தந்தை பெரியார் தமிழ்நாட்டில் செய்த வேலையை டாக்டர் அம்பேத்கர் வடநாட்டில் செய்து வந்தார். ஆனால், தமிழ்நாட்டில் இருந்த உணர்ச்சி வடநாட்டில் இல்லை. கடைசியாக மதம் மாறும் நிலை அம்பேத்கருக்கு ஏற்பட்டது. லாகூரிலே சாட்பாட் தோடக் மண்டல் என்ற அமைப்பின் சார்பாக நடத்தப்பட்ட சாதி ஒழிப்பு மாநாட்டிற்குத் தலைமை வகிக்க டாக்டர் அம்பேத்கரைக் கேட்டுக் கொண்டனர். அந்த மாநாட்டுக்குத் தலைமை வகிக்க வேண்டுமானால், தமது கருத்துகளைக் கூறுவதற்கு முழுச் சுதந்திரம் தமக்கு வேண்டும் என்று அம்பேத்கர் கேட்டார். அதற்கு அவர்களும் ஒப்புக்கொண்டார்கள்.
முதன்முதலாக அய்யாவும், அண்ணாவும் பம்பாயில் ஜின்னா அவர்களின் இல்லத்தில் அம்பேத்கரைச் சந்தித்தனர். ஒரே ஓர் ஓட்டு மெஜாரிட்டியில் இந்தியை ஆட்சி மொழியாகக் கொண்டு வந்ததுபற்றி அம்பேத்கர் வன்மையாகக் கண்டித்தார். அம்பேத்கர் வடநாட்டவராக இருந்தாலும் வடநாட்டவர்கள் மூட நம்பிக்கைவாதிகள். தென்னாட்டவர்கள் பகுத்தறிவுவாதிகள்; வடநாட்டவர்கள் மிகவும் பின்தங்கியவர்கள், தென்னாட்டவர்கள் முற்போக்கானவர்கள்; வடநாட்டு நாகரிகம் பழைமையானது, தென்னாட்டு நாகரிகம் சிறப்பானது என்று வடநாட்டு மக்களிடையே பாடுபட்ட டாக்டர் அம்பேத்கர் தென்னாட்டு மக்களைப் பற்றி மிகவும் புகழ்ந்து குறிப்பிட்டார்.
1954ஆம் ஆண்டு ரங்கூனிலே நடைபெற்ற புத்தர் மாநாட்டிலே கலந்துகொள்ள அய்யா சென்றிருந்தார். நானும், இன்று அமைச்சராக உள்ள ராசாராமும் உடன் சென்றிருந்தோம். உலகப் புத்த சங்கத் தலைவர் மல்லசேகரா அந்த மாநாட்டுக்கு வந்திருந்தார். அப்போது டாக்டர் அம்பேத்கர், தாம் முஸ்லிம் மதத்தில் சேர முடிவெடுத்துள்ளதாகக் கூறி, தந்தை பெரியாரையும் முஸ்லிம் மதத்தில் சேருமாறு கேட்டுக் கொண்டார். அப்போது அய்யா இந்து மதத்திலே இருந்துகொண்டு அதைச் சீர்திருத்த வேண்டுமே தவிர, அந்த இழிவுகளை அப்படியே விட்டுவிட்டு மதம் மாறக் கூடாது. அப்படி நீங்கள் மதம் மாறினால் ஏராளமானவர்களையும் அழைத்துக் கொண்டு செல்லுங்கள் என்று கூறினார். மாளவியா, விஜயராகவாச்சாரியார் போன்றோரும் இதே கருத்தை வலியுறுத்தி டாக்டர் அம்பேத்கருக்குத் தந்தி கொடுத்தனர். தந்தை பெரியார் சொன்ன கருத்தை நியாயம் என்று அம்பேத்கர் அப்போது ஏற்றுக்கொண்டார்.
பிறகு புத்த மதத்தில் சேரப் போவதாக அம்பேத்கர் கூறினார். அப்போது தந்தை பெரியார், இந்து மதத்தை விட ஏராளமான மூடநம்பிக்கைகள் புத்த மதத்திலும் இருக்கின்றன. எனக்கு அதில் சேர விருப்பம் இல்லை. இந்து மதத்தில் இருந்துகொண்டே சீர்திருத்தம் செய்யப் போகிறேனே தவிர, இதிலிருந்து வெளியேறப் போவதில்லை என்று தெரிவித்துவிட்டார். இதிலிருந்து வெளியேறிச் சென்றுவிட்டால், பிறகு இந்து மதத்தைத் திருத்த முடியாது என்றும் தெரிவித்தார். புத்த மதத்திற்குச் சென்ற பிறகு அம்பேத்கர் பெருமை குறைந்து போய்விட்டது.
தகுதி, திறமை என்பது மேல் சாதி என்று சொல்லப்பட்டவர் களுக்குத்தான் உண்டு என்ற கருத்தைத் தகர்த்து எறிந்து, வெளிநாடு சென்று உயர்ந்த படிப்புப் படித்தார் டாக்டர் அம்பேத்கர். சந்தர்ப்பம் சூழ்நிலை கிடைத்தால், எல்லோரும் கல்வி கற்க முடியும் - அறிவாளியாக முடியும் என்ற தந்தை பெரியார் கருத்தை அப்படியே ஏற்றுக் கொண்டார் டாக்டர் அம்பேத்கர். இந்தப் பிரச்சினையில் அய்யா கருத்தும், அம்பேத்கர் கருத்தும் ஒத்த கருத்தாகவே இருந்தது.
நிற்க; தமிழர்களின் நலனுக்காக, உரிமைக்காகத்தான் இந்த அமைச்சரவை பாடுபட்டுக் கொண்டு வருகிறது. இதைக் கட்டிக்காப்பது தமிழர்களின் தலையாய கடமையாகும்.
இந்த மாநாட்டில் இத்தனை இலட்சம் மக்கள் இங்கே திரண்டு வந்திருக்கிறார்கள் என்றால் அது இன உணர்ச்சியால் அல்லவா? அய்யா, அண்ணா ஊட்டி வளர்த்த உணர்ச்சியை இங்கே நாம் பார்க்கிறோம். இந்த உணர்ச்சியை மிக ஜாக்கிரதையாகப் பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும். தாய்மார்கள் நல்லவண்ணம் சிந்திக்க வேண்டும். சினிமா, டிராமா, அலங்காரம் என்று தாய்மார்கள் தங்கள் கவனத்தைச் செலுத்துகிறார்களே தவிர, சமுதாய உணர்ச்சியே அவர்களுக்கு இருப்பதில்லை. தாய்மார்கள் சமுதாய உணர்ச்சியைப் பெற வேண்டும். தமிழர்களின் இனநலத்திற்காகப் பாடுபடக்கூடிய ஒரே அரசு இந்தத் தமிழ்நாடு அரசுதான். முதல்வர் கலைஞர் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திலே பிறந்தவர் என்பதால், இந்த உணர்ச்சியோடு காரியங்களாற்றி வருகிறார். இந்த ஆட்சியை நீடித்திருக்கச் செய்வதுதான் அய்யா, அண்ணாவுக்கு நாம் காட்டும் மரியாதையாகும்.
(கோவையில் நடைபெற்ற தி.மு.கழக மாநில மாநாட்டில் டாக்டர் அம்பேத்கர் படத்தைத் திறந்து வைத்துக் கழகத் தலைவர் அன்னை மணியம்மையார் அவர்கள் ஆற்றிய உரை. விடுதலை 6-1-1976)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக