திங்கள், 10 செப்டம்பர், 2012

நீதிக்கட்சியின் சாதனைக் குவியல்கள்


நீதிக்கட்சியின் சாதனைக் குவியல்கள்



  • பொதுத் துறையில் தாழ்த்தப்பட்டோர் உட்பட எல்லா மக்களுக்கும் உரிய இடங்கள் வழங்கப்பட்டன
  • துப்புரவு வகுப்பினர், தோடர்கள், கோடர்கள், படகர்கள் ஆகியவர்களுக்காகக் கூட்டுறவுச் சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டன.
  • தாழ்த்தப்பட்ட வகுப்பினர்க்குப் பணி உயர்வு, உயர் பதவி நியமனங்கள் செய்யப்பட்டன.
  • தாழ்த்தப்பட்டோர்க்கு வீட்டு மனைகள், குடியிருப்புகள் அமைத்துத் தரப்பட்டன. சாலைகள் போடப்பட்டன. அவர்களின் குழந்தைகளுக்குப் பள்ளிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
  • தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றம் கருதி தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். பின்னர் தனி அலுவலர் என்பதை லேபர் கமிஷனர் என்று மாற்றினர்.
  • தாழ்த்தப்பட்ட வகுப்பாரில் என்னென்ன சாதிகள் உள்ளன என்பதைத் தொகுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.  ட குறவர்களை எல்லா வகையிலும் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
  • கோவை மாவட்டத்திலுள்ள வலையர், குறவர் ஆகியோரைக் குற்றப் பரம்பரையிலிருந்து மீட்க அவர்களின் குழந்தைகளுக்கு 25- நிதி உதவிகள் (ஸ்காலர்ஷிப்புகள்) அளிக்கப்பட்டன.
  • ஆதிதிராவிடர்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டு அதனைப் பயன்படுத்த மூலதனம், பிற சாதியினரிடமிருந்து பாதுகாப்பு - அடமானம் வைக்காமல் இருக்க அறிவுரை இன்னும் பிற தொல்லைகளிலிருந்து மீட்பு என உதவிகள் செய்யப்பட்டன.  தாழ்த்தப்பட்டவர்களுக்கு வீட்டு மனை வாங்குவதற்குக் கடன் வசதி செய்து தரப்பட்டது.
  • ஆதி திராவிடர்களுக்கு விவசாயத்திற்காக நிலங்களை ஒதுக்குகிற போது மரங்களின் மதிப்பு நில அளவைக் கட்டணத்தைத் தள்ளுபடி செய்தனர்.
  • அருப்புக் கோட்டையில் குறவர் பையன்களுக்குப் படுக்கை வசதி கொண்ட மன்றம் கட்டித்தர அளிக்கப்பட்ட தொகையை  உயர்த்தித் தர உத்தரவு இடப்பட்டுள்ளது.
  • மீனவர் நலன் காப்பதற்காக லேபர் கமிஷனர் நியமிக்கப்பட்டார்.
  • கள்ளர் சமுதாய முன்னேற்றத்திற்காகப் புதிதாக லேபர் கமிஷனர் நிய மிக்கப்பட்டு அவர் சில வழிமுறைகளை உருவாக்கித் தர ஏற்பாடு செய்தனர்.
  • நிலத்தில் கட்டடத்தைக் கட்டிக் கொண்டு நில வாடகை செலுத்துவோர்க்கு வாடகைதாரர் குடியிருப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இச் சட்டப்படி நில உரிமையாளர்களால் அப்புறப்படுத்தப்படுவோம் எனும் பயம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நீங்கியது.
  • பி. அண்டு சி வேலை நிறுத்தத்தின் விளைவுகளால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு உதவிகள் செய்யப்பட்டன.
  • தஞ்சை கள்ளர் மகா சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று, அய்ந்து பள்ளிகளைத் தஞ்சை வட்டாரத்தில் திறக்க உத்தரவிடப்பட்டது.
  • ஆதிதிராவிடர்களின் முன்னேற்றத்திற்காகப் பொது மக்களின் உதவியையும் உறவையும் பலப்படுத்த அரசு வேண்டு கோள்களை அரசு ஆணையாகப் பிறப்பித்தது.
  • குடிப் பழக்கம் உள்ளவர்களின் பழக்கத்தை மாற்ற மக்களை நெறிப்படுத்த ஆணை வெளியிடுதல்.
  • ஆதி ஆந்திரர்களுக்கு சந்தை விலையில் நிலங்களை அளித்தல்.
  • தஞ்சாவூர் கள்ளர் பள்ளிகளின் நடைமுறை செலவுகளை ஏற்றல்; சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளு தல், கடன் வசதிக்கு ஏற்பாடு செய்தல்.
  • மலபார் மாவட்டத்தில் மீனவப் பிள்ளைகளுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டன.
  • சென்னை நடுக்குப்பத்தில் மீனவப் பிள்ளைகளுக்குப் பள்ளிக்கூடம் திறக்கப்பட்டது.
  • கிழக்குக் கடற்கரை ஊர்களில் ஆறு இரவுப் பள்ளிகள் திறக்கப்பட்டன. மேலும் மூன்று தொடக்கப் பள்ளிகள் நிறுவப்பட்டன.
  • உள்ளாட்சி மன்றங்களில் தகுதியான தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கிடைக்கும்போது, அவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என உத்தரவு இடப்பட்டு இருந்தது.
  • மருத்துவப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உதவி நிதி (ளுவயீநனே) பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
  • அரசுப் பள்ளிகளில் வகுப்புரிமை நிலைநாட்டப்பட ஆண்டு தோறும் அறிக்கைகள் வெளியிடப்பட பொதுத்துறை கேட்டுக் கொள்ளப்பட்டது.
  • தாழ்த்தப்பட்ட மாணவர்கள், கல்வி கற்பதற்கு கல்வி நிலையங்களில் சேர்த்துக் கொள்வதற்கு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. தடைகள் ஏதாவது செய்யப்படுமானால், உடன் மாற்று ஏற்பாடு செய்யவும் உத்தரவிடப்பட்டு இருந்தது.
  • சென்னை மாகாணத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மாணவர்கள் எஸ்.எஸ். எல்.சி. தேர்வுக்குப் பணம் கட்டத் தேவையில்லை என ஆணை பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
  • கல்லூரிகளிலும், உயர்நிலைப் பள்ளிகளிலும் படிக்கும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அரைச் சம்பளம் கட்டினால் போதும் எனச் சலுகை வழங்கப்பட்டு இருந்தது.
  • தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு உதவித் தொகையைப் பெறுவதற்கு அவர்களின் எண்ணிக்கையை உயர்த்தியும் கூடுதல் நிதி அளித்தும் சலுகைகள் வழங்கப்பட்டன.

புதன், 2 மே, 2012

ராமனே உடைத்த ராமன் பாலம்


மே தின வாழ்த்துகள்

தனித் தமிழ் ஈழம் அமைந்திட தமிழர்கள் பகுதியில் அய்.நா. மன்றம் பொது வாக்கெடுப்பு! கலைஞர் தலைமையில் நடைபெற்ற டெசோ கூட்டத்தில் முக்கிய முடிவு

மிக முக்கிய கூட்டம்  உலகத் தமிழர்களை ஈர்க்கக் கூடியது


தனித் தமிழ் ஈழம் அமைந்திட தமிழர்கள் பகுதியில் அய்.நா. மன்றம் பொது வாக்கெடுப்பு!


கலைஞர் தலைமையில் நடைபெற்ற டெசோ கூட்டத்தில் முக்கிய முடிவு

கலைஞர் தலைமையில் நடைபெற்ற டெசோ கூட்டத்தில்  தமிழர் தலைவர் கி.வீரமணி, பேராசிரியர் க. அன்பழகன், சுப. வீரபாண்டியன், கவிஞர் கலி.பூங்குன்றன், சுப்புலட்சுமி ஜெகதீசன் (சென்னை அண்ணா அறிவாலயம் - 30.4.2012).
சென்னை, ஏப்.30- தனித் தமிழ் ஈழம் விரைவில் அமைந்திட அய்.நா. மன்றம், தமிழர்கள் வாழும் பகுதிகளில் பொது வாக்கெடுப் பினை விரைவிலே நடத்திட வேண்டும் என்றும் அதற்கு இந்தியா எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டுமென்றும் இன்று காலை சென்னையில் கலைஞர் தலைமையில் கூடிய டெசோ கூட்டத்தில் முக்கிய முடிவாக எடுக்கப் பட்டது. அதன் விவரம் வருமாறு:
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில், 30-4-2012 இன்று காலை 10.30 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில், இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து தமிழ் ஈழம் ஆதரவாளர்களின் சார்பில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
டெசோ உருவாக்கம்
இந்தக் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கலைஞர், தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன், திராவிடர் கழகத் தலைவர் திரு. கி. வீரமணி, திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் திரு. சுப. வீரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் இலங்கைத் தமிழர் பிரச் சினைக்குத் தீர்வு காண்பதற்கான அமைப்பு ஒன்று மீண்டும் உருவாக்கப்பட்டது. முன்பு போலவே இந்த அமைப்புக்கு, தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பு என்று தமிழிலும்; Tamil Eelam Supporters Organisation (TESO)என்று ஆங்கிலத்திலும் பெயர் சூட்டப்பட்டது. இந்த அமைப்புக்கு தலைவர் கலைஞர் அவர்கள் தலைவராகவும், பேராசிரியர் அன்பழகன், திரு. கி. வீரமணி, திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன், திரு. சுப. வீரபாண்டியன் ஆகியோர் உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
அமைப்பின் குறிக்கோள்
பல்லாண்டுகளாகப் பாரம்பரியமான முறையில் இலங்கையின் தேசிய இனமாக இருந்து வரும் தமிழினம்; மனித உரிமைகளும், குடிமை உரிமைகளும் பறிக்கப்பட்டு, இந்த நூற்றாண்டில் மிகப் பெரிய இனப் படுகொலைக்கு ஆளாக்கப் பட்டு, அணிஅணியான அல்லல் களால் அனுதினமும் அலைக்கழிக்கப் பட்டு வரும் பிரச்சினை தீர்வதற்கு தனித் தமிழ் ஈழம் அமைவதைத் தவிர வேறு தகுந்த வழியில்லை என்ற உண்மை நிலையை இந்தியத் திரு நாட்டின் பிற மாநிலங்களிலும், உலக நாடுகளிலும் உணரச் செய்வதற்கும், தக்க ஆதரவு திரட்டுவதற்கும் உகந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல்.
தீர்மானம்
இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்களுக்காக அய்க்கிய நாடுகள் அமைப்பின் வாயிலாக அமைக்கப் பட்ட இந்தோனேசிய அரசின் தலை மை வழக்குரைஞரைத் தலைவராகக் கொண்ட விசாரணைக் குழு, இலங்கை இராணுவத்தினர் ஈழத் தமிழர்கள் மீது நடத்திய கண்மூடித்தனமான தாக்கு தலை உறுதி செய்திருக்கிறது. வாழ் வுரிமைக்காகப் போராடிய ஈழத் தமிழர்கள் கடத்திச் செல்லப்பட்டு கொடுமைப் படுத்தப்பட்டதற்கும், மனித உரிமை மீறல்களுக்கும் ஆதாரங் கள் இருப்பதாகக் கூறியுள்ளது.
இந்தக் குழுவின் அறிக்கை 2011, ஏப்ரல் 25ஆம் தேதியன்று நியூயார்க் கில் வெளியிடப்பட்டது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக் கட்டத்தில் இலங்கை ராணுவம், 40 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவித் தமிழர்களைக் குண்டு போட்டுக் கொன்றதோடு; போர்க் கைதிகளையும் கொடூரமாகச் சுட்டு அழித்தது என்றும்; வீராங்கனைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர் என்றும் அந்த அறிக் கையிலே சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
இந்திய அரசு உடனடியாக ஈடுபட வேண்டும்
இலங்கைப் போர்க் குற்றங்கள் பற்றி அய்.நா. குழு பரிந்துரைத்துள்ள வாறு சர்வதேச விசாரணை ஆணை யத்தை அமைத்து விசாரணை நடத்தி, குற்றங்களுக்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், அதற்கு வேண்டிய அனைத்து முயற்சிகளிலும் இந்திய அரசு உடனடியாக ஈடுபட வேண்டும் என்றும்; திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலை செயல் திட்டக் குழு மத்திய அரசை வலியுறுத்தி ஏற்கனவே தீர்மானம் வாயிலாகக் கேட்டுக் கொண்டுள்ளது.
இலங்கையில் போர் முடிந்த பிறகு தமிழர் பகுதிகளை சிங்கள ராணுவம் ஆக்கிரமித்து நிற்கின்றது. தமிழர் பகுதிகள் எல்லாம் சிங்கள மயமாக்கப் பட்டு வருவதாகவும்; தமிழ் ஊர்ப் பெயர்கள் கூட சிங்களப் பெயர்களாக மாற்றப்படுவதாகவும்; இந்துக் கோவில் கள், கிறித்துவத் தேவாலயங்கள் மற்றும் இஸ்லாமியர் மசூதிகள் ஆகியவை புத்த விகாரங்களாக மாற்றப்படுவதாகவும் செய்திகள் வருகின்றன.
பொது வாக்கெடுப்பு
இந்த நிலையில் தனி ஈழம் அமைவதற்கு தமிழர்கள் மத்தியில், ஜனநாயக முறையில் பொது வாக் கெடுப்பு நடத்தி முடிவு செய்திட வேண்டும் என்பது தான் இலங்கைத் தமிழர்கள்பால் அன்பும், அக்கறையும் கொண்டுள்ள அனைவரது கருத்தாக இருக்கிறது. அய்க்கிய நாடுகள் மன்றத் தின் தலையீட்டினையடுத்து இதைப் போல பொது வாக்கெடுப்பு நடத்தப் பட்டு; கொசோவோ, தெற்கு சூடான், கிழக்கு திமோர், மாண்டிநீக்ரோ போன்றவை தனி நாடுகள் என்ற அங்கீ காரத்தை ஏற்கெனவே பெற்றிருக் கின்றன. அதன் அடிப்படையில் இலங்கையில் வாழும் தமிழர்கள் மற்றும் புலம் பெயர்ந்து வெளி நாடுகளில் வாழும் இலங்கைத் தமி ழர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்; இலங்கையில் தமி ழர் பகுதிகளில் புதியதாகக் குடியேற் றப்பட்ட சிங்களவர்களுக்கு இந்தப் பொது வாக்கெடுப்பில் வாக்குரிமை வழங்கப்படக் கூடாது; நடத்தப்படும் பொது வாக்கெடுப்பு முடிவின் அடிப் படையில் தனி ஈழம் அமைவதற்கு அய்க்கிய நாடுகள் மன்றம் முயற்சி களை மேற்கொள்ள வேண்டும்; அதற்கு நமது இந்திய அரசு தேவை யான ஒத்துழைப்பினையும் ஆதர வினையும் நல்குவதோடு; அய்.நா. மன்றத்திலும், உலக அமைப்புகளின் மூலம் சர்வதேச அரங்கிலும் உரிய அழுத்தத்தையும் தர வேண்டும்.
தமிழ் ஈழம் குறித்த முடிவை தமிழர்களின் விருப்பத்துக்கே விட்டு விடுவது என்ற நிலையை அய்.நா. மன்றம் விரைவில் மேற்கொள்ள இருக் கிறது. தமிழ் ஈழம் குறித்த வாக் கெடுப்பு ஒன்று புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் மத்தியில் உலக நாடுகளில் நடந்து வருகிறது. இதன் மூலம் வட்டுக்கோட்டை தீர்மானம் என்ற ஈழப் போராட்டத்தின் அடிப்படைச் சாசனத்தை சர்வதேசம் அங்கீகரிக்கும் நிலை சாத்தியமாகி உள்ளது.
தனித் தமிழ் ஈழம் விரைவில் அமைந்திட, அய்.நா. மன்றம், தமிழர் கள் வாழும் பகுதிகளில் பொது வாக்கெடுப்பினை (Referendum) விரைவிலே நடத்திட வேண்டு மென்றும்; அதற்கு நமது இந்தியப் பேரரசு எல்லாவிதமான முயற்சி களையும் மேற்கொள்ள வேண்டுமென் றும்; இன்று உருவாகியுள்ள தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பு இந்தத் தீர்மானத்தின் மூலமாக வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. நிறைவாக செய்தியாளர்களுக்கு தி.மு.க. தலைவர் கலைஞர் பேட்டி அளித்தார்.

சனி, 21 ஏப்ரல், 2012

வைகுண்ட சாமிகள்
வைகுண்டசாமிகள் என்பவர் குமரியில், அன்று பெரிதும் ஒடுக்கப்பட்ட நாடார் சமுதாய மக்களின் தன்மானத்திற்காகப் போர்க்கொடி தூக்கிய பெரு-மகனார் ஆவார்.
கன்னியாகுமரிக்கு அருகில் பூவண்டன்தோப்பு எனும் கிராமத்தில் நாடார் சமூகத்தில் பிறந்த-வர் (1809)
முடிசூடும் பெருமாள் என்று பெயரிடப்பட்டார். தாழ்ந்த ஜாதியினருக்கு இத்தகு மேன்மை தாங்-கிய பெயரைச் சூட்டக்-கூடாது என்பதுதானே மனுதர்மம்? மன்னர்ஆட்சி தடுத்தது. விளைவு_ புதுப்-பெயர் முத்துக் குட்டி.
அன்றைய தினம் திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியில் மரம் ஏறும் மக்கள் சாணார் என்று அழைக்கப்பட்டனர். உரிமை-கள் அறவே மறுக்கப்பட்ட பரிதாபத்துக்குரியவர்களாக அவர்கள் ஒடுக்கப்பட்டனர். நம்பூதிரிப் பார்ப்பான் எதிரே வந்தால் அவர்கள் 36 அடிதூரம் விலகி நிற்க வேண்டும். நாயரிடமிருந்து 12 அடி தூரம் ஒதுங்கவேண்டும். பொதுவீதிகளில், சாலை-களில் நடக்க உரிமையில்லை. பெண்கள் ரவிக்கை (தோள் சேலை) அணிந்திடத் தடை!.
மன்னர் ஆட்சி மனு-தர்ம ஆட்சியாகச் சீறியது. இந்த நிலையில்தான் வைகுண்ட சாமிகள் என்று பிற்காலத்தில் அழைக்கப்பட்ட முத்துக்-குட்டி சமத்துவ சங்கம் என்ற ஓர் அமைப்பைத் தொடங்கினார்.
அவர் ஆன்மிகக் குடைக்குள்ளேயே சீர்-திருத்தங்களைச் செய்ய முன்வந்தார். அதே நேரத்தில் உருவ வழிபாட்டை எதிர்த்தார். காணிக்கை கொடுப்பது கண்டிப்பாகக் கூடாது என்றார். மாந்திரீகர்களிடம் மதி மயங்காதீர் என்று எச்சரித்தார்.
தாழ்த்தப்பட்டவர்களின் வீடுகளில் உணவருந்துமாறு தம் சீடர்களுக்குக் கட்டளையிட்டார்.
காவி நிறத்தில் வெள்-ளைத் தீபச் சுடரைத் தாங்கிய கொடியை அறிமுகப்-படுத்தினார். ஒரு வகை-யில் வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளின் சாயலை இவரிடம் காண முடியும்.
மன்னரையும் பார்ப்பனர்களையும் எதிர்க்கத் துணிந்த அவர் 110 நாள்-கள் கொடுஞ்சிறையையும் அனுபவிக்க நேர்ந்தது.
இன்றைய நிலை என்ன தெரியுமா? சென்னை மணலியில் அவருக்குக் கோயில் கட்டி கோபுரங்-கள் எழுப்பி, தேர்த் திருப்பணியையும் நடத்தியுள்-ளனர்.
எந்த உருவ வழிபாடு கூடாது என்றாரோ, அந்த உருவ வழிபாட்டை, அவரையே கடவுளாக்கி நடத்துகின்றனரே.
கடவுள் இல்லை; இல்லவே இல்லை என்று தந்தை பெரியார் சிலைகளின்கீழ் கடவுள் மறுப்பு பொறிப்பதன் முக்கியத்துவம் புரிகிறதா?
- மயிலாடன்

வெள்ளி, 13 ஏப்ரல், 2012

டாக்டர் அம்பேத்கர் பற்றி அன்னை மணியம்மையார்



தந்தை பெரியார் தமிழ்நாட்டில் செய்த வேலையை டாக்டர் அம்பேத்கர் வடநாட்டில் செய்து வந்தார். ஆனால், தமிழ்நாட்டில் இருந்த உணர்ச்சி வடநாட்டில் இல்லை. கடைசியாக மதம் மாறும் நிலை அம்பேத்கருக்கு ஏற்பட்டது. லாகூரிலே சாட்பாட் தோடக் மண்டல் என்ற அமைப்பின் சார்பாக நடத்தப்பட்ட சாதி ஒழிப்பு மாநாட்டிற்குத் தலைமை வகிக்க டாக்டர் அம்பேத்கரைக் கேட்டுக் கொண்டனர். அந்த மாநாட்டுக்குத் தலைமை வகிக்க வேண்டுமானால், தமது கருத்துகளைக் கூறுவதற்கு முழுச் சுதந்திரம் தமக்கு வேண்டும் என்று அம்பேத்கர் கேட்டார். அதற்கு அவர்களும் ஒப்புக்கொண்டார்கள்.

அம்பேத்கரின் மாநாட்டுத் தலைமை உரையை முன்னரே அனுப்பி வைக்க வேண்டும் என்று கோரியிருந்தனர். அப்படி அம்பேத்கர் அனுப்பி வைத்த தலைமை உரையில் பார்ப்பனர்களைப் பற்றியும், கடவுளைப் பற்றியும் கூறியிருந்த பகுதிகளை நீக்கிவிட வேண்டும் என்று அம்மாநாட்டு நிருவாகிகள் கேட்டுக் கொண்டனர். அதற்கு அம்பேத்கர் மறுத்துவிட்டு தமது கருத்தில் ஒரு சிறு புள்ளியைக் கூட மாற்ற முடியாது; தமது கருத்துகளை முழுமையாகக் கூறும் உரிமை இருந்தாலொழிய மாநாட்டுக்குத் தலைமை வகிக்க மாட்டேன் என்று மறுத்து விட்டார். அந்தத் தலைமை உரையை தந்தை பெரியார் வாங்கி அறிஞர்களைக் கொண்டு மொழிபெயர்த்துத் தமிழிலே நூலாக வெளியிட்டார்கள். ஜாதியை ஒழிக்க வழி என்று தற்போது விற்கப்படும் நூல்தான் அது.

முதன்முதலாக அய்யாவும், அண்ணாவும் பம்பாயில் ஜின்னா அவர்களின் இல்லத்தில் அம்பேத்கரைச் சந்தித்தனர். ஒரே ஓர் ஓட்டு மெஜாரிட்டியில் இந்தியை ஆட்சி மொழியாகக் கொண்டு வந்ததுபற்றி அம்பேத்கர் வன்மையாகக் கண்டித்தார். அம்பேத்கர் வடநாட்டவராக இருந்தாலும் வடநாட்டவர்கள் மூட நம்பிக்கைவாதிகள். தென்னாட்டவர்கள் பகுத்தறிவுவாதிகள்; வடநாட்டவர்கள் மிகவும் பின்தங்கியவர்கள், தென்னாட்டவர்கள் முற்போக்கானவர்கள்; வடநாட்டு நாகரிகம் பழைமையானது, தென்னாட்டு நாகரிகம் சிறப்பானது என்று வடநாட்டு மக்களிடையே பாடுபட்ட டாக்டர் அம்பேத்கர் தென்னாட்டு மக்களைப் பற்றி மிகவும் புகழ்ந்து குறிப்பிட்டார்.

1954ஆம் ஆண்டு ரங்கூனிலே நடைபெற்ற புத்தர் மாநாட்டிலே கலந்துகொள்ள அய்யா சென்றிருந்தார். நானும், இன்று அமைச்சராக உள்ள ராசாராமும் உடன் சென்றிருந்தோம். உலகப் புத்த சங்கத் தலைவர் மல்லசேகரா அந்த மாநாட்டுக்கு வந்திருந்தார். அப்போது டாக்டர் அம்பேத்கர், தாம் முஸ்லிம் மதத்தில் சேர முடிவெடுத்துள்ளதாகக் கூறி, தந்தை பெரியாரையும் முஸ்லிம் மதத்தில் சேருமாறு கேட்டுக் கொண்டார். அப்போது அய்யா இந்து மதத்திலே இருந்துகொண்டு அதைச் சீர்திருத்த வேண்டுமே தவிர, அந்த இழிவுகளை அப்படியே விட்டுவிட்டு மதம் மாறக் கூடாது. அப்படி நீங்கள் மதம் மாறினால் ஏராளமானவர்களையும் அழைத்துக் கொண்டு செல்லுங்கள் என்று கூறினார். மாளவியா, விஜயராகவாச்சாரியார் போன்றோரும் இதே கருத்தை வலியுறுத்தி டாக்டர் அம்பேத்கருக்குத் தந்தி கொடுத்தனர்.  தந்தை பெரியார் சொன்ன கருத்தை நியாயம் என்று அம்பேத்கர் அப்போது ஏற்றுக்கொண்டார்.
பிறகு புத்த மதத்தில் சேரப் போவதாக அம்பேத்கர் கூறினார். அப்போது தந்தை பெரியார், இந்து மதத்தை விட ஏராளமான மூடநம்பிக்கைகள் புத்த மதத்திலும் இருக்கின்றன. எனக்கு அதில் சேர விருப்பம் இல்லை. இந்து மதத்தில் இருந்துகொண்டே சீர்திருத்தம் செய்யப் போகிறேனே தவிர, இதிலிருந்து வெளியேறப் போவதில்லை என்று தெரிவித்துவிட்டார். இதிலிருந்து வெளியேறிச் சென்றுவிட்டால், பிறகு இந்து மதத்தைத் திருத்த முடியாது என்றும் தெரிவித்தார். புத்த மதத்திற்குச் சென்ற பிறகு அம்பேத்கர் பெருமை  குறைந்து போய்விட்டது.

தகுதி, திறமை என்பது மேல் சாதி என்று சொல்லப்பட்டவர் களுக்குத்தான் உண்டு என்ற கருத்தைத் தகர்த்து எறிந்து, வெளிநாடு சென்று உயர்ந்த படிப்புப் படித்தார் டாக்டர் அம்பேத்கர். சந்தர்ப்பம் சூழ்நிலை கிடைத்தால், எல்லோரும் கல்வி கற்க முடியும் - அறிவாளியாக முடியும் என்ற தந்தை பெரியார் கருத்தை அப்படியே ஏற்றுக் கொண்டார் டாக்டர் அம்பேத்கர். இந்தப் பிரச்சினையில் அய்யா கருத்தும், அம்பேத்கர் கருத்தும் ஒத்த கருத்தாகவே இருந்தது.
நிற்க; தமிழர்களின் நலனுக்காக, உரிமைக்காகத்தான் இந்த அமைச்சரவை பாடுபட்டுக் கொண்டு வருகிறது. இதைக் கட்டிக்காப்பது தமிழர்களின் தலையாய கடமையாகும்.

இந்த மாநாட்டில் இத்தனை இலட்சம் மக்கள் இங்கே திரண்டு வந்திருக்கிறார்கள் என்றால் அது இன உணர்ச்சியால் அல்லவா? அய்யா, அண்ணா ஊட்டி வளர்த்த உணர்ச்சியை இங்கே நாம் பார்க்கிறோம். இந்த உணர்ச்சியை மிக ஜாக்கிரதையாகப் பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும். தாய்மார்கள் நல்லவண்ணம் சிந்திக்க வேண்டும். சினிமா, டிராமா, அலங்காரம் என்று தாய்மார்கள் தங்கள் கவனத்தைச் செலுத்துகிறார்களே தவிர, சமுதாய உணர்ச்சியே அவர்களுக்கு இருப்பதில்லை. தாய்மார்கள் சமுதாய உணர்ச்சியைப் பெற வேண்டும். தமிழர்களின் இனநலத்திற்காகப் பாடுபடக்கூடிய ஒரே அரசு இந்தத் தமிழ்நாடு அரசுதான். முதல்வர் கலைஞர் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திலே பிறந்தவர் என்பதால், இந்த உணர்ச்சியோடு காரியங்களாற்றி வருகிறார். இந்த ஆட்சியை நீடித்திருக்கச் செய்வதுதான் அய்யா, அண்ணாவுக்கு நாம் காட்டும் மரியாதையாகும்.

(கோவையில் நடைபெற்ற தி.மு.கழக மாநில மாநாட்டில் டாக்டர் அம்பேத்கர் படத்தைத் திறந்து வைத்துக் கழகத் தலைவர் அன்னை மணியம்மையார் அவர்கள் ஆற்றிய உரை. விடுதலை 6-1-1976)

வியாழன், 22 மார்ச், 2012

திராவிட நாடு பிரியும் வரை தொழிலாளர் வாழ்வு மலராது ஈரோடு மாநாட்டில் திரு.வி.க.வின் தேர்ந்த உரை


ஈரோட்டில் நடைபெற்ற 19ஆவது திராவிடர் கழக மாநாட்டில் தமிழ்ப் பெரியார் திரு.வி.க. அவர்கள் பேசியதாவது:
தலைவர் அவர்களே! பெரியார் அவர்களே! தாய்மார்களே! நேற்று பெரியார் அவர்கள் தெரிவித்தபடி அவரை விட நான் 6 வயது சிறியேன் ஆயினும் தோற்றத்தில் அவரைவிட 16 வயது மூத்தோனாகவே காணப்படுகிறேன். எனவே உட்கார்ந்து கொண்டே பேச வேண்டிய நிலையில் இருக்கின்றேன். மேலும் இரைந்தோ விரைந்தோ பேச முடியாமலும் சங்கிலித் தொடர் போல் கருத்துக்களை வெளியிடுவதற்கேற்ற ஞாபகசத்தியில்லாதவனும் ஆக இருக்கின்றேன். எனவே இங்கொன்றும் அங்கொன்றுமாகத் தொடர்பு அறுபட்டு என்னால் வெளியிடப்படும் கருத்துக்களை நீங்கள் அத்தொடர்புகளைச் சேர்த்துப் படித்துத் தெளிவு பெறவேண்டுமென்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
திராவிட நாட்டுப் படத்தை நான் திறந்து வைக்க வேண்டுமென்கிற விருப்பத்தை என்னிடத்துத் தோற்றுவித்தவர் இவ்வியக்கத் தலைவரும் எனது நெருங்கிய நண்பருமான பெரியார் ஆவார். அவர் என்னிடம் தம் விருப்பத்தை முதன் முதலாகத் தெரிவித்தபோது நான் பேசாமல் இருந்து விட்டேன். அவரும் அதையே ஒப்புதலாகக் கொண்டு அதற்கேற்ப இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளார்.
நாம் திராவிடர்
திராவிடர் கழக உறுப்பினர் அல்லாத நான் திராவிட நாட்டுப் படத்தைத் திறந்து வைப்பது பொருந்துமா என்று பல தடவை யோசித்துப் பார்த்தேன். முடிவில் இந்நாட்டு மக்கள் எல்லோருமே திராவிடர்கள் தான், நானும் திராவிடன்தான். எனவே தாராளமாகத் திறந்து வைக்கலாம்; அதில் ஒன்றும் தவறில்லை என்கின்ற முடிவுக்கு வந்தேன். அம்முடிவுக்கு வந்தது முதற்கொண்டு என் மனதில் என்னென்னவோ எண்ணங்கள், என்னென்னவோ ஆதாரங்கள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. அவற்றை எல்லாம் தொகுத்து எழுதப்புகின்வையே ஒரு ஆயிரம் பக்கங்கள் கொண்ட புத்தகமாக அமைந்து விடும். அவ்வளவு பொருள் செறிந்த கருத்துகள் கடல் அலையைப்போல் என் மனதில் மோதிக் கொண்டே இருக்கின்றன. அவற்றை தொகுத்து எழுதும் ஆற்றல் எனக்குத் தற்போது இல்லாமைக்கு நான் பெரிதும் வருந்துகிறேன்.
நேற்று நம் தோழர் அண்ணாதுரை அவர்கள் தம் தலைமையுரையில் மே திங்களைப் பற்றியும், அக்டோபர் திங்களைப் பற்றியும் குறிப்பிட்டார். அவைகள் உலக சரித்திரத்திலேயே பெயர் பெற்ற மாதங்கள்தான். பாட்டாளி மக்களின் விடுதலைச் சரித்திரத்தில் நினைவிலிருத்திக் கொண்ட மாதங்கள்தான் அவை. திராவிடர் கழகமும் அத்தகைய போராட்டத்தில் தான் விரைவாக இறங்கிக் கொண்டிருக்கிறது.
உண்மை, உறுதிமிக்க இளைஞர்
இன்று நம் இளைஞர்கள் திராவிடர் கழகத்தின் போராட்டத்தைக் குறித்து பேசிய கருத்துக்களைக் கேட்டு நான் உண்மையிலேயே ஆனந்தம் கொண்டேன்.
இவ்வளவு உண்மையோடும், உறுதியோடும், வீராவேசத்தோடும் கேட்போர் மனத்தில் பசுமரத்தாணி போல் பதியும்படி பேசக்கூடிய எண்ணற்ற இளைஞர்கள் இருக்கும்போது திராவிட நாடு பிரிவினையடைவதில் சிறிதும் ஐயப்பாடு இருக்கக் காரணமில்லை என்றே எனக்குத் தோன்றியது.
திராவிடர்கள் என்பதற்கு எனது ஆராய்ச்சியில் பல பொருள்கள் தென்பட்டன. அவற்றுள் இரண்டை மட்டும் ஈண்டு எடுத்துக்கூற ஆசைப்படுகிறேன். திராவிடர் என்றால் ஓடுபவர்கள் என்று ஒரு சார்பாரும், ஓட்டுபவர்கள் என்று மற்றொரு சார்பாரும் கூறுகின்றனர். வடமொழிச் சார்புடையவர்கள் முன்னைய அர்த்தத்தையும், சிவஞான முனிவர் அவர்கள் பின்னைய அர்த்தத்தையும் கூறுகிறார்கள். இவற்றுள் எதைக் கொள்வதென்பதை உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.
ஓட்டுகிறவர்கள் என்றால் மாசை, அச்சத்தை ஓட்டுகிறவர்கள், மனத்துக்கண் உள்ள மாசை ஓட்டுபவர்கள் என்று தான் அர்த்தம் கொள்ள வேண்டும். மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்தறன் என்கிற அறத்தின் வழி நடந்தவர்களே திராவிடர்கள்.
திராவிடம் குறிப்புகள்
திராவிடம் என்கிற சொல் பிராமி மொழியிலும் இருக்கிறது. பிராமி மன்னன் நிக்கலஸ் ஆட்சிச் சரித்திரத்தில் திராவிடர்களைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. ஸ்மிருதியிலும் பஞ்சத்திராவிடம் என்று குறிக்கப்பட்டிருக்கிறது. மலையாளம், தமிழகம், ஆந்திரம், கேரளம் அவற்றோடு மராத்தி தேசம் ஆகிய ஐந்து திராவிடங்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. மலையாள தேசத்தில் பிறந்து வளர்ந்து வடமொழி கற்று சவுந்தர்ய லகரி என்ற சமஸ்கிருத நூல் எழுதிய சங்கராச்சாரியாரும் அப்புத்தகத்தில் திராவிடர்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். எல்லையப்பர் அவர்களின் மொழி பெயர்ப்பின் மூலம் நாம் இதை அறியலாம்.
சுமார் 55 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் வாழ்ந்திருந்த சபாபதி நாவலர் என்கின்ற தமிழ்வாணரால் எழுதப்பட்ட திராவிடப் பிரகாசிகை என்கின்ற நூலிலும் திராவிடம் என்கிற வார்த்தைக்கு பல ஆதாரங்கள் காட்டப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். இன்று இந்நாட்டின் தேசியப்பாட்டாக வழங்கிவரும் ஜனகணமனவிலும் கவி ரவீந்திரநாத் தாகூர் அவர்கள் திராவிட உட்கலவங்கா என்ற வரியில் திராவிடநாட்டைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பதைக் காணலாம்.
திராவிட நாடு என்று ஒரு நாடு தொன்று தொட்டு இருந்து வந்திருக்கிறது என்பதற்கு இவ்வாதாரங்களே போதும் என நினைக்கிறேன். இத்திராவிட நாட்டுக்கு எல்லை குறிப்பதும் மிகச் சிரமமான காரியம் அல்ல. சரித்திரமே சுலபமாக நிர்மாணித்து விடும் எந்தெந்தப் பகுதிகள் திராவிட நாட்டைச் சேர்ந்தவை என்று.
எனவே திராவிடம் என்று ஒரு பகுதி இருந்து வருகிறது என்பது பற்றியோ, அல்லது அதன் எல்லையைக் குறிப்பிடுவது பற்றியோ யாரும் நம்மோடு சர்ச்சைக்கு வரமுடியாது.
ஆகவே, இந்நாடு பிரிய வேண்டுமா என்பது பற்றித்தான் சகல தகராறுகளும் ஏற்பட்டிருக்கின்றன.
இருபெரும் கலாச்சாரங்கள்
இந்தியா என்பது பெரிய நாடு. இதில் பல தரப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள் என்றாலும் இந்நாட்டில் இரண்டு பெரிய கலாச்சாரங்களே அடிப்படைக் கலாச்சாரங்களாகக் காணப்படுகின்றன. இவை இரண்டும் பெரிதும் முரண்பட்ட கலாச்சாரங்களாகவும் இருந்து வருகின்றன. இவற்றுள் ஒன்று ஆரிய கலாச்சாரமாகும். மற்றொன்று திராவிட கலாச்சாரமாகும். வடநாட்டில் பெரும்பாலும் ஆரிய கலாச்சாரமும், தென்னாட்டில் பெரும்பாலும் திராவிட கலாச்சாரமும் நிலவி வருகிறது.
இவற்றுள் ஆரிய கலாச்சாரம் சுரண்டலையும், ஏமாற்றுதலையும் அடிப்படையாகக் கொண்டிருப்பதால் அதைப் பின்பற்றி வருபவர்கள் தமது சுரண்டலுக்காக அந்நிய நாடுகளை ஆக்கிரமிக்கும் எண்ணம் கொண்டு முயற்சி செய்து வருகிறார்கள்.
திராவிடக் கலாச்சாரம் சமதர்மத்தை, சோஷலிசத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருப்பதால் அதை பின்பற்றுபவர்கள் பிறர் சுரண்டலை ஒழித்து சுதந்தரமாக வாழ விழைகிறார்கள். எனவேதான் பிரிந்து வாழ நினைக்கிறார்கள் தென்னாட்டவர்கள்.
அந்நியன் சுரண்டல் பெருகப் பெருக பிரிவினை உணர்ச்சியும் பெருகுவது நிச்சயம்.
ஒரு காலத்தில் தமிழ்நாடு மிக மிக உயர்ந்திருந்தது. பிறகு ஆரியத்தின் சுரண்டலுக்கு ஆட்படவே இன்று மிக மிகத் தாழ்ந்து விட்டது. சுரண்டலுக்கு உள்ளாக்கிய வடநாடு மிக மிக உயர்ந்து நிற்கின்றது இன்று.
சுரண்டல் பெருகினால்...
அன்று தென்னாடு உயர்ந்திருந்ததைக் கண்டவர்கள் அதைச் சமன் செய்ய அகத்தியனை அனுப்பியதாகப் புராணம் கூறுகிறது. இன்று வடநாடு உயர்ந்திருப்பதைச் சமன் செய்ய ராஜகோபாலாச்சாரியை அனுப்பலாமா என்று நினைத்தால் அது கூடாது என்றுதான் என் மனம் கூறுகிறது. அவரை அனுப்ப என் மனம் ஏனோ இடங்கொடுக்கவில்லை. இவ்விரு நாடுகளின் உயர்வு தாழ்வுகளைச் சமன் செய்யும் ஆற்றல் படைத்த ஒருவர் தான் திராவிட இயக்கமாக இன்று பணியாற்றி வருகிறார்.
இன்று சிலர் கேட்கிறார்கள். திராவிட நாடு பிரிந்தால் தனித்து வாழ முடியுமா என்று. நிச்சயமாகத் தனித்து வாழ முடியும். இன்றைய நிலையைக் காட்டிலும் பன்மடங்கு உயர்நிலையில் வாழ முடியும் என்று அதிதிடமாகச் சொல்வேன்.
திராவிடநாட்டு வளம்
இந்நாட்டில் எதுதான் இல்லை. மலைகள் இல்லையா? இருபுறமும் கிழக்குத் தொடர்ச்சி மலையும் மேற்குத் தொடர்ச்சி மலையும் இருக்கின்றனவே. செழிப்பான நெல் விளையும் நிலப்பரப்பில்லையா? எரிமலைச் சாம்பல் நிரம்பிய இயற்கை வளம் பொருந்திய மண்ணல்லவோ இந்நாட்டு மண். அதில் எது தான் விளையாது? ஆறுகள் இல்லையா, இந்நிலப்பரப்பை வளம் செய்ய? அதற்கு குறைவில்லாத வகையில் கோதாவரி உண்டு, கிருஷ்ணா உண்டு, காவிரி உண்டு, பாலாறு உண்டு, பெண்ணையாறுண்டு. இன்னும் எத்தனை வேண்டும்? உலோகங்கள் இல்லையா? கோலார் தங்க வயல்கள் எந்நாட்டைச் சார்ந்தவை? ஐதராபாத்திலுள்ள மணி மலைகள் எந்நாட்டைச் சேர்ந்தவை? அந்த மணி மலைகளை வெட்டி எடுப்போமானால் இந்த அகண்ட உலகத்தையே விலைக்கு வாங்கிவிடலாமே. இந்நாட்டில் என்ன இரும்புக்குத் தான் குறைவா? கவலையோடு பூமியைத் தோண்டிப் பார்த்து ஆராய்ச்சி நடத்தி வந்தால் இந்நாட்டில் எதுதான் கிடைக்காது என்று நினைக்கிறீர்கள்? எல்லாம் கிடைக்கும்.
கிடைக்காவிட்டால் தான் என்ன? மற்ற மேலை நாடுகளைப் போல் கிடைத்த உலோகத்தைக் கொண்டே நமக்குத் தேவையான உலோகத்தைச் செய்து கொள்ள முடியாதா? எல்லா உலோகப் பொருள்களும் ஒரே மூலதாதுப் பொருளிலிருந்து தான் உண்டாகின்றன. எனவே, ஒன்றோடு ஒன்றைச் சேர்ப்பதன் மூலமோ அல்லது ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரிப்பதன் மூலமோ எப்பொருளையும் உண்டாக்கிக் கொள்ள முடியும். விஞ்ஞான முறைப்படி என்று கண்டுபிடிக்கப்பட்ட பிறகு நாம் என்ன சோடைகளா, ஒரு பொருளுக்காக வேறு நாட்டை எதிர்பார்த்துக் கொண்டிருக்க.
நமக்கென்ன குறை?
இவ்வளவு இயற்கை வளங்கள் நிறைந்த நாட்டில் வாழும் எங்களுக்கு பிழைக்கும் வழிதானா தெரியாது! வாணிபம் செய்யத் தெரியாதா அல்லது துறைமுகங்கள் தான் இல்லையா எங்களுக்கு. உலகத்திலேயே முதன் முதலாகக் கப்பல் கட்டி வாணிபம் நடத்தியவர்கள் திராவிடர்களாயிற்றே. உலகம் உணராமுன்னமே உள்நாட்டு நகரத்திற்கும், கடற்கரையோர நகரத்திற்கும் வெவ்வேறு பெயர் கொடுத்து வழங்கியவர்களாயிற்றே தமிழர்கள். பட்டினம், பட்டணம் என்கிற இரு சொற்கள் எத்தனையோ காலமாகத் தமிழ்நாட்டில் வெவ்வேறு பொருளுடன் வழங்கி வருகின்றனவே. ஆங்கிலம் வந்த பிறகு இவ்வேற்றுமைகூட சில பேருக்கு மறந்து போய் இருக்கும். சென்னைப் பட்டினம் என்பதற்குப் பதிலாக சென்னைப் பட்டணம் என்றுதானே பலர் வழங்கி வருகின்றனர். ஹிந்தி வருமுன்னரே இக்கேடென்றால் ஹிந்தி வந்த பிறகு என்னாகும் என்று சொல்லவும் வேண்டுமா? இன்று விசாகப்பட்டினம் என்கிற ஒரு இடத்தில் தான் கப்பல் தளம் இருக்கிறதென்றால் திராவிட நாடு பிரிவினையானதும் எத்தனையோ விசாகைகளைக் காண முடியுமே.
ஒருமைப்பாடு எங்கே?
எத்தனையோ வழிகளில் இந்நாட்டில் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கும் தரித்திரத்தை எங்களால் போக்கிக் கொள்ள முடியுமே. தனித்தியங்கும் நாடுகளைப் பிரித்துத் தனியாக இயங்கும்படிச் செய்து ஏதோ சொற்ப அதிகாரங்களை மட்டும் மேலேழுந்தவாரியாக மத்திய சர்க்காருக்கு வைத்துக் கொள்வதை விட்டு இமயம் முதல் குமரி வரை ஒரே ஆட்சியின் கீழ் கொண்டு வர வேண்டுமென்று பாடுபட்டு வருகிறார்களே. அது சாத்தியமா? யோசித்துப் பார்த்தார்களா இவர்கள். வங்காளத்தை ஒன்றாக்க முடிகிறதா? ஐக்கிய மாகாண மக்களுக்கு சமாதானம் சொல்ல முடிகிறதா? எங்கே இருக்கிறது ஒற்றுமையும் ஒருமைப்பாடும். காங்கிரஸ்காரர்களிடையேயாவது காணப்படுகிறதா ஒருமைப்பாடு? இவர்கள் ஆளும் இந்தியாவில் ஒருமைப்பாடு இருக்க?
நாங்கள் பன்னெடுங் காலமாகப் பாடுபட்டு வளர்த்த காங்கிரஸ் இன்று சாகும் நிலைக்கு வந்து விட்டதே எங்கள் கண் முன்னாலேயே. எத்துணை பெரியவர்கள் காங்கிரசின் வளர்ச்சிக்குக் காரணமாயிருந்தார்கள். சுரேந்திரநாத் பேனர்ஜி என்ன? தாதா பாய் நெளரோஜி என்ன? ஒரு திலகர் என்ன? ஒரு கோகலே என்ன? ஒரு காந்தியார் தான் என்ன? இவர்கள் வளர்த்த காங்கிரசா இன்று நம் கண் முன் காணப்படுகிறது. இல்லை இல்லை. இல்லை. பின் யாருடைய காங்கிரஸ் காணப்படுகிறது என்று கேட்கிறீர்களா, சர்தார் வல்லபாய் பட்டேலின் காங்கிரஸ் - பாசிசக் காங்கிரஸ் இதுதான் இன்று என் கண்ணுக்குத் தெரிகிறது.
படேலிசக் காங்கிரஸ் ஒழிக!
இந்த படேலிசக் காங்கிரசைதான் நாங்கள் ஒழிய வேண்டும் என்கிறோமே ஒழிய, காந்தியின் காங்கிரசல்ல என்பதை நீங்கள் அறியுங்கள். உலகம் அறியட்டும், இந்நாட்டு பாட்டாளிகளின் வயிற்றில் அடிக்க, இந்நாட்டில் உரிமைப்போர் தொடுத்து நின்ற தொழிற்சங்கங்களை அழித்து ஒழிக்க தேசிய தொழிற்சங்கம் என்ற பேரால் ஒரு முதலாளித்துவ ஆதிக்க ஸ்தாபனத்தை தோற்றுவித்த தொழிலாளர் துரோகி பட்டேலுடைய காங்கிரஸ் ஒழியவேண்டும் என்று தான் நாங்கள் ஆசைப்படுகிறோம். இந்தப் பட்டேல்தான் எத்தனை நாள் இருக்கப் போகிறார். இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்துகொண்டு? தம் சுரண்டலை ஆதரிக்கும் வரை தானே குஜராத்திக்காரர்களும் இவரை ஆதரிக்கப் போகிறார்கள்? அப்புறம் இவர் வாழ்வும் அம்பலந்தானே.
தோழர்களே! ஆகஸ்ட் வரைதான் எனக்கு காங்கிரசின் மீது பற்றுதல் இருந்தது. ஆகஸ்ட் 15ஆம் தேதி அதிகாரம் மாறிய அன்றே என் மனமும் மாறிவிட்டது. சுதந்திரம் வந்துவிட்டதாகக் கருதப்பட்ட அன்றைய தினமே காங்கிரஸ் கலைக்கப்பட்டிருக்க வேண்டும். கலைக்கப்பட்டிருந்தால் எவ்வளவோ நன்றாய் இருந்திருக்கும். காங்கிரஸ் இவ்வளவு கீழ்நிலைக்கு வருவதைக் காணவேண்டியிருக்காது.
40 ஆண்டு காலத்திற்கு மேலாக நாங்கள் உழைத்து உழைத்து வளர்த்து வந்த காங்கிரஸ் தொழிலாளர்களுக்குள்ள எல்லா குறைகளையும் போக்கும் என்ற நம்பிக்கையில் தொழிலாளர்களால் வளர்க்கப்பட்டு வந்த காங்கிரஸ் முடிவில் தொழிலாளர்களின் வயிற்றிலேயே அடிக்க ஆரம்பித்து விட்டதென்றால் அத்தொழிலாளர்களை காங்கிரசைப் பின்பற்றி நடக்கும்படி செய்த எங்கள் மனம் பொறுக்குமா?
கண்ணீர் விட்டு வளர்த்த காங்கிரஸ்
தோழர்களே! எனக்கும் பெரியாருக்கும் உள்ள நட்பின் பெருமையை நீங்கள் உள்ளபடி உணர்ந்திருக்க மாட்டீர்கள். நாங்கள் இருவரும் சற்றேறக்குறைய ஒரே நேரத்தில் காங்கிரசில் சேர்ந்தோம். ஒரே நேரத்தில் காங்கிரசை விட்டு விலகினோம். ஒரு முறை காஸ்மோபாலிடன் கிளப்பில் நாங்கள் இருவரும் கூடி தோழர் சண்முகம் செட்டியார் முன்னிலையில் காங்கிரசிலிருந்து விலக்கிக் கொள்வதென்றும், மறுபடி இருவரும் கலந்து பேசிக் கொள்ளாமல் எப்போதும் அவ்வியக்கத்தில் சேர்வதில்லை என்றும் முடிவு செய்து கொண்டோம். அம்முடிவுப்படியேதான் நாங்கள் இதுவரையும் நடந்து வந்திருக்கிறோம். ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குப் பிறகு காங்கிரசை மறந்துவிட்டு தொழிலாளர் இயக்கத்தையும் மறந்துவிட்டு ஒதுங்கி விட்டேன் பூர்ண ஓய்வுடன் இருக்க விரும்பி. அதுசமயம் டி.எஸ்.எஸ்.ராஜன் வாயிலாக எனக்கோர் அழைப்பு வந்தது. அதை நான் இயற்கையின் எச்சரிக்கையாகக் கருதிக் கொண்டேன். உன்னுடைய பழைய சங்கமாயிற்றே. அங்கு வேலை நிறுத்தம் நடக்கின்றதே. கொஞ்சம் சொல்லி சரிப்படுத்தேன். அந்தோனிப் பிள்ளையை அழைத்துக்கொண்டு போய் முதலாளிகளிடம் சமாதானம் செய்து கொள்ள முயற்சி செய்து விட்டு வெள்ளியன்று காலை வந்து காணுங்களேன் என்று கனம் ராஜன் அவர்கள் கூறினார். சரி என்று ஒப்புக் கொண்டு தோழர் அந்தோனிப் பிள்ளையைத் தேடிப்பிடித்து முதலாளிகளிடம் பேசிவிட்டு வெள்ளியன்று காலை மந்திரியைக் காண இருந்தேன். ஆனால் என்ன கண்டேன் வெள்ளியன்று காலை? அந்தோனிப் பிள்ளை விடியற்காலை வேலூர் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்று தான் கண்டேன். அப்போது என்ன வேதனைப்பட்டிருக்கும் என் மனது?
யான் கண்ணீர்விட்டு வளர்த்த காங்கிரஸ் எனக்கே துரோகம் செய்யத் துணிந்ததென்றால், என் மனம் எவ்வளவு பாடுபட்டிருக்கும்? சிந்தித்துப் பாருங்கள்.
கழகமும் தொழிலாளரும்
ஒதுங்கியிருந்த என்னை இத்துரோகி ஏன் அழைக்க வேண்டும் என்று ஆலோசித்தேன். ஏன் ஒதுங்கியிருக்கின்றாய்? தொழிலாளர்கட்கு மீண்டும் பணி செய் என்று இயற்கை எனக்கு எச்சரிக்கை செய்தததாகவே நான் அதை எடுத்துக் கொண்டேன். மறுபடி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டேன். போராட்டக் காலத்தில் மீண்டும் கண்டேன் காங்கிரஸ் ஸ்தாபனம் எவ்வளவு பிற்போக்கு அடைந்துவிட்டது என்று. அந்தச் சமயமெல்லாம் சிங்காரவேலர் அடிக்கடி என் மனக்கண் முன் தோன்றினார்.
அவர் கூறியவைகளைப் பற்றி நினைக்க நினைக்க திராவிட நாடு பிரிந்தாலொழிய தொழிலாளர்களின் வாழ்க்கை மலர்ச்சியடையாது என்றே எனக்குத் தோன்றியது.
அத்தொழிலாளர் போராட்டத்தின் போது பலர் என்னை விட்டுப் பிரிந்தார்கள். பலர் கலங்கினார்கள். பெரியார் கலங்கினாரில்லை வந்தார் என்னுடன், வீர உரை ஆற்றினார். அப்போராட்டம் இன்னும் முடிவடையாமல் தான் இருந்து கொண்டிருக்கிறது.
திராவிடர் கழகம் தன் அறப்புரட்சியின் மூலம் வெற்றி பெரும்போது தான் தொழிலாளர் வாழ்வும் மலரும். புரட்சியில் இரு வகையுண்டு. ஒன்று அறப்புரட்சி அதாவது அகிம்சை புரட்சி, மற்றொன்று மறப்புரட்சி. அதாவது இம்சைப் புரட்சி நமது அண்ணாத்துரை அவர்கள் குறிப்பிட்ட பிரெஞ்சுப் புரட்சியும், ரஷியப் புரட்சியும் மறப்புரட்சிகள். இம்சையின் மூலம் வெற்றி கண்ட புரட்சிகள். அவை மேல் நாட்டுப் புரட்சிகள் நம் காந்தியார் நடத்திய புரட்சியோ அகிம்சைப் புரட்சி. ஆனால் அதன் மூலம் பெற்ற சுயராஜ்யமோ இம்சை மயமாக மாறி விட்டது. சுயராஜ்யம் வந்த பிறகு சுயராஜ்ய சர்க்கார் அகிம்சாவாதிகளின் மீதே குண்டுகளை வீசி வருகிறார்கள். சாத்வீக மறியல் செய்த தொழிலாளர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்திருக்கிறார்கள். தொழிலாளர்களின் வீடுகளில் வந்து குண்டாகத் தடிகளால் அடித்து தொழிலாளர்களை பயமுறுத்தியிருக்கிறார்கள். ஆனால் லெனின் மறப்புரட்சியின் மூலமே வெற்றி பெற்றார் என்றாலும் வெற்றிக்குப் பிறகு அவர் எவ்வளவோ சாத்வீகமானவர் ஆகிவிட்டார்.
அறத்தை மறந்து அக்கிரமம்
வெற்றிக்குப் பிறகு பலாத்காரம் தலைகாட்ட அவர் அனுமதித்தாரில்லை. ஆனால் பட்டேல் துரையோ ஆட்சிக்கு வந்ததும் அறத்தை மறந்து அக்கிரமத்திற்கு இறங்கிவிட்டார். தேசியத் தொழிலாளர் சங்கம் என்றொரு சங்கத்தை நிறுவி வாழ்த்தி இதர தொழிற்சங்கங்களை நசுக்கத் தொடங்கிவிட்டார். தொழிலாளர்கள் உரிமைகள் பறிபோய்க் கொண்டிருக்க அதைப்பார்த்து களித்துக் கொண்டிருக்கிறார் முதலாளிகளுடன் குலாவிக் கொண்டு. இதுவா ஜனநாயகம்? இந்நாட்டில் காங்கிரசை வளர்க்க தோளோடு தோள் கொடுத்து சக நிலையில் நின்று பாடுபட்டவர்கள் பெரியாரும் ராஜகோபாலாச்சாரியாரும். இருந்தும் ராஜகோபாலாச்சாரியார் சென்னைக்கு நாளை வருகிறார் என்றால் இன்றே பெரியாருக்குச் சிறை வாசம் கிடைக்கிறது. என்னே ஜனநாயகத்தின் விந்தை! சுயராஜ்யத்தின் பெருமை!! இந்தி எதிர்ப்பை ஆதரித்து ஒரு கட்டுரை எழுதினாராம் யாரோ ஒரு பள்ளி ஆசிரியர். உடனே அவருக்கு வேலை போய்விட்டதாம். இந்த மாதிரி புத்திசாலி மந்திரியை யாரும் குற்றம் கூறக் கூடாதாம்! பிறர் குற்றம் கூறின் அதற்குத் தக்க சமாதானம் சொல்லவோ, அல்லது அதைத் திருத்திக் கொள்ளவோ அல்லது குற்றத்திற்காக வருந்திப் பொறுத்துக் கொள்ளவோ முடியாவிட்டால் மந்திரியாக ஏன் இருக்கின்றீர்? வெளியேறி விடுவதுதானே! கெட்அவுட்! இடத்தைக் காலி செய்வது தானே! ஜனநாயகத்திற்கே இழுக்கு வரும்படி ஏன் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கிறீர்கள்? காலி செய்துவிட்டு வேறு அறிவாளிகளுக்கு இடங்கொடுங்களேன்!
ஆரியரும் - திராவிடரும்
எவ்வளவு எடுத்துக்கூறினாலும் ஆரியரும் திராவிடரும் ஒன்றென்று பிதற்றிக் கொண்டு வருகிறீர்களே! ஆராய்ச்சி நூல் எதையேனும் படித்துப் பார்த்ததுண்டா நீங்கள்? ஆரியர் கலை வேறு, திராவிடக் கலை வேறு; ஆரியப் பண்பு வேறு, திராவிடப் பண்பு வேறு என்பதை ஜெர்மன் ஆராய்ச்சியாளர்கள் கூட ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்!
திருக்குறள் ஒன்றே போதுமே ஆரியத்தையும் திராவிடத்தையும் பிரித்துக்காட்ட திருக்குறளில் அறம், பொருள், இன்பம் இம்மூன்றைப் பற்றித்தானே எழுதியிருக்கிறது. வீட்டைப் பற்றி மோட்சத்தைப் பற்றிக் குறிப்புக் கூட காட்டவில்லையே திருவள்ளுவர்! திருவள்ளுவர் ஒன்றும் நாஸ்திகர் அல்லவே! இருந்தும் ஏன் மோட்சத்தைப் பற்றிப் பேச மறுத்தார்? திருக்குறள் திராவிடப் பண்பை விளக்கும் நூல். எனவே ஆரியப் பண்பான மோட்சத்திற்கு அதில் இடம் இருக்கக் கூடாது என்பதால் தானே!
வீட்டுக்கு எல்லைக் கட்டியவனாயிற்றே தமிழன்! அறம், பொருள், இன்பம் இவற்றினோடு தன் வாழ்க்கைக்கு எல்லையை தீர்மானித்துக் கொண்டவனாயிற்றே தமிழன்! தொல்காப்பியர் முதல், திருவள்ளுவர் ஈறாக எந்தத் தமிழனும் இவற்றைத் தாண்டி ஏதும் இருப்பதாகச் சொல்லவில்லையே! கேபிடல் என்கிற உலகம் போற்றும் பொருளாதாரத் தத்துவ நூலை எழுதிய கார்ல் மார்க்ஸ் என்பவரும் இதைத்தானே கூறியுள்ளார்! திருவள்ளுவர் கூறிய அறம், பொருள், இன்பம் இவற்றுடன் நின்ற வரை தமிழர்கள் தம் நாட்டை இழந்தாரில்லை. நாகரிகத்தில், அறிவு வளர்ச்சியில் எதிலும் குறைந்தாரில்லை.
ஆரியத்தை நம்பியதால் அழிவு
அப்புறம் ஆரியத்தின் மோட்சலோக பித்தாலாட்டத்தை ஏற்று இவ்வுலக வாழ்க்கையே வீண் என்றும் அறம், பொருள், இன்பம் இவை யாவற்றையும் துச்சமெனத் தள்ளிவிட்டு மோட்சலோகத்தை எதிர்பார்த்து நிற்பதே பேரின்பம் என்றும், கருதத் துவங்கியதிலிருந்து தானே தமிழர்கள் தாழ்ந்தனர்? தமிழகம் தாழ்ந்தது? வேதாந்தம் தமிழ்நாட்டில் வேர் விடத் தொடங்கிய பிறகு தானே தமிழன் சாகத் தொடங்கினான்? தமிழன் தன்மான உணர்ச்சியற்றுப் போகக் காரணமாயிருந்தது இவ்வுலக வாழ்வே ஒரு மாயை (இல்யூசன்) என்கிற ஆரியத்தத்துவம் தானே. ஆரியத் தத்துவத்தின் அடிப்படை இது வல்ல என்று யாராவது கூறமுடியுமா? திராவிட தத்துவம் இதற்கு மாறுபட்டது அல்ல என்றாவது இந்த மந்திரிகளால் எடுத்துக்காட்ட முடியுமா?
உலக வாழ்வு மாயை என்கிற ஆரிய தத்துவம் ஆட்சிக்கு வந்ததும் உலக வாழ்க்கையே மாய்ந்து போயிற்றே. இந்நாட்டைப் பொறுத்தவரை! உயிருள்ள ஒரு பொருளில்கூட மலர்ச்சியைக் காணமுடியவில்லையே! மனிதனே கருகிவிட்டான் என்றால் மற்றவை கருகாமலா இருக்கும்? இந்நாட்டைப் பொறுத்தவரை எல்லாம் மாயை என்ற அளவில் அன்பும் அறனும்கூட மாய்ந்து விட்டனவே ஆரிய ஆதிக்கத்தால்! அறமும் அன்பும் இன்றேல் பின் எவைதான் இருக்கும்? உலகில் எவை எவை நல்லவையோ அவையாவும் கற்பனைக் கைலாயத்திற்கே பறந்து போய்விட்டனவே. உலகம் உண்மையிலேயே பாழாகிவிட்டதே.
கழகத்துக்கு உதவுக!
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பொருளீட்டி அறம் செய்து இன்பம் துய்த்து வாழ்ந்த தமிழகம் இன்று பொருளாதாரத்தில் அந்நியனுக்கு அடிமைப்பட்டு அறம் செய்ய வக்கின்றி இன்பம் எப்படி இருக்கும் என்று தெரியாது இன்னல் வாழ்க்கை வாழ்கின்றதே! இது கண்டு திராவிடன் ஒவ்வொருவனும் இரத்தக் கண்ணீர் விடவேண்டாமா?
ஆரியமாயையை அகற்றி திராவிடத்தில் மறுபடியும் புத்துணர்ச்சியை உண்டாக்கப் பாடுபட்டு வரும் திராவிடர் கழகத்திற்கு நீங்கள் யாவரும், தன்மானத் தமிழ் மகன் ஒவ்வொருவனும், உரிமை வேட்கை கொண்ட ஒவ்வொரு தொழிலாளர் தோழனும், உதவி புரிதல் வேண்டாமா?
ஓமந்தூரார் ஆட்சி ஒழிந்தால் சுப்பராயன் ஆட்சி வரும், சுப்பராயன் ஆட்சி ஒழிந்தால் பிரகாசத்தின் ஆட்சி வரும். இவ்வாட்சிகள் மாறிக் கொண்டிருப்பதால் நமக்கென்ன பயன் கிட்டும்? நாம் வேண்டும் இன்ப வாழ்க்கை கிட்டுமா?
காங்கிரஸ் ஒழிய வேண்டும்
இன்றுள்ள காங்கிரஸ் ஆட்சி ஒழிய வேண்டும். அநேகமாக ஒழிந்து கொண்டுதான் வருகிறது. அதனால்தானே சென்னையில் நகர சபைத் தேர்தலுக்கு  காங்கிரசின் பேரால் ஆட்களை நிறுத்த காங்கிரஸ்காரர்கள் நடுங்கிப் போனார்கள். பின்னர் எல்லைக் கமிட்டியின் பேரால் நிறுத்தியும் மக்கள் ஏமாந்து போய்விடவில்லையே!
நமது விடுதலைப் பத்திரிகை மக்களின் கண்களை எவ்வளவோ திறந்து விட்டதே, திராவிடர் கழகம் நேரிடையாகவே தேர்தலில் ஈடுபட்டிருந்தால் இந்த 19 கூட சைபர் ஆகிப்போய் இருக்குமே. தேர்தல் ஆனபிறகு காங்கிரஸ்காரர்கள் நேஷனலிஸ்ட் பார்ட்டி என்று புதுக்கட்சியை ஏற்படுத்தினரே! மெயில் பத்திரிகை வெள்ளையாகவே காங்கிரஸ்காரர்கள்தான் இந்த பார்டியை உண்டாக்குகிறார்கள் என்று எழுதிவிட்டதே மற்றொரு கட்சி தோன்றியது ப்ராக்ரசிவ் கட்சி என்கிற பேரால். இப்படி மானம், ஈனம் இன்றி காங்கிரஸ்காரர்கள் பதவிக்காக புதுக்கட்சியைத் துவக்கிக் கொண்டு திரியலாமா? இந்த இரு கட்சிகளும் ஏறக்குறைய சமபலம் பொருந்தியவை. ஒன்று 33, மற்றொன்று 32 என்று நினைக்கின்றேன். இரு கட்சிகளும் ஆல்டர்மென் தேர்தலின்போது மீனாம்பாள் அம்மையாரையே ஆதரிப்பதாகக் கூறினார்கள். இருந்தும் என்ன ஆயிற்று? அந்தம்மாளை எதிர்த்து நின்ற நமது அம்மையார் இந்திராணி பாலசுப்பிரமணியம் அம்மையாருக்குத் தான் வெற்றி கிடைத்தது! அவ்வளவு கட்டுப்பாடற்ற தன்மை அவர்களிடையே! காங்கிரஸ் தன் சொந்த பேரைச் சொல்ல வெட்கப்பட்டு கொண்டு எல்லைக் கமிட்டி என்றும், நேஷனலிஸ்ட் கட்சி என்றும் கூறித் திரிந்து வருகிறதே.
சட்டசபையைக் கலையுங்கள்!
இவ்வளவுக்குப் பொதுமக்களின் நம்பிக்கையை இழந்துவிட்ட பிறகு, இந்த அளவுக்குப் பிரதிநிதித்துவம் போய்விட்ட பிறகு நாங்கள்தான் பொது ஜனப் பிரதிநிதிகள் என்று காங்கிரஸ் மந்திரிகள் கூறிக்கொண்டு பவனி வருகிறார்களானால், இவர்கள் சொல்லை ஜனங்கள் நம்புவார்களா? இவர்களோடு ஒத்துழைக்கத்தான் சம்மதிப்பார்களா?
செல்வாக்கை இழந்துவிட்டோம் என்று உணர்ந்ததும் சட்டசபையைக் கலைத்துவிடுவதன்றோ ஜனநாயக முறை.
அப்பாடா! இவர்களா கலைப்பார்கள்? சே, சே உடும்பு போல் அன்றோ இவர்கள் நாற்காலியைப் பற்றிக் கொண்டிருப்பார்கள்! பற்றிக் கொண்டிருப்பவர்களை நாம் எப்படி நீக்குவது? சிதைத்து சிதைத்துத் தள்ளித்தான் நீக்க வேண்டும்!
காங்கிரஸ் இந்நாட்டுக்கு விடுதலை வாங்கித்தர தோற்றுவிக்கப்பட்ட கட்சி. எனவே ஏதோ ஒரு அளவுக்காவது விடுதலை வந்துவிட்டதென்றால் அது மறைந்துவிட வேண்டியதுதானே! அதைவிட்டு விடுதலை வாங்கித் தந்த உரிமையின் பேரால் அது மக்களைக் கொள்ளையடிக்கத் துவங்கிவிட்டதென்றால் நாம் அதை ஒழிக்க முற்படாமல் இருக்க முடியுமா? அதற்காகத்தான் என்னால் கூடுமான மட்டும் காங்கிரசின் இவ்விபரீத போக்கை கண்டித்துப் பேசிக் கொண்டு வருகிறேன்.
காங்கிரஸ் இத்தென்னாட்டைவிட்டு திராவிட நாட்டை விட்டு முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டியதுதான்.
நாம் மற்ற தெலுங்கு, கன்னட, மலையாள பிரதேசங்களிலும் நமது கொள்கைகளைப் பிரச்சாரம் செய்ய வேண்டும். ஆங்காங்கும் இப்போது வடமொழியின் ஆதிக்கத்தை உணர்ந்து அதை ஒழிக்க  முயற்சி நடந்து வருகிறது. நாமும் சேர்ந்து பிரசாரம் செய்வோமானால் விரைவில் வட மொழிக் கலப்பு எடுபட்டு அவர்கள், தாமும் தூய தமிழர்கள் தான், திராவிடர்கள்தான் என்பதை உணர்வார்கள். அவர்கள் ரத்தமும் தமது ரத்தமும் ஒன்றுதான். அவர்களுடைய பழக்க வழக்கங்களும் ஆசாபாசங்களும் நம்முடைய பழக்க வழக்கங்களும் ஆசாபாசங்களும் ஒன்றாகத்தான் இருந்து வருகின்றன. ஆகவே நாம் நெடுநாள் பிரிந்திருக்க முடியாது. பிறர் என்னதான் சூழ்ச்சி செய்தபோதிலும், எனவேதான் நாம் சிறு எல்லையைக் குறித்துக் கொள்ளவில்லை. பரந்த உணர்ச்சிதான் நமக்கு வேண்டும். இந்த வகையில் திராவிட கழகத்தின் போக்கு மிகவும் பாராட்டுக்குறியதேயாகும்.
அன்று சொன்னேன் நிலக்கோட்டையின் எனது கடைசி மூச்சு கூட திராவிடம் வாழ்க! திராவிடர் கழகம் வாழ்க! என்பதாக இருக்கும் என்று. இன்று துணிவுடன் கூறுகிறேன் இன்னும் 10 ஆண்டுகளில் திராவிட நாடு பிரிந்து தனி அரசாகத் திகழுமென்று.
நீங்கள் மட்டும் உங்கள் முயற்சியைக் கைவிடாது இருந்து வருவீர்களானால் கண்டிப்பாகக் காணலாம் 10 ஆண்டில் திராவிடத் தனி அரசை.
இந்தி எதிர்ப்புப் போராட்டம்
திராவிடர் கழகம் இன்று தன்னகத்தே எடுத்துக் கொண்டிருக்கும் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் வெறும் மொழிப் போராட்டம் மட்டும் அல்ல. அதில் அரசியல், சமூகம், பொருளாதாரம் மற்றும் பலவும் உண்டு. நல்ல எண்ணங்கள் உண்டு. தமிழ் தூய்மை அடைய வேண்டும் என்கிற முக்கிய கருத்தும் உண்டு. இந்தி எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொண்டது பற்றி காங்கிரஸ் அன்பர்கள் ஹிந்தியை எதிர்க்குமளவுக்கு திராவிடர் கழகத்தோடு நான் ஒத்துழைப்பதாகப் பேசிக் கொண்டனர். இங்கே நான் திராவிட நாட்டுப் படத்தை திறந்து வைக்கும் அளவுக்கு அதற்கு எல்லை குறிக்குமளவுக்கு திராவிட கழகத்தோடு ஒத்துழைக்க முன்வந்துவிட்டேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனக்கு மிக பழக்கமான நண்பர் ஒருவரை சமீபத்தில் பெங்களூரிலிருந்து திரும்பி வரும்போது பார்க்க நேர்ந்தது. அவர் மற்ற விஷயங்களைப் பற்றி விசாரிக்கும் முன்பாகவே, என்னைப் பார்த்ததும் என்னங்க நீங்கள் கூடவா அந்த தாடிக்காரனோடு சேர்ந்து கொண்டு ஹிந்தி படிக்கக் கூடாது என்கிறீங்க என்று கேட்டார். நான் கூறினேன். ஹிந்தி படிக்கக் கூடாது என்று கூறவில்லையே அதைக் கட்டாயப் படுத்தக்கூடாது. அதுவும் குழந்தைகளுக்கு கண்டிப்பாகக் கட்டாயப்படுத்தக்கூடாது என்றுதானே சொல்லியிருக்கிறேன் என்றேன். அப்படியா சங்கதி என்று விழுங்கினார். தெரியவே இல்லை அவருக்கு நாம் ஹிந்தியை எந்த அளவுக்கு வேண்டாம் என்கிறோம் என்று.
பத்திரிகை உலகம்
விடுதலை ஒன்றுதான் உண்மையை வெளியிட்டு வருகிறதே ஒழிய மற்ற பத்திரிகைகள் யாவும் ஒரேயடியாக கட்டுப்பாட்டோடு இவ்வுண்மையை இருட்டடிப்பு செய்ய முற்பட்டு விட்டன. ஹிந்தி எதிர்ப்பு மாநாட்டில் நான் பேசிய பேச்சு மற்ற பத்திரிகைகளில் வருமாக்கும் என பத்திரிகையைப் புரட்டிப் பார்க்கிறேன். ஒன்றில்கூட சரியானபடி வெளியிடப்படவில்லை. சென்ற 3 ஆண்டுகள் எங்காவது நான் மூச்சுவிட்டால் 3 காலம் வெளியிட்டு வந்த பத்திரிகைகள் இன்று நான் திராவிடர் கழகத்திற்கு ஆதரவு தர ஆரம்பித்தது முதல் 3 வரிகூட வெளியிடக் கஷ்டப்படுகின்றன. ஒரு பத்திரிகைக்கூட ஒழுங்குற சேதிகளைப் பிரசுரிப்பதில்லை.
என்றாலும் நாம் விடாது முயற்சித்து வருவோமானால் இந்த ஹிந்துவும், சுதேசமித்திரனும் யாவும் நம் சொந்தப் பத்திரிகைகளாகிவிடும்.
நமக்குத்தான் வெற்றி கிடைக்கும் என்றால் எல்லாவற்றையும் மறந்துவிட்டு நம்மைப் போற்றத் துவங்கிவிடுவார்கள். அவ்வளவு புத்திசாலிகள் அவர்கள். முதலில் ஆனமட்டும் நம்மை நசுக்கப் பார்ப்பார்கள். அடக்கப் பார்ப்பார்கள். நமது முயற்சிக்கும் பாதகம் விளைவிக்க எல்லா வழிகளாலும் முயற்சிப்பார்கள். தம் முயற்சியில் வெற்றி கிடைக்காது என்று கண்டார்களோ. உடனே தாமும் திராவிடர்கள் தான். பஞ்சத் திராவிடம் என்று ஸ்மிருதியில் கூறியிருப்பது தங்களையும் சேர்த்துத்தான் என்று கூறிக் கொண்டு நம்முடன் சேர்ந்து கொண்டு விடுவார்கள்.
அந்த நிலைக்கு அவர்கள் வருமுன் நாம் பல மேடு பள்ளங்களைக் கடக்க வேண்டியிருக்கும். பெரிய பெரிய மலைகளைத் தாண்டிச் செல்ல வேண்டியிருக்கும். கடல்களை சமுத்திரங்களை தாண்டிச் செல்ல வேண்டியிருக்கும். எரிமலைகளைத் தாண்ட வேண்டியிருக்கும் என்றாலும் எத்தகைய ஆபத்தையும் எதிர்த்துப் போராடி முன்னேறிக் கொண்டு போக வேண்டியது தான்.
கஷ்டமான போராட்டம்தான்!
இனப் போராட்டம் என்பது, சமுகப் போராட்டம் என்பது, அதிலும் ஆரியத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்துவதென்பது மிகக் கஷ்டமான வேலை தான். ஏன்?
ஆரியர்கள் மனிதர்கள் அல்லர். ஒரு நாகரிகமற்ற மனிதத் தன்மையற்ற காட்டுமிராண்டிகள்.
எனவே வாய்மையும், தூய்மையும் நிறைந்துள்ள திராவிடர்கள் அத்தகைய காட்டுமிராண்டிகளுடன் போராட்டம் நடத்துவது கஷ்டம்தான். என் செய்வது? போராட்டம் நடத்தித்தான் ஆகவேண்டும் திராவிட சமுதாயம் மீண்டும் தம் இன்ப வாழ்க்கையை எய்தவேண்டுமானால். இப்படிப் பேசப்பேச எங்கெங்கோ போய்க் கொண்டே இருக்கும். சிலர் திராவிட நாடு வந்துவிட்டால் எல்லோரும் நாஸ்திகர்களாக ஆகிவிட வேண்டியிருக்குமா என்று கேட்கிறார்கள். இல்லை. இல்லை. எல்லா மதமும் எல்லா வகையாலும் பிரசாரம் செய்து கொள்ள உரிமை இருக்கும். ஆனால் ஒன்றுக்கொன்று முட்டிக் கொள்ள அனுமதிக்கப்படமாட்டாது. எந்த ஒரு மதத்தையும் யார்மீதும் கட்டாயப்படுத்தவும் அனுமதிக் கிடைக்காது. அரசாங்கம் மட்டும் மதச் சார்பற்றதாக இருக்கும். எந்த மதத்திற்கும் எந்த சலுகையும் இருக்காது. மதத்தின் பேரால் காசு கரியாக்கப்படவும் முடியாது. மக்களின் உரிமைக்காகப் பாடுபடும் எல்லாக் கட்சிகளும் இருக்க உரிமை இருக்கும்.
பாடுபடும் பாட்டாளி மக்களின் நலன் முதலில் கவனிக்கப்படும். மனிதனுக்கு மனிதன், ஆணுக்குப் பெண், எவ்வித வேற்றுமையும் இல்லாமல் நடத்தப்படுவார்கள்.
வளர்ச்சி என்பது இயற்கையே!
உலகில் தோன்றியுள்ள அனைத்தும் வளர்ந்து கொண்டுதான் இருக்கும். சமுதாயம் வளரும். சூரியன் வளர்கிறது. மலைகளும் வளர்கின்றன. மனிதனும் வளரத்தான் செய்கிறான். புழுக்கூட வளர்ச்சியடைந்து கொண்டு தான் இருக்கும். வளர்ச்சி ஒரு அளவுக்கு முற்றுப் பெற்றதும் அவ்வளர்ச்சியை வேறு வழியில் திருப்ப இயற்கையாகவே ஏதாயிலும் மாறுதல் ஏற்படும். அம்மாறுதலின்போது கிடைக்கும் புதுசக்தியைக் கொண்டுதான் பழைமையும் மாறுதல் பெற்று வளரத் தொடங்கும். மனிதனும் இப்படி வளரக் கடமைப்பட்டவன் தான். ஒவ்வொருத்தரும் தத்தமக்குத் தோன்றியபடி உலக முன்னேற்றத்தையே,  சமூக முன்னேற்றத்தையே குறிக்கோளாகக் கொண்டு தம் கடமையைச் செய்து வருவார்களானால் இயற்கை வளர்ச்சியும் அவர்களுக்குத் துணை செய்யும். மக்களுக்கு அவரவர்களுடைய கடமையை உணர்த்த மாறுதலைக்காட்டி அவர்தம் முயற்சியை வேறு பக்கம் திருப்பி சமுதாய முன்னேற்றத்திற்கு வழியமைத்துக் கொடுக்க அவ்வப்போது பெரியார்கள் இயற்கையாகவே தோன்றிக் கொண்டிருப்பார்கள்.
கண் மூடிப்பழக்கமெல்லாம் மண்மூடிப்போக என்று கூறி ஒரு ராமலிங்கனார் - தோன்றியது மாறுதலைக் காட்டி மக்கள் முயற்சியை வேறு பக்கம் திருப்பத்தான்.
பெரியார் பெரும் பணி
திராவிட மக்களுக்கு நல்வழிகாட்ட, அவர்கள் தம் அடிமை வாழ்க்கையை மாற்றி இன்ப வாழ்வு அமைத்துக் கொடுக்க இயற்கை தோற்றுவித்த பெரியார்தான் நமது ஈரோட்டுப் பெரியார் ஆவார்.
இயற்கையின் அருமைப் புதல்வர் இவர். ஆதலால்தான் காந்தியையும் மிஞ்சிய அளவுக்கு அகிம்சாவாதியாகவும், சாக்ரடீசையும் மிஞ்சிய அளவுக்கு சமுதாய சீர்திருத்தக்காரராகவும் பெரியார் விளங்குகிறார்.
இவர்தம் முயற்சியால் தமிழர்கள் விழித்துக் கொண்டார்கள். தமிழ் ஆசிரியர்களும் விழித்துக் கொண்டுள்ளார்கள். இனி மாணவனும் ஹிந்தி கற்கமாட்டான். ஆசிரியர்களும் ஹிந்தியை சொல்லிக் கொடுக்கவோ, அதை மாணவர்களின்மீது வற்புறுத்தவோ ஒப்பார்கள்.
ஹிந்தி ஒரு போதும் இந்நாட்டின் பொது மொழியாக வராது. வரவும் முடியாது.
வங்காளிகள் ஹிந்தியை ஒருபோதும் ஒப்பார்கள். மராத்தியரும் ஒப்பார்கள். குஜராத்தியாரும் நாளாக ஆக ஒப்புக் கொள்ள மறுப்பர். மேலும் இயற்கை மொழியுமல்ல அது. இயற்கை மொழியல்ல என்பதோடு அது முற்றிலும் இயற்கைக்கு முரண்பட்ட மொழியாகவும் காணப்படுகிறது.
மந்திரிகள் கொஞ்சம் பொது நோக்குடன் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஏன் போராட்டம் நடைபெற வேண்டும் தடியடிக்குள்ளாக்க வேண்டும் தாய் மொழி காக்க முன்வந்தோரை. நேற்று வரை தவறாக நடந்திருக்கலாம். இருந்தாலும், அதை மறந்துவிட முடியும். போராட்டம் துவங்குமானால் அது சீக்கிரம் நிற்க போவதில்லை. வெற்றி பெறும்வரை நடைபெற்றே தீரும் என்பதை மந்திரியார் உறுதியாக நம்பலாம். எனவே எப்போதாயினும் உத்தரவை மாற்றியே ஆகவேண்டி வரும். எனவே பலரை சிறையிலடைத்தோ, தடியலாடித்தோ துன்புறுத்துமுன் அவ்வுத்தரவை முதன் மந்திரியாரேனும் மாற்றி விடுவது சாலச் சிறந்தது.
மந்திரிகள் வெளியேறட்டும்!
அப்படி மாற்றும் அளவுக்கு நமக்கு உரிமையில்லையானால் அவ்வளவு கேவலமான அடிமையாக ஆட்சி நடத்துவதைவிட அப்பதவியை வீசி எறிந்துவிட்டு வெளியேறி வரவேண்டியதுதான். ஓமந்தூராருக்கு இவ்வளவு துணிவு பிறக்கும் என்றே நினைக்கின்றேன்.
தோழர்களே! ஓமந்தூரார் மிகவும் நல்லவர். பதவி மோகம் சிறிதும் இல்லாதவர். எனக்கு உற்ற நண்பர். பெரியாரின் உற்ற சீடர். எதையும் துணிவுடன் செய்யக்கூடிய வீரர்.
அவினாசியாரும் நல்லவர்தான் என்றாலும் அவர் கல்வி இலாக்காவுக்கு தலைமை வகிக்க லாயக்கற்றவர். ஆசிரமங்களுக்கே தலைவராக இருக்க தகுதி பெற்றவர்.
ஹிந்தியை புகுத்தியதிலிருந்து அவருடைய மனமே கெட்டுக்கொண்டு வருகிறது. கோபத்தாலும், குறுகிய புத்தியாலும் அவருடைய கருவிழிகளே மாறிக்கொண்டு வருகின்றன. என்ன செய்வதென்றே புரியாமல் திணறிக் கொண்டிருக்கிறார். இயற்கையாயுள்ள தமது பிடிவாதத்திற்கு தம்மை ஆளாக்கிக் கொண்டு தம் புலன்களையே கெடுத்துக் கொண்டு வருகிறார்.
வேண்டாம் அன்பர் அவினாசியாரே! இந்த வீணான பிடிவாதம். தன்மானத் தமிழனாக வாழ முயற்சி செய். வடநாட்டானின் காலை வருடிக் கொண்டு இனியும் திராவிட நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்க முடியும் என்று நினையாதே.
காலை வருடிப் பிழைப்பதென்பது எப்போதுமே இழுக்கு என்பதை உணருக. சுயாட்சி என்பது ஒவ்வொருவருடையதுமான பிறப்புரிமையாகும். திராவிடர்களுக்கும் சுயாட்சி கேட்க உரிமையுண்டு. அதையாரும் மறுக்க முடியாது. திராவிடர் யாரும் அதைக் கேட்கவும் வெட்கப்பட வேண்டியதில்லை. என்னுடைய ஆயுட்காலம் பூராவும் சுயாட்சிக்காகவே தான் உழைத்து வருகிறேன்.
நான் ஒரு பரம ஏழைதான் என்கிறபோதிலும் ஒரு போதும் என்னுடைய உரிமை உணர்ச்சியை யாருக்காகவும் விட்டுக் கொடுத்தேனில்லை. என் உணர்ச்சியை யாருக்கும் எதற்காகவும் அடிமைப்படுத்தினேன் இல்லை. திராவிடன் ஒவ்வொருவனுக்கும் இவ்வுணர்ச்சி இருத்தல் அவசியம்.
ஹிந்தியும் தமிழ் மொழியும் தம் இயல்பில் பெரிதும் மாறுபட்டவை. ஒன்று சேர்ந்து வாழ முடியாதவை. எனவே ஹிந்தியைப் புகுத்தி தமிழைக் கொலை செய்ய நினையாதே.
இன்னும் ஒரு வாரம் தவணை இருக்கிறது. அதற்குள் உத்தரவை மாற்றலாம். எனவே மாற்றிவிடு. மானத்தோடு வாழ மனம் இருந்தால். இன்றேல் திராவிடத் தாய்மார்களும், தோழர்களும் நிச்சயம் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வெற்றி பெறுவார்கள்.
திராவிடர் கழகத்தார் தேர்தலுக்கு நிற்க வேண்டும்
இன்று திராவிட இயக்கத்தின் உள்ளக்கிடக்கை, உட்கருத்து, பெருநோக்கு நன்கு எடுத்துச் சொல்லப்பட்டது. இங்கு வந்துள்ள எல்லோரும் திராவிட மக்கள், எல்லோரும், இவ்வுள்ளக்கிடக்கை வெற்றி பெற திராவிட இயக்கத்தினரோடு ஒத்துழைக்க கடமைப்பட்டுள்ளார்கள். திராவிட இயக்கத்தவரும் தமது பிரச்சாரத்தை மேலும் பலப்படுத்த வேண்டும். தேர்தல் வரும்போது, அது அடுத்த ஆண்டு வருகிறதோ அல்லது இன்னும் இரண்டு ஆண்டுகள், மூன்று ஆண்டுகள் கழித்து வருகிறதோ, எப்போதுவரினும் திராவிட இயக்கத்தவர்கள் தேர்தலில் ஈடுபட்டு சட்டசபையை நிரப்பிக் கொள்ள வேண்டும். சட்டசபையை நிரப்பிக் கொண்டால் திராவிட நாட்டுப் பிரிவினை தானாக கிடைத்துவிடும். ஒரே உத்தரவின் மூலம் பிரிந்து கொண்டு விடமுடியும்.
வடநாட்டவர் எச்சரிக்கையாகவே இருப்பார்கள். இருந்தாலும் மக்களின் உரிமை வேட்கை முன் அவர்கள் தான் என்ன செய்ய முடியும் ஒரு பட்டேல் தான் என்ன சாதித்து விடுவார்?
வரவர ஒவ்வொரு மாகாணமும் சுய ஆட்சி கோரத்தான் செய்யும். மத்திய சர்க்கார் புத்திலிசாலித்தனமாக மாகாணங்களோடு நட்பு முறையில் சம்பந்தம் வைத்து கொள்ள முற்பட்டால் தான் ஒன்று பட்டு இருக்க முடியுமே ஒழிய பட்டாளத்தை வைத்துக் கொண்டு பலாத்காரத்தால் மாகாணங்களை தம்முடன் பிணைத்து வைத்துக் கொண்டிருக்க முயற்சிப்பது முடியாத காரியமாகவே ஆகிவிடும். மத்திய சர்க்கார் அவ்வளவு புத்திசாலிகளாக நடந்து கொள்வார்கள் என்று தோன்றவில்லை.
எனவே, தென்னாட்டவர்களுக்கு திராவிடர்களுக்குள்ள ஒரே வழி சட்ட சபையைக் கைப்பற்றி மத்திய சர்க்காருடன் உள்ள தொடர்பை அறுத்துக் கொள்வதுதான். அதற்கு வழி கோலிக் கொடுப்பது தான் இம்மொழிப் போராட்டமும் ஆகும்.
வாழ்ந்தால் உரிமையோடு வாழ்வோம்; இன்றேல் போராடிச் சாவோம் என்று இளைஞர்கள் இன்று முழக்கம் செய்வார்கள். ஆம் இளைஞர்களின் உள்ளக் கிடங்கை அதுவாகத்தானிருக்க வேண்டும். இத்தகைய வீர இளைஞர்களைப் பெற்றெடுக்கவே தாய்மார்கள் விருப்பம் கொள்ள வேண்டும். இம்மாநாட்டுக்கு பெண்மக்கள் இவ்வளவு பெரும்கூட்டமாக வந்துள்ளீர்கள்.
பெண்கள் கடமை
இதுவரை நான் இவ்வளவு பெரிய பெண்கள் கூட்டத்தைப் பார்த்தறியேன்!
எனவே உங்களைக் காணும்போது நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். வளம் பொருந்திய உங்கள் தாய் நாடு உரிமையோடு இயங்க வேண்டுமானால் நீங்கள் ஆளுந்திறனுடைய மக்களை போரிட்டு வெற்றி காணும் திறனுடைய மக்களை, ஈன்றிடல் வேண்டும். பிஸ்மார்க்கின் கொள்கையைப் பின்பற்றி நீங்கள் அல்லும், பகலும், கனவிலும், நினைவிலும் இதே நினைப்புடன் இருக்க வேண்டும். அந்நினைப்பே வீர இளைஞர்களைப் பெற்றெடுக்க உங்களுக்கு உதவியாயிருக்கும்.
குழந்தைகளை பயங்காட்டி வளர்க்காதீர்கள். அவர்களை அச்சத்தில் வளர விடாதீர்கள். சன்மார்க்க சங்கத்தில் நான் ஈடுபட்டிருந்த காலத்தில் என்னால் பாடப்பட்ட பாட்டைக்கூட இப்போது திருத்திக் கொள்ள வேண்டுமென்று நான் ஆசைப்படுகிறேன். பெண்களெல்லாம் சன்மார்க்க பிள்ளைகளைப் பெற்றெடுக்க வேண்டும் என்று அப்போது பாடினேன். இப்போது பெண்களெல்லாம் வீரம் நிறைந்த பிள்ளைகளைப் பெற்றெடுக்க வேண்டும் என்கிற கருத்தில் அதை மாற்றியமைக்க இப்போது எண்ணுகிறேன்.
திராவிட நாட்டை மாற்றியமைக்கும் சக்தி திராவிட பெண்களிடத்துதான் இருக்கிறது. அவர்கள் மனது வைத்தால் இந்நாட்டில் ஒரு காந்தியல்ல 1000 காந்திகளை, ஒரு பெரியாரை அல்ல லட்சக்கணக்கான பெரியார்களை உண்டாக்க முடியும்.
தலைவர்கள் சிறைப்பட்டால்!
இங்கு கூடியுள்ள யாவரும் பெரியாரும் அண்ணாதுரையும் சிறைபிடிக்கப்பட்டால் அவர்களைப் பின்பற்றி சிறை செல்ல உறுதி செய்து கொள்ள வேண்டும். வங்காளப் பெண்கள் சுரேந்திரநாத் பானர்ஜியின் வேண்டுகோளுக்கிணங்க விடுதலை கிடைக்கும் வரையில் வளையல் அணிவதில்லை என்று நோன்பெடுத்துக் கொண்டு விடுதலைப் போரில் வீரத்தோடு பங்கு கொண்டது போல் நீங்களும் ஏதாயினும் ஒரு நோன்பு எடுத்துக் கொள்ள வேண்டும்.
நாங்கள் கலந்துகொண்டிருந்த காங்கிரஸ் 1947 ஆகஸ்ட் 15லேயே செத்துவிட்டது. அதற்கு செய்ய வேண்டிய கிரியைகள் எல்லாம்கூட செய்யப்பட்டாகி விட்டது.
எனவே திராவிடம் உயர வேண்டுமானால், உங்கள் வாழ்க்கை வளம்பட வேண்டுமானால் நீங்கள் திராவிடர் கழகத்தைத்தான் பின்பற்றி நடக்க வேண்டுமே ஒழிய, வடக்கு திக்கை எதிர்பார்த்தால் கைலாயத்திற்குத் தான் வழி காட்டப்படும். எனவே காங்கிரஸ் திராவிடத் தோழர்களும் திராவிடர் கழகத்தின் கோட்பாடுகளை நட்பால் அலசிப் பார்த்து, தம் பகுத்தறிவால் சிந்தித்துப் பார்த்து, உண்மையுணர்ந்து திருத்தம் அடைவார்களாக.
படத்தைத் திறந்தேன், திறப்பேன்!
இந்த அளவுக்கு நான் திராவிட நாட்டுப் படத்தை திறந்தவனாக உங்கள் முன் நிற்கின்றேன். படம் காணப்படவில்லையே என்று நீங்கள் கேட்கலாம். படம் இங்கு காணப்படவில்லைதான். என்னுடைய கனவில் காணப்பட்ட திராவிட நாட்டுப்படத்தை உங்கள் கனவிலும் திறந்து வைத்துள்ளேன். இனி அக்கனவை நினைவாக்குவது தான் உங்கள் வேலை. நீங்கள் உங்கள் தியாகத்தின் மூலம் அத்திராவிட நாட்டை நினைவுக்கு கொண்டு வந்து அப்போது என்னை அப்படத்தைத் திறந்து வைக்குமாறு அழைக்க வேண்டுமென்று நான் ஆசைப்படுகிறேன். திராவிட நாட்டு பிரிவினை முயற்சியும், தமிழ் காக்கும் ஹிந்தி எதிர்ப்பு முயற்சியும் வெற்றி பெரும்வண்ணம் சென்னை மாகாண மக்கள் யாவரும் ஒன்றுபட்டு திராவிடர் கழகத்துடன் ஒத்துழைப்பார்களாக.
கெட்டதிலிருந்து நல்லது பிறப்பது போல் அவினாசியாரின் ஹிந்தி நுழைப்பு, ஆரியம் இந்நாட்டைவிட்டு அகல காரணமாய் இருக்கட்டும்.
திராவிடர்கள் யாவரும் பெரியாருக்கு எப்போதும்  நன்றியறிதல் உடையவர்களாக இருக்கட்டும். நாமும் நமது நன்றியறிதலைக் காட்டிக் கொள்ளுமுகத்தான் பெரியார் வாழ்க! என்றும், அவர் தம் முயற்சி வெல்க என்றும் வாழ்த்து கூறுவோம்.
(பெரியார் என்று திரு.வி.க. சொல்லவும் மக்கள் வாழ்க என்று முழங்கினர்.
அவர்தம் முயற்சி என்று திரு.வி.க. சொல்லவும் வெல்க என்று மக்கள் முழங்கினர்.)
விடுதலை - 29.10.1948

சனி, 10 மார்ச், 2012

அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையாரின் 92 ஆம் ஆண்டு பிறந்த நாள்


   
                     பிற சமயமும்    இந்து சமயமும்                                                                                                -அன்னை மணியம்மையார்                                                          
           இன்றைய தினம் உலகத்திலுள்ள 200 கோடி  ஜனங்களுக்கு முக்கியமாய் நான்கைந்து மதங்களே பெரும் மதங்களாயிருக்கின்றன. அவற்றுள் சுமாராக கிறிஸ்து மதத்திற்கு 60 கோடியும், பவுத்த மதத்திற்கு அதன் உள்பிரிவுகளையும் சேர்த்து 60 கோடியும், இஸ்லாம் மதத்திற்கு 40 கோடியும், இந்து மதத்திற்கு 20 கோடியும், நாஸ்திகர்களுக்கு 20 கோடியும் இருக்கின்றதனாலும் இந்து மதம் தவிர, மற்ற மதங்களில் எல்லாம் வேறு மதங்களிலிருந்து வருகின்றவர்களையெல்லாம் தங்கள் மதங்களில் சேர்த்துக் கொள்வதும், நாளுக்கு நாள் தங்கள் மதங்களை விருத்தி செய்வதும், தங்கள் தங்கள் மதங்களில் உள்ள மக்கள் எல்லோரையும் சமமாகக் கருதி ஒற்றுமைப்படச் செய்வதுமான முயற்சியில் எல்லோருக்கும் சமமான கல்வியும், வாழ்க்கையில் சரி சுதந்திரமும் அளிக்கப்பட்டிருக்கின்றன.
             ஆனால், இந்து மதம் என்பதில் மாத்திரம் மனிதனை மனிதன் பிரித்துக் காட்டி கீழ் - மேல், உயர்வு - தாழ்வு நிலையை உண்டாக்கி வேறு மதத்திலிருந்து வரும் எவனையும் சேர்க்காமலடித்து - இந்து மதத்திலிருந்து அநேகரை வேறு மதத்திற்குப் போகும்படி நிர்ப்பந்தப்படுத்தி ஜன சமூகம் வருஷத்திற்கு வருஷம் குறைந்துக் கொண்டே வருகிறது.
           மதக் கொள்கையைப் பற்றிப் பேசும்போது மாத்திரம் இந்து மதம், அன்பு மதம், சமத்துவ மதம், சமரச சன்மார்க்க மதம் என்று சொல்வது; நடக்கும்போது மாத்திரம் சமரசமில்லை, சன்மார்க்கமில்லை, அன்பு இல்லை, இரக்கமில்லை என்பதும்; மற்றும் மற்ற மதங்களில் இல்லாத தத்துவங்கள், வேதாந்த சாரங்கள், ஞானங்கள் இந்து மதத்தில் இருக்கின்றன என்று பெருமை பேசிக் கொண்டு ஆத்மாவே கடவுள் என்றும், ஒரே ஆத்மா உலகிலெல்லாம் பிரகாசிக்கின்றதென்றும், எல்லா உடல்களிலிருக்கும் ஆத்மா ஒன்றே என்றும், அதற்குப் பற்றில்லை என்றும், அதற்குச் சாவு இல்லை, பிறப்பு இல்லை என்றும், ஆத்மா, கடவுள், தோற்றம் ஆகிய மூன்றும் ஒன்றை ஒன்று பிரியாத தன்மையுடையதென்றும், இன்னும் ஏதேதோ பித்துக்கொள்ளிபோல் பேசி பெருமையடைந்து கொண்டு வாழ்க்கையில் அவை ஒன்றுக்கொன்று சிறிதும் சம்பந்தமில்லாமல் நடந்து, மனித சமூகத்திற்குப் பல கொடுமைகளை இழைத்துக் கொண்டு வருவதாயிருக்கின்றது.
              மற்ற சமயக்காரர்களெல்லாம் தாங்கள் செய்யும் தருமங்களையும், புரியும் கர்மங்களையும் இந்த உலகத்திலிருக்கும் மக்களுக்கு, இந்த உலகத்திலேயே நன்மை உண்டாகும்படியும் அதனுடைய பலனை இந்த உலகத்திலேயே அடைவதாகவும் சொல்லி, கஷ்டப்படுகின்ற ஜீவன் யாராயிருந்தாலும், தேவைப்படுகின்ற ஜீவன் யாராயிருந்தாலும் அவர்களுக்கெல்லாம் தங்களால் ஆனதை வித்தியாசமில்லாமல் தங்கள் மத மக்களுக்கும், நாட்டு மக்களுக்கும் பயன்படும்படியாக உதவி வருகின்றார்கள். மீதியுள்ளதை நாட்டின் முன்னேற்றத்திற்கும் உதவி, பெரிய பெரிய நன்மைகளைச் செய்து வருகிறார்கள்.
            ஆனால், இந்து மதக்காரர்களோ, தாங்கள் செய்வது மக்களுக்கு - இந்த உலகத்திற்குப் பயன்படுகின்றதா என்பதைவிட, மேல் உலகத்திலுள்ளவர்கள் திருப்தியடைவார்களா? சந்தோஷ மடைவார்களா? நமக்கு வேண்டியதை அவர்கள் கொடுப்பார்களா? நாம் இந்த லோகத்தை விட்டுப்போன பிறகு மேல் லோகத்தில் நமக்கு நன்மை கிடைக்குமா? இந்த ஜென்மம் போன பிறகு அடுத்த ஜென்மத்தில் நமக்குப் பெருமையும், மேன்மையும் கிடைக்குமா? என்கிற கவலையிலேயே செய்வதுடன், கஷ்டப்படுபவனையும், தேவைப் படுபவனையும் லட்சியம் செய்யாமல் யாருக்குக் கொடுத்தால் மேல் லோகத்தில் பலனுண்டு என்கிற கவலையினால் சுயநல எண்ணங்கொண்டு எவனெவனுக்குக் கொடுத்தால் அதிகமான பலன் மேல் லோகத்தில் கிடைக்குமென்றும், கடவுள் தனக்கே கொடுக்கும்படிச் சொன்னார் என்றும் பித்தலாட்டமாய் அறிவுக்கும், அனுபவத்திற்கும் பொருந்தாததாய் எழுதி வைத்திருக் கின்றார்களோ, அவற்றை எல்லாம் நம்பி அந்தப்படியே செய்கின்றார்கள்.
            மற்ற மதக்காரர்கள் எல்லோரும் தங்கள் மதக்காரர்கள் நன்மைக்கும், மற்ற மதக்காரர்கள் நன்மைக்கும் என்று பள்ளிக்கூடம் கட்டி ஏராளமான பொருள் செலவு செய்து உபாத்தியாயர்களை வைத்து, படிப்பு சொல்லிக் கொடுக்கின்றார்கள். இந்துமதக்காரர்கள் கோவில் கட்டி ஏராளமான பொருள் செலவு செய்து பார்ப்பனர்களையும், தாசிகளையும் வைத்து உற்சவங்கள் செய்கின்றார்கள். படிப்பைப் பற்றிய கவலையே இல்லாமலிருக்கின்றார்கள்.
மற்ற மதக்காரர்கள் மக்களின் நோய்களைச் சவுக்கியம் செய்ய ஆஸ்பத்திரிகள் கட்டி வைத்தியம் செய்கின்றார்கள். இந்து மதக்காரர்கள் நோய் வந்தாலும், காசில்லாமல் வேறொருவன் செய்யும் வைத்தியத்தைக் கூட செய்து கொள்ளாமல் அந்த நோய்க்கும் கடவுளை நம்பிக் கடவுளுக்கும் சில்லறை தேவதைகளுக்கும் வேண்டிக் கொள்வதன் மூலமும் கோவில்களுக்குப் போய் படுத்துக் கொள்வதன் மூலமும் காசையும், நேரத்தையும் செலவு செய்து காயலாவைப் பலப்படுத்திக் கொள்கிறார்கள்.
            மற்ற மதக்காரர்கள் பெண்களுக்குப் படிப்புக் கொடுத்து அறிவு உண்டாக்கி வாழ்க்கையில் புருஷர்களுக்கு குடும்பக் கஷ்டமில்லாமல் இருக்கும்படியாக பயன் பெறச் செய்கின்றார்கள்.  இந்து மதக்காரர்கள் படிப்புக் கொடுக்காமல் போவதோடல்லாமல் ஏறக்குறைய 100-க்கு 50 பெண்களுக்கு பிசாசு பிடிக்கச் செய்து பேயோட்டுகின்றார்கள்.
            கடைசியாக, கடவுள் விஷயத்திலும் 60 கோடி கிறிஸ்தவருக்கு ஒரே கடவுளாகவும், 60 கோடி புத்தர்களுக்கு ஒரு கடவுள் கூட இல்லாததாகவும், 40 கோடி முகம்மதியர் களுக்கும் ஒரே கடவுளாகவும், அதுவும் உருவம், பால் இல்லாததாகவும் இருக்கும்போது இந்துக்களுக்கு மாத்திரம் 20 கோடிப் பேருக்கு, 33 கோடி கடவுள்களும், அவைகளுக்குக் கண்ணு, மூக்கு, கைகால்கள் அதுவும் ஒவ்வொன்றுக்கும் ஆயிரக்கணக்கான கண்கள், இரண்டாயிரக்கணக் கான கைகள், பதினாயிரக்கணக்கான பெண்ஜாதி, பதினாயிரக்கணக் கான தாசி வேசி வைப்பாட்டிகள், பிள்ளை குட்டி, மாமன், மாமி, மைத்துனன், மாமனார், மருமகன், மருமகள், பேரன், பேத்தி, கொள்ளுப் பேத்தி முதலிய பத்து வர்க்கங்களுடன் இருக்கின்றன.
         இவை மாத்திரமல்லாமல், மற்ற மதக் கடவுள்களுக்கு பூசையோ, சாப்பாடோ, ஸ்நானமோ, வேஷ்டி துணியோ, கல்யாணமோ, கருமாதியோ, கல்லெடுப்போ இல்லாமல் இருப்பதும், இந்து மதக் கடவுள்களுக்கு மாத்திரம் தினம் ஒரு வேளை, மூன்று வேளை பூசையும், ஸ்நானமும், அபிஷேகமும், ஒவ்வொரு சாமிக்கும் பூசை நாள் 1-க்கு 1 படி, 2 படி, 100 படி, 10 மூட்டை, 20 மூட்டை, 50 மூட்டை அரிசி வீதம் சமைத்து வைத்து ஆராதனை செய்வதும், மற்றும் பலப் பல நைவேத்தியங்கள் செய்வதும், கணக்கில்லாமல் துணிகள் கட்டுவதும், நகைகள் போடுவதுமான செலவுகள் செய்து வருகிறார்கள்.
மதத் தலைவர் அல்லது தெய்வீகத் தன்மை பொருந்தியவர்கள் என்பவர்களிலும், மற்ற மதக்காரருக்கு ஒவ்வொருவரே உண்டு. அதாவது கிறிஸ்து சமயத்திற்கு கிறிஸ்து நாதரும், இஸ்லாம் சமயத்திற்கு முகமது நபியும், பவுத்த சமயத்திற்கு புத்தரும் இப்படி ஒவ்வொருவரே உண்டு. ஆனால், இந்து சமயத்திற்கு முதலில் யார் என்று கண்டுபிடிப்பது கஷ்டமாகும். அப்படிக் கண்டுபிடித்து விட்டால் பிறகு அவர்களைப் போல் நூற்றுக்கணக்காக, ஆயிரக்கணக்காக, லட்சக்கணக்காக அவதாரம், தேவர்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், ரிஷிகள், முனிவர்கள் முதலாகிய தெய்வ அவதாரமும் தெய்வ அம்சமும் பொருந்தியவர்கள் கணக்கு வழக்கில் அடங்காத அளவு ஆகிவிடும்.
சமய ஆதாரங்கள் விஷயத்தில் மற்ற சமயக்காரர்களுக்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆதாரமே உண்டு. அதாவது கிறிஸ்துவருக்கு பைபிள், இஸ்லாமானவருக்கு குர்ஆன், பவுத்தருக்கு திரிபீடகம் என்பவையாகும்.               ஆனால், இந்து சமயக்காரருக்கு 4 வேதம், 6 சாஸ்திரம், 18 புராணம். இவை தவிர, அவர் சொன்னது, இவர் சொன்னது, உதாரணமாக, மனு சொன்னது, பராசரர் சொன்னது, ரிஷிகள் சொன்னது, போதாயனர் சொன்னது, பகவான் சொன்னது, மாடு, குரங்கு, கழுகு, கிளி சொன்னது என்பவை போன்ற கணக்கு வழக்குக்கடங்காத அநேகம் உண்டு.
             இந்தவிதமான ஆதாரங்களைப் பார்க்கும் உரிமை விஷயத்திலோ, மற்ற சமயக்காரர்களில் யாரும் அச்சமய ஆதாரம் எதையும் கேட்க - பார்க்க - படிக்க - மனத்தில் இறுத்த - உரிமையுண்டு. ஆனால், இந்து சமயக்காரருக்கோ அச்சமய ஆதாரத்தை நூற்றுக்கு மூன்று பேர் அதிலும் பெண்களை நீக்கிவிட்டால், 100-க்கு ஒன்றரைப் பேர் மாத்திரமே படிக்க - கேட்க - பார்க்க உரிமையுடையவர் களாவார்கள். பாக்கி தொண்ணூத்தெட்டரைப் பேர்கள் அவைகளைப் பார்த்தோ, கேட்டோ, படித்தோ விட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி  ஊற்றுவதும், கண்ணைக் குத்துவதும், நாக்கை அறுப்பதும் முதலாகிய பலவகைத் தண்டனைகள் படிப்படியாயுண்டு.
    இப்படியிருக்க, இதுபோலவே இன்னும் அநேக விஷயங்களில் இந்து மதம் வித்தியாசத்தை வைத்துக் கொண்டு அவற்றை நிலைநிறுத்த முயற்சிகளும் செய்து கொண்டு, இதன் பயனாகவே தேசத்தை அன்னிய நாட்டு ஆதிக்கத்திற்கும், நன்மைக்கும் விட்டுக் கொண்டு தேசத்தில் உள்ள மக்களை நாயினுங்கடையாக, கேவலமாய் நடத்தி இழிமக்களாக்கி அடிமைப்படுத்திக் கொண்டிருப்பதை மறந்து அநேகரை உப்புக்கு சிறைக்குப் போகச் சொல்கின்றது.
       எனவே, பிற சமயத்திற்கும் நம் (இந்து) சமயத்திற்கும் உள்ள தாரதம்மியத்தையும், அதனால் ஏற்பட்ட பலனையும் எனக்குத் தோன்றிய வகையில் ஒருவாறு எடுத்துச் சொன்னேன். இனி உங்களுக்குப் பட்டபடி முடிவு செய்து நடந்து கொள்ளுங்கள்.
                                                                                                                          -குடிஅரசு - (9.12.1944)