநல எண்ணங்கொண்டு எவனெவனுக்குக் கொடுத்தால் அதிகமான பலன் மேல் லோகத்தில் கிடைக்குமென்றும், கடவுள் தனக்கே கொடுக்கும்படிச் சொன்னார் என்றும் பித்தலாட்டமாய் அறிவுக்கும், அனுபவத்திற்கும் பொருந்தாததாய் எழுதி வைத்திருக் கின்றார்களோ, அவற்றை எல்லாம் நம்பி அந்தப்படியே செய்கின்றார்கள்.
            மற்ற மதக்காரர்கள் எல்லோரும் தங்கள் மதக்காரர்கள் நன்மைக்கும், மற்ற மதக்காரர்கள் நன்மைக்கும் என்று பள்ளிக்கூடம் கட்டி ஏராளமான பொருள் செலவு செய்து உபாத்தியாயர்களை வைத்து, படிப்பு சொல்லிக் கொடுக்கின்றார்கள். இந்துமதக்காரர்கள் கோவில் கட்டி ஏராளமான பொருள் செலவு செய்து பார்ப்பனர்களையும், தாசிகளையும் வைத்து உற்சவங்கள் செய்கின்றார்கள். படிப்பைப் பற்றிய கவலையே இல்லாமலிருக்கின்றார்கள்.
மற்ற மதக்காரர்கள் மக்களின் நோய்களைச் சவுக்கியம் செய்ய ஆஸ்பத்திரிகள் கட்டி வைத்தியம் செய்கின்றார்கள். இந்து மதக்காரர்கள் நோய் வந்தாலும், காசில்லாமல் வேறொருவன் செய்யும் வைத்தியத்தைக் கூட செய்து கொள்ளாமல் அந்த நோய்க்கும் கடவுளை நம்பிக் கடவுளுக்கும் சில்லறை தேவதைகளுக்கும் வேண்டிக் கொள்வதன் மூலமும் கோவில்களுக்குப் போய் படுத்துக் கொள்வதன் மூலமும் காசையும், நேரத்தையும் செலவு செய்து காயலாவைப் பலப்படுத்திக் கொள்கிறார்கள்.
            மற்ற மதக்காரர்கள் பெண்களுக்குப் படிப்புக் கொடுத்து அறிவு உண்டாக்கி வாழ்க்கையில் புருஷர்களுக்கு குடும்பக் கஷ்டமில்லாமல் இருக்கும்படியாக பயன் பெறச் செய்கின்றார்கள்.  இந்து மதக்காரர்கள் படிப்புக் கொடுக்காமல் போவதோடல்லாமல் ஏறக்குறைய 100-க்கு 50 பெண்களுக்கு பிசாசு பிடிக்கச் செய்து பேயோட்டுகின்றார்கள்.
            கடைசியாக, கடவுள் விஷயத்திலும் 60 கோடி கிறிஸ்தவருக்கு ஒரே கடவுளாகவும், 60 கோடி புத்தர்களுக்கு ஒரு கடவுள் கூட இல்லாததாகவும், 40 கோடி முகம்மதியர் களுக்கும் ஒரே கடவுளாகவும், அதுவும் உருவம், பால் இல்லாததாகவும் இருக்கும்போது இந்துக்களுக்கு மாத்திரம் 20 கோடிப் பேருக்கு, 33 கோடி கடவுள்களும், அவைகளுக்குக் கண்ணு, மூக்கு, கைகால்கள் அதுவும் ஒவ்வொன்றுக்கும் ஆயிரக்கணக்கான கண்கள், இரண்டாயிரக்கணக் கான கைகள், பதினாயிரக்கணக்கான பெண்ஜாதி, பதினாயிரக்கணக் கான தாசி வேசி வைப்பாட்டிகள், பிள்ளை குட்டி, மாமன், மாமி, மைத்துனன், மாமனார், மருமகன், மருமகள், பேரன், பேத்தி, கொள்ளுப் பேத்தி முதலிய பத்து வர்க்கங்களுடன் இருக்கின்றன.
         இவை மாத்திரமல்லாமல், மற்ற மதக் கடவுள்களுக்கு பூசையோ, சாப்பாடோ, ஸ்நானமோ, வேஷ்டி துணியோ, கல்யாணமோ, கருமாதியோ, கல்லெடுப்போ இல்லாமல் இருப்பதும், இந்து மதக் கடவுள்களுக்கு மாத்திரம் தினம் ஒரு வேளை, மூன்று வேளை பூசையும், ஸ்நானமும், அபிஷேகமும், ஒவ்வொரு சாமிக்கும் பூசை நாள் 1-க்கு 1 படி, 2 படி, 100 படி, 10 மூட்டை, 20 மூட்டை, 50 மூட்டை அரிசி வீதம் சமைத்து வைத்து ஆராதனை செய்வதும், மற்றும் பலப் பல நைவேத்தியங்கள் செய்வதும், கணக்கில்லாமல் துணிகள் கட்டுவதும், நகைகள் போடுவதுமான செலவுகள் செய்து வருகிறார்கள்.
மதத் தலைவர் அல்லது தெய்வீகத் தன்மை பொருந்தியவர்கள் என்பவர்களிலும், மற்ற மதக்காரருக்கு ஒவ்வொருவரே உண்டு. அதாவது கிறிஸ்து சமயத்திற்கு கிறிஸ்து நாதரும், இஸ்லாம் சமயத்திற்கு முகமது நபியும், பவுத்த சமயத்திற்கு புத்தரும் இப்படி ஒவ்வொருவரே உண்டு. ஆனால், இந்து சமயத்திற்கு முதலில் யார் என்று கண்டுபிடிப்பது கஷ்டமாகும். அப்படிக் கண்டுபிடித்து விட்டால் பிறகு அவர்களைப் போல் நூற்றுக்கணக்காக, ஆயிரக்கணக்காக, லட்சக்கணக்காக அவதாரம், தேவர்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், ரிஷிகள், முனிவர்கள் முதலாகிய தெய்வ அவதாரமும் தெய்வ அம்சமும் பொருந்தியவர்கள் கணக்கு வழக்கில் அடங்காத அளவு ஆகிவிடும்.
சமய ஆதாரங்கள் விஷயத்தில் மற்ற சமயக்காரர்களுக்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆதாரமே உண்டு. அதாவது கிறிஸ்துவருக்கு பைபிள், இஸ்லாமானவருக்கு குர்ஆன், பவுத்தருக்கு திரிபீடகம் என்பவையாகும்.               ஆனால், இந்து சமயக்காரருக்கு 4 வேதம், 6 சாஸ்திரம், 18 புராணம். இவை தவிர, அவர் சொன்னது, இவர் சொன்னது, உதாரணமாக, மனு சொன்னது, பராசரர் சொன்னது, ரிஷிகள் சொன்னது, போதாயனர் சொன்னது, பகவான் சொன்னது, மாடு, குரங்கு, கழுகு, கிளி சொன்னது என்பவை போன்ற கணக்கு வழக்குக்கடங்காத அநேகம் உண்டு.
             இந்தவிதமான ஆதாரங்களைப் பார்க்கும் உரிமை விஷயத்திலோ, மற்ற சமயக்காரர்களில் யாரும் அச்சமய ஆதாரம் எதையும் கேட்க - பார்க்க - படிக்க - மனத்தில் இறுத்த - உரிமையுண்டு. ஆனால், இந்து சமயக்காரருக்கோ அச்சமய ஆதாரத்தை நூற்றுக்கு மூன்று பேர் அதிலும் பெண்களை நீக்கிவிட்டால், 100-க்கு ஒன்றரைப் பேர் மாத்திரமே படிக்க - கேட்க - பார்க்க உரிமையுடையவர் களாவார்கள். பாக்கி தொண்ணூத்தெட்டரைப் பேர்கள் அவைகளைப் பார்த்தோ, கேட்டோ, படித்தோ விட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி  ஊற்றுவதும், கண்ணைக் குத்துவதும், நாக்கை அறுப்பதும் முதலாகிய பலவகைத் தண்டனைகள் படிப்படியாயுண்டு.
    இப்படியிருக்க, இதுபோலவே இன்னும் அநேக விஷயங்களில் இந்து மதம் வித்தியாசத்தை வைத்துக் கொண்டு அவற்றை நிலைநிறுத்த முயற்சிகளும் செய்து கொண்டு, இதன் பயனாகவே தேசத்தை அன்னிய நாட்டு ஆதிக்கத்திற்கும், நன்மைக்கும் விட்டுக் கொண்டு தேசத்தில் உள்ள மக்களை நாயினுங்கடையாக, கேவலமாய் நடத்தி இழிமக்களாக்கி அடிமைப்படுத்திக் கொண்டிருப்பதை மறந்து அநேகரை உப்புக்கு சிறைக்குப் போகச் சொல்கின்றது.
       எனவே, பிற சமயத்திற்கும் நம் (இந்து) சமயத்திற்கும் உள்ள தாரதம்மியத்தையும், அதனால் ஏற்பட்ட பலனையும் எனக்குத் தோன்றிய வகையில் ஒருவாறு எடுத்துச் சொன்னேன். இனி உங்களுக்குப் பட்டபடி முடிவு செய்து நடந்து கொள்ளுங்கள்.
                                                                                                                          -குடிஅரசு - (9.12.1944)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக